Thursday, July 29, 2010

மொழிப் பிரச்சினை

இந்த வலைப்பதிவில் தமிழில் எழுதுவது relaxing ஆக இருக்கிறது. சில சமயம் ஆங்கிலத்தில் எழுதுவது ஒரு பணி போலத் தோன்றும்.உணர்ச்சிபூர்வமான விஷயங்களை எழுதும்போது சில சமயம் சரியான வார்த்தை கிடைக்காது அப்படி கிடைத்தாலும் மொத்த உணர்வையும் சரியாக வெளிப்படுத்துவதாகத் தோன்றாது. அதென்னமோ 'those idiots' என்றுசொல்வதை விட 'அந்த அறிவு கெட்ட ஜென்மங்கள்' என்று சொல்லும்போது கோபம் இன்னும் சரியாக வெளிப்படுகிறது இல்லையா? ஆங்கில வார்த்தை ஆனாலும் பேசும்போது அழுத்திச் சொல்லி ஒரு சொல்லின் வீரியத்தை அதிகரிக்கலாம். ஆனால் எழுதும்போது அது கொஞ்சம் சாதுவாகி விடுகிறது. அதே போலத்தான் "I was enraged" என்பதை விட 'கொதிச்சுப் போயிட்டேன்" என்பதில் சரியாக உணர்வு வெளிப்படுவது போல இருக்கிறது. ஒரு வேளை என்னுடைய emotional self develop ஆகும் வயதில் நான் தமிழ் சூழலில் வளர்ந்ததினால் இருக்கலாமோ என்னவோ. அதே போல் யோசிக்கும் திறன் வளர்ந்த பருவத்தில் ஆங்கிலமே அதிகமாய் கேட்டும் படித்தும் இருந்ததினால் இன்றும் அறிவு பூர்வமான விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்வது எளிதாக இருக்கிறது.

ஒரு நாள் நான் என் தோழிகளுடன் படம் பார்ப்பதற்கு ஒரு mall க்கு சென்றிருந்தேன். அங்கே வந்திருந்த காலேஜ் கூட்டம் எல்லாம் ஆங்கிலத்தில்தான் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது என் தோழி சொன்னாள் 'இன்றைய நகர்புற இளைஞர்களுக்கு அவரவர் தாய் மொழியே தெரிவதில்லை. தெரிந்தாலும் அவர்கள் அதை பேசுவதை இழிவாக நினைக்கிறார்கள்", இன்னொரு தோழி சொன்னாள் " ஐயே இதெல்லாம் சும்மா வெளிவேஷம். எதிர்பாராமல் கன்னத்தில் ஒரு அறை விட்டுப் பார் "ஐயோ அப்பா என்றுதான் கத்தும்"
அப்போது பார்த்து ஒரு பெண் ஏதோ தடுக்கி கீழே விழப்போனது. ஆனால் அதன் வாயிலிருந்து "ஐயோ, அம்மா' என்றெல்லாம் வரவில்லை. 'ouch' என்றுதான் சொல்லிற்று. உடனே நான் என் தோழியைக் கேட்டேன் "இப்போது என்ன சொல்கிறாய்?" என்று. அதற்கு அவள் சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது. அவள் சொன்னாள்: " பார். இவர்களெல்லாம் மேலை நாகரீகத்தில் மூழ்கிப் போய் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தும் திறனைக் கூட இழந்து விட்டார்கள். எல்லாவற்றிலும் ஒரு செயற்கைப் பூச்சு இருக்கிறது. இதனால்தான்
இவர்கள் நிஜமான உணர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் வரும் கணங்களில் உடைந்து போய் விடுகிறார்கள். அப்புறம் மனவியல் மருத்துவர்களைத் தேடிப் போகிறார்கள்" என்று.

இது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு இன்னும் புரியவில்லை. ஆனால் கலாச்சார பூர்வமாக நம்முடைய உணர்வுகளை முழுமையாக ஒரு அந்நிய மொழியில் வெளிப்படுத்த முடியுமா என்பது எனக்கு ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. நாம் சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்படுபவர்கள். எல்லாவற்றிலும் ஒரு தீவிரம் - தீக்குளிக்கும் அளவிற்கும் போகத் தயங்காதவர்கள். ஆங்கிலேயர்கள் உணர்சிகளை மிகவும் மிதமாக வெளிப்படுத்தும் தங்களது 'stiff upper lip' பற்றி பெருமை கொள்பவர்கள். அப்படிப்பட்டவர்களின் மொழியில் நமது ஆழ்ந்த உணர்வுகளை வெளிப்படுத்த முடியுமா என்பதுதான் எனது சந்தேகம். இன்னொரு கோணத்திலிருந்து யோசித்தால் 'எந்த நாடானால் என்ன. கடைசியில் எல்லோரும் மனிதர்கள். எந்த ஊரானாலும், எந்தக் கலாசாரம் ஆனாலும் உணர்வுகள் என்பவை மனிதர்கள் எல்லோருக்கும் பொதுவானவைதானே. ஆழ்ந்த உணர்சிகளை வெளிப்படுத்த எந்த மொழியிலும் வகை இருக்கத்தானே செய்யும்" என்று.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Sunday, July 25, 2010

இங்கு ஏமாறப்படும்

சில பேரைப் பற்றி சொல்வார்கள் :" அவள் சரியான ஏமாளி என்று அவள் முகத்திலேயே எழுதி ஒட்டி ஒருக்கிறது " என்று. அந்த மாதிரி ஏதோ ஒரு மெசேஜ் என் முகத்தில் இருக்கிறது போல் இருக்கிறது. நாங்கள் கூட்டமாய் நாலு பேர் போனாலும் இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் எல்லோரும் என்னிடம்தான் வருவார்கள். ஏதானும் ஒரு கதை சொல்லிஎன் மனத்தைக் கரைப்பார்கள்.
சில நாட்கள் முன்பு என் மருமகளை ஏதோ ஒரு கடையின் முன்னால்இறக்கிவிட்டு அவள் வரும்வரை காரில் காத்துக்கொண்டிருந்தேன். இரண்டு பெண்மணிகள் ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமியோடு என் அருகே வந்து ஹிந்தியில் பேசத்தொடங்கினார்கள். அவர்கள் மும்பையிலிருந்து திருப்பதி போவதற்காக ரயிலில் வரும்போது அவர்கள் பெட்டி 7000 ரூ பணம் எல்லாம் திருட்டு போய் விட்டதாம். இப்போது ஊருக்குப் போவதற்கு பணம் கொடுத்தால் மும்பை சென்றதும் அனுப்பி விடுவார்களாம். ஒரு வேளை என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றால் குழந்தைகள் பசியோடு இருக்கிறார்கள், அவர்களுக்காவது நீங்களே ஏதானும் வாங்கிக் கொடுத்து விடுங்கள் என்றார்கள்.
என்னுடைய மிகப் பெரிய weakness குழந்தைகள். அதுவும் அவர்கள் பசியோடு இருக்கிறார்கள் என்றால் எனக்குத் தாங்காது. இது எப்படித்தான் அவர்களுக்குத் தெரிந்ததோ. எனக்கு மண்டைக் குடைச்சல் ஆரம்பித்து விட்டது. கையில் 200 ரூ இருந்தது. கொடுத்து விடலாமா என்று யோசித்தேன். ஒரு வேளை ஏமாற்றுப் பேர்வழிகளாக இருந்தால் என்று தோன்றியது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து 100 ரூபாயை கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். என்ன இன்றைய விலைவாசியில் ஏதானும் டிபன் வாங்கி சாப்பிட்டிருப்பார்கள் அவ்வளவுதானே.
ஏமாந்தால் பரவாயில்லை. வாய் வாழ்த்தா விட்டாலும் வயிறு வாழ்த்தும் என்று சமாதானமும் சொல்லிக் கொண்டேன். வீட்டில் வந்து சொன்னதும் எல்லோரும் ஒரு மொத்தமாக என்னை ஏமாளி என்று சொல்லி விட்டார்கள். "அவர்கள் திருப்பதி போக வேண்டும் என்றால் பெங்களூருக்கு என் வந்தார்கள்? ரயிலில் எல்லாம் தொலைத்து விட்டு இங்கே நம் வீட்டருகே என்ன செய்து கொண்டிருந்தார்கள்? போலீசில் புகார் செய்தார்களாமா? என்றெல்லாம் வேறே என்னை குறுக்கு விசாரணை செய்து என்னை குற்றவாளி போல் ஆக்கி விட்டார்கள்.
இதில் கஷ்டம் என்னவென்றால் கொடுக்காமல் வந்திருந்தால் என் மனசாட்சி என்னைக் குடைந்து எடுத்திருக்கும். பாவம் சாப்பாட்டுக்குத்தானே கேட்கிறார்கள். எத்தனை அனாவசிய செலவு செய்கிறோம். சில சமயம் கோவில் உண்டியலில் 100 ரூ போடுவதில்லையா. ஒருவரின் பசியை தீர்ப்பது ஆண்டவனுக்கு செய்யும் சேவை போல்தானே என்றெல்லாம் நினைத்து நொந்து நூலாகிப் போயிருப்பேன்.

சில வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் ஒரு இளம்பெண் ரோட்டோரத்தில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள். கூட 10/ 12 வயதில் ஒரு சிறுவன். அந்தத் தெருவில் அவ்வளவாக நடமாட்டம் இருக்கவில்லை. நான் எங்கோ போய் விட்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்தேன். அந்தப் பையன் ஓடி வந்து தன தாய்க்கு அடிக்கடி இது போல் நெஞ்சில் வலி வரும் என்றும் ஆஸ்பத்ரிக்கு அழைத்துப் போக வேண்டும் ஏதானும் உதவி செய்ய முடியுமா என்று கேட்டான். நான் உடனே 200 ரூ எடுத்துக் கொடுத்து ஆட்டோ வைத்துக் கொண்டு போகுமாறு கூறிவிட்டு வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினேன். கொஞ்ச தூரம் போனதும்தான் எனக்குத் தோன்றியது "சே நம்மிடமே கார் இருக்கிறது. நாமே கொண்டு விட்டிருக்கலாமே. ஏன் இது கூடத் தோன்றவில்லை. பாவம் அந்த சின்னப் பையன் எப்படி அழைத்துப் போவான். வழியில் அவன் தாய்க்கு ஏதானும் ஆகி விட்டால் என்ன செய்வது?" இப்படி எல்லாம் யோசித்துக் கொண்டு காரைத் திருப்பிக்கொண்டு அதே இடத்துக்கு திரும்ப வந்தேன். இருவரையும் காணவில்லை. கொஞ்ச தூரத்தில் பார்த்தால் எதிர் சாரியில் இருவரும் ஒன்றுமே நடக்காதது போல நடந்து போய்க் கொண்டிருந்தனர். அவளிடம் உடல் நலவுக் குறைவிற்கான ஒரு அடையாளமும் தென்படவில்லை.
எங்கே போய் முட்டிக்கொள்வது?

இது போன்ற விஷயத்தில் ஒரு முடிவுக்கு வருவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. பரம்பரை நடிகர்களா அல்லது அவர்களது வறுமை அல்லது கட்டாயம் அவர்களை அப்படி நடிக்க வைக்கிறதா என்று தெரியவில்லை, ஆஸ்கார் லெவெலில் நடிப்பார்கள். கண்ணீர் அனாயாசமாக வரும், வசனம் நெஞ்சைத் தொடும். அந்த சமயத்தில் எனக்கு அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்க எனக்குத் தோன்றாது. என்ன மிஞ்சிப் போனால் சாப்பாட்டுக்காகத்தானே இவ்வளவு நடிக்கிறார்கள். போகட்டும் என்று என் மன ஆறுதலுக்கு விலையாக கையில் இருப்பதில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விட்டுஎன் வழியில் வந்து விடுவேன்.

என்னுடைய நண்பர்கள் பலரும் இதற்காக என்னைக் கிண்டல் செய்வதுண்டு. ஒருவர் சொல்வார்: "உஷாவுக்கு யாரானும் கையில் மிளகாயை வைத்துக் கொண்டு இருந்தாலே பிடிக்காது. உடனே சொல்வாள் ஐயோ, ஏன் மிளகாயை கையில் வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறீர்கள். இதோ என் தலை இருக்கிறதே. அதில் அரைத்துக் கொள்ளுங்கள் என்பாள். அதான் எல்லோரும் அவள் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள்" என்பார்.
இன்னொருவர் சொல்வார் "ஆமாம் அதே போல்தான் அவளுக்கு செக் புஸ்தகம் வெறுமே இருந்தாலும் பிடிக்காது. கை எழுத்துப் போட்டு யாருக்கானும் கொடுக்க வேண்டும் என்று துறு துறுக்கும்" என்று. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். ஆனாலும் இந்த கிண்டல் எல்லாம் பொறுக்காமல் இப்போதெல்லாம் நான் ஏமாறும் கதைகளை யாருக்கும் சொல்வதில்லை.

ஆனாலும் என் முகத்தில் எழுதி ஒட்டி இருப்பதாக அவர்கள் சொல்வது சரிதானோ என்று எனக்கே சந்தேகம் வரும்படி நேற்று ஒரு சம்பவம் நடந்தது. பெங்களூர் சென்ட்ரலில் ஏதோ வாங்கிக் கொண்டு வண்டியை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. 'வேண்டாம். வண்டி இருக்கிறது' என்றேன். உடனே அந்த டிரைவர் சிரித்துக் கொண்டே (கன்னடத்தில்தான்) 'என்ன மேடம் மறந்து விட்டீர்களா, என்னைத் தெரியவில்லையா?' என்றார். எனக்கோ வர வரக் காலையில் சாப்பிட்ட சிற்றுண்டியே மறந்து போய் விடுகிறது. பலரது பெயர் மறந்து விடுகிறது. அதனால் ஒரு அசட்டுச் சிரிப்போடு 'இல்லை நினைவு வரவில்லை. நீங்களே சொல்லி விடுங்கள்" என்றேன். "நன்றாக யோசித்துப் பாருங்கள்' என்றார். அப்புறம் மெதுவாக "பாங்குக்கு வருவீர்களே. மறந்து போய் விட்டதா?" என்றார். நான் 'ஓஹோ பாங்கில் வேலை பார்த்தீர்களா " என்றேன். தான் பாங்கில் காஷியர் ஆக இருந்ததாகவும், சக்கரை நோய் அதிகமாகி காலை வெட்டும் அளவுக்குப் போய் விட்டதாகவும், பின்னர் voluntary retirement எடுத்துக் கொண்டு இப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். முட்டி வரைக்குமே இருந்த காலையும் காட்டினார். அவ்வளவுதான் நெகிழ்ந்து போய் விட்டேன். அழாத குறைதான். உடனே அவர் அடுத்த ஆயுதத்தை எடுத்தார். குழந்தை இல்லை என்று வெகு நாள் வேண்டி மனைவி கர்ப்பமானதாகவும், ஆனால் முழு கர்ப்பமாக இருக்கும்போது கார் விபத்தில் இறந்து போய் விட்டதாகவும் சொன்னார். பின்னர் தாய் தந்தையைப் பார்த்துக் கொண்டு இருந்தாராம். தந்தை போன வருடம் கான்சரில் இறந்து போய் விட்டாராம். அவருக்கு 6 லட்சம் வரை செலவு செய்து வைத்யம் பார்த்தாராம். அதிலிருந்து மீண்டு வரும்போது தாய்க்கு ஏதோ பெரிய ஆபரேஷன் செய்ய வேண்டி வேலூரில் சேர்த்திருக்கிறாராம். திங்கள்கிழமை ஆபரேஷன் அதற்கு ஏதானும் உதவி செய்யுங்கள் என்று முடித்தார்.
இந்த மாதிரி யாரானும் உங்களிடம் வந்து சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

நான் என்ன செய்தேன் என்கிறீர்களா? என்ன செய்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?

Monday, July 19, 2010

அழகின் நிறம்

சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் ஒரு தூரத்து உறவினர் தனது மகளை அறிமுகம் செய்து வைத்தார். அந்த பெண்ணைப் பார்த்ததுமே எனக்குப் பிடித்துப் போயிற்று. எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் விதம், குழந்தை போன்ற அவளது முகம், புத்திசாலித்தனமான பேச்சு, இவை அனைத்துக்கும் மேலாக அவளது un-self-conscious behaviour (இதை தமிழில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை) சிலர் பழகும் விதத்தைப் பார்த்ததுமே தெரியும் - அவர்கள் பிறரைக் கவர்வதற்காக, அவர்கள் தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காக அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று. இன்னும் சிலருக்கு தான் நன்றாக் இருக்கிறோம் என்பது தெரியும் அதை பிறரும் உணர்கிறார்களா என்று கவனித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களது ஒரொரு அசைவும் கணக்கு போட்ட மாதிரி இருக்கும். எதிலும் ஒரு spontaneity இருக்காது. இது பல பிரபலங்களுக்கும் முக்கியமாக மாடல் அழகிகளுக்கும் பொருந்தும். நான் பார்த்த அந்த பெண்ணிடம் இது போன்ற எந்த விதமான குண லக்ஷணங்களும் இருக்கவில்லை. அதுதான் என்னைக் கவர்ந்தது.
ஆனால் கூட இருந்த என் தங்கை உடனே சொன்னாள்: "யாரவது கொஞ்சம் வெளுப்பாய் இருந்தால் போதுமே உடனே அவர்களை அழகு என்றுவிடுவாய்."
இதற்கு ஒரு பின்னணி உண்டு. என் தங்கை பால் வெளுப்பு. நானோ 'மாநிறம்' என்று பூசி மெழுகப்படும் கருப்பு. சின்ன வயதில் பல முறை என் காது படவே
இந்த வேற்றுமை அடிக்கோடிட்டு பேசப்பட்டதுண்டு. உதாரணமாக இரண்டு பாவடைத் துணிகள் வாங்கி வந்து காண்பிக்கும்போது பாட்டி சொல்லுவாள்: "இந்த நீலம் சின்னவளுக்குப் பொருந்தும். பெரியவளின் நிறத்துக்கு கொஞ்சம் முகத்தில் அடிக்கிறார்போல இருக்கும். அவளுக்கு கொஞ்சம் லைட் கலர் ஆக எடுக்க வேண்டும்." அவர்கள் இதை யதார்த்தமாகவே சொல்லி இருக்கலாம். ஆனால் ஏழு எட்டு வயதில் என்னுடைய கலர் என்னமோ ஒரு வியாதி போல எனக்குத் தோன்றும். இல்லை என்றால் 'பெரியவள் கொஞ்சம் நேரம் கம்மி. சின்னவள் நல்ல கலர்' என்பார்கள்.
அந்த நாளில் குழந்தை மனோதத்துவம் , சரியான பேச்சு என்றெல்லாம் யாரும் மிகவும் கவலைப் பட்டதில்லை. பள்ளிக்கூடத்தில் ராஜகுமாரி வேடம் என்றால் சிவந்த தோலுடைய பெண்ணைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். நாங்களெல்லாம் சாமரம் வீசும் தோழி, அல்லது ஏதானும் நகைச்சுவை வேடத்துக்குதான் பொருந்துவோம். கதைப் புத்தகங்களிலும் தேவதைகள், பெண் கடவுள்கள், ராஜகுமாரிகள் எல்லாம் சிவப்பாகத்தான் இருப்பார்கள். ராட்சஷிகள், துர்தேவதைகள் , கெட்ட மந்திரவாதிகள் இவர்கள் எல்லாம்தான் கருப்பாகவும் பார்க்க அசிங்கமாகவும் இருப்பார்கள். வெளித்தோற்றம் உள்மனதை பிரதிபலிக்க வேண்டும் என்ற symbolism இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் கருப்பையும் அசிங்கத்தையும் கூட சேர்த்து வைத்ததுதான் தப்பு.

பெண் பார்த்து விட்டு வருவார்கள். 'பொண்ணு நல்ல செவப்பு' - இதை சொல்வதிலேயே ஒரு பிரமிப்பு இருக்கும். 'பொண்ணு மாநிறம்தான்" - இதை சொல்லும்போது குரல் தாழ்ந்து இருக்கும். இது ஒரு disqualification என்பது போல. "பொண்ணு கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாள்" என்பார்கள். இருந்தாலும் - அந்த வார்த்தையை தெளிவாக கவனிக்குமாறு கனம் கோர்ட்டார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடைய தோழி ஒருத்தி தந்தக் கலரில் இருப்பாள். அவளுடைய அக்கா மாநிறத்துக்கும் கீழே. இருவருக்கும் ஒரே வயதுதான் வித்யாசம். அக்காவைப் பெண் பார்க்க வரும்போதெல்லாம் அவளுடைய தாய் என் தோழியை யார் வீட்டுக்காவது அனுப்பிவிடுவாள். யாராவது இவளைப் பார்த்து விட்டு இவளை கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று விடப் போகிறார்களே என்று. இது அக்கா தங்கை இருவரது மனோ நிலையையும் எப்படி பாதித்திருக்கும் என்று நீங்களே புரிந்து கொள்ளலாம்.

பெண்களை வர்ணிக்கும் சினிமா பாடல்களும் ஒன்றும் குறைவில்லை:
கண் பார்வை தெரியாதவன் வர்ணிக்கும் பாடலில் கூட பெண்ணின் முகம் 'பொன்முகம்"என்றுதான் வர்ணிக்கப்படும். அல்லது நிலவுக்கு ஒப்பிடுவார்கள் - "முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி"
இல்லை என்றால் 'நிலவு ஒரு பெண்ணாகி நீந்துகின்ற அழகோ"!
இன்னும் ரொம்ப அழகு என்றால் ஓவர் ஆக போய்
"செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தில் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த பெண்
உடலை என்னவென்பேன்" என்பார்கள்.

இன்னொரு பாட்டில் கவிஞர் தெளிவாகவே சொல்வார் :
"அடி ஒம்போல செவப்பு இல்லை கணுக்கால் கூட கருப்பு இல்லை"

மொத்தத்தில் அழகான பெண் என்ற உடனேயே இந்தக் கவிஞர்களுக்கு நினைவு வருவதெல்லாம் நிலவு, சந்தனம், பொன், தாமரை, சிகப்பு, வெளுப்பு இவைதான். கருப்பான ஒரு பெண் எப்படி எல்லாம் வெறுக்கப்படுகிறாள் என்பது பற்றி ஒரு படமே எடுத்திருக்கிறார்கள். அதில் அந்தப் பெண் பாடுவாள்:
"மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா"
அறியாத புரியாத வயதிலிருந்தே இப்படி ஒரு கருத்து திணிக்கப்பட்டு விட்டால் நம்மை அறியாமல் சில அபிப்ராயங்கள் உருவாகிவிடுகின்றன. அவற்றை அழிப்பதோ அல்லது அவற்றால் பாதிக்கப் படாமல் இருப்பதோ அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. என்னுடைய மனத்திலும் எனக்கே தெரியாமல் இப்படி ஒரு காம்ப்ளெக்ஸ் வளர்ந்திருக்கலாம். ஆனால் ஓரளவு முதிர்ச்சி வந்த பிறகு என் கலரை பற்றி எல்லாம் நான் அவ்வளவாக கவலைப்படுவதில்லை.

"கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு" என்று ஏதோ ஒரு பாட்டில் எழுதினால் பலரும் கை தட்டினாலும் அவர்கள் திரையில் பார்க்க விரும்புவது வட இந்தியாவில் இருந்து இறக்குமதியான வெளுப்பான heroine களைத்தானே?
இதில் வேடிக்கையான விஷயம் என்ன வென்றால் தென்னிந்தியாவில் பொதுவான உடல் வண்ணம் மாநிறம்தான். இதனால்தானோ என்னமோ அபூர்வமான வெளுப்புத் தோலுக்கு இத்தனை மதிப்பு. சருமத்தை வெளுப்பாக்குவதாக சொல்லப்படும் கிரீம் தென்னிந்தியாவில்தான் அதிகமாக விற்பனை ஆகிறதாம். இதன் உற்பத்தியாளர்கள் இதைப் பற்றி விளம்பரம் செய்வதே - சிகப்பழகைப் பெறுவதற்குத் தேவையான அழகு சாதனம் என்று. அழகுக்கு சிகப்பாக இருந்தால் மட்டுமே போதும் என்பது மறைமுகமான குறிப்பு போலும்.
இப்போது இத்தோடு ஒரு புதுக் கொடுமை வேறே சேர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் சிறியவர்களாக இருந்த போது ஆண்கள் கலரைப் பற்றி அவ்வளவு கவலைப்பட மாட்டார்கள். இப்போது என்னவென்றால் அவர்களுக்கும் இந்த குழப்பம் வந்து விட்டது அல்லது உருவாக்கி விட்டார்கள். தன்னம்பிக்கை உருவாகவேண்டும் என்றால் இந்த சருமத்தை வெளுப்பாக்கும் கிரீம் உபயோகிக்க வேண்டுமாம்.
ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை நம்புகிறவள்தான் நான் - ஆனால் இந்த மாதிரி குழப்பங்களில் கூட இந்த சமத்துவம் தேவையா?

இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இந்த' கருப்புக்கென்ன குறைச்சல்" அணியினர் கலாட்டா வேறே - வெளுப்பாக இருக்கிற பெண் நிஜமாகவே அழகாக இருந்தாலும் அதை சொன்னால் போராட்டமே நடத்துவார்கள் போல. வர வர வாயையே தொறக்க முடியலை - எதைச் சொன்னாலும் யாராவது ஒருத்தர் சண்டைக்கு வருகிறார்கள்.

கவிதை, சினிமா, சமுதாயத்தின் எண்ண ஓட்டம் - இது போன்ற பல்வேறு விதமான தாக்கங்களினால் சருமத்தின் வண்ணம் குறித்த இந்தப் பாகுபாடு நம் சமுதாயத்தின் ஆழ்மனதில் பதிந்து போய் விட்டதா? கருப்பு, வெளுப்பு இரண்டையும் மீறி அழகைப் பார்பதற்கு பார்ப்பதற்கு இனிமேல் வழியே இல்லையா?

Friday, July 9, 2010

எங்க மண்ணுக்கே ஒரு வாசம்

தமிழ் வருடப்பிறப்பன்று என்று நினைக்கிறேன் - ஒ அதுதான் இப்போதெல்லாம் சித்திரைத் திருநாள் ஆகிவிட்டதே - அமாம் அன்றுதான், விஜய் டிவி யில் தமிழகத்தின் வட்டார வழக்குகளைப் பற்றி ஒரு அருமையான விவாதம் நடந்தது.
பல்வேறு வட்டாரங்களின் வசவுச் சொற்கள், சொற்ப்பிரயோகங்கள், இச்சொற்களின் மூலம் வெளிப்படும் வாழ்க்கைமுறைகள் என்றெல்லாம் மிக சுவாரஸ்யமான முறையில் கோபிநாத் இந்த கருத்தரங்கை நடத்தினார். சில மொழி ஆராய்ச்சி நிபுணர்களும், எழுத்தாளர்களும் கூட நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துக்களை சொன்னார்கள். தஞ்சை மாவட்டத்தைப் பற்றி இவர்கள் எல்லோருமே ஒப்புக்கொண்டது என்னவென்றால் தஞ்சை மண்ணுக்கு வட்டார வழக்கு என்பது கிடையாது. அது பல்வேறு அரசர்களின் நேர்பார்வையில் இருந்த வட்டாரமானதால் அங்கு பெரும்பாலும் எழுதப்படும் தமிழே அதாவது வரி
வடிவமான தமிழே உபயோகப்படுத்தப்பட்டது அதனால் தஞ்சையில் வட்டாரச் சொற்கள் மிகவும் குறைவு என்று அவர்கள் கூறினர்.
இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால் எங்கள் வீட்டில் பேசப்படும் தமிழைக் கேட்பவர் எவரும் சில நொடிகளில் கேட்டு விடுவார்கள்:
"நீங்க தஞ்சாவூரா?" என்று.
இத்தனைக்கும் நாங்கள் ஒன்றும் செந்தமிழில் பேசுவதில்லை. என்ன, மதுரை, கோயம்பத்தூர் தமிழ் போல எங்கள் பேச்சில் ஒரு ராகம் இருக்காது. நிதானமாக அவசரமே இல்லாமல் பேசுவோம். பிரபஞ்சன் சரியாக சொன்னார் அந்தக் கருத்தரங்கில்: " நிதானமாக வெத்திலையில் சுண்ணாம்பு தடவிக்கொண்டு பேசுவதுபோல் இருக்குமாமா தஞ்சாவூர் பேச்சு.

பிரத்தியேகமான சொற்ப்ரயோகங்கள் என்று பார்த்தால்
நொரநாட்டியம், திருவாழத்தான், சதிராடறது, காண்டுக்கோல், கட்டுவாய், சாணிச்சுருணை, ஓக்காளித்தல், ஈஷிக்கறது, தீர்த்தமாடறது, தம்பிடி, லங்கிணி, தாஜா பண்றது, திலாவறது, முடை,ஜாகை, சவுக்கம், இளப்பம், வெளக்குமாத்துக் கட்டை, மென்னி, பாஷாங்கராகம், பீத்தல், சுருக்க
இது போன்ற சில பிரயோகங்கள் எங்களூர்காரர்களிடம் மட்டுமே கேட்டிருக்கிறேன்.
(Ed: முதலில் ராங்கி, சோப்ளாங்கி, பொம்மனாட்டி, கிராதகன், அவ்வளூண்டு, இவ்வளூண்டு, கொல்லைப்பக்கம் போன்ற வார்த்தைகளையும் சேர்த்திருந்தேன். ஆனால் குறும்புக்காரி மற்றும் என்னுடைய தங்கையார் இந்த லிஸ்ட்டை மறுக்கிறார்கள். அவர்கள் கட்சி என்னவென்றால் இவை எல்லாம் தமிழ் பிராமணர்களிடையே சகஜமாக உபயோகமாகும் வார்த்தைகள். தஞ்சை மண்ணுக்கே சொந்தமானவை அல்ல என்பதாகும். இந்த லிஸ்டுக்கு ஆதாரமே கிடையாது. இது என்னுடைய அபிப்ராயம் மட்டும்தான்.)


இவற்றுக்கெல்லாம் மேலாக தஞ்சாவூர்காரர்கள் பேச்சில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அவர்கள் பேச்சினிடையே சர்வசாதாரணமாக
அடிபடும் பழமொழிகளும், வஜனங்களும். நேரிடையாக ஒரு விஷயத்தை சொல்வதை விட மறைமுகமாக இந்த வசனங்களின் மூலம் உணர்த்துவதில் மிகத் திறமைசாலிகள். சில சமயம் இவை நக்கல் செய்வதற்காகவும் உபயோகிக்கப்படும்.
உதாரணமாக இன்னொருவருடைய பொருளை தாராளமாக உபயோகிப்பவர்களைப் பற்றி கூறுவதற்கு:
ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே
என்பார்கள்.
ஒருத்தி வழக்கத்துக்கும் அதிகமாக கோபத்தைக் காட்டினால்
ஏற்கனவே துர்க்குணி அதிலும் கர்ப்பிணி
என்பார்கள்.
மற்ற வட்டாரத்தவர்களும் இதுபோலபேசுவார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் இப்படிப் பேசுவதை கேட்டு என் நண்பர்கள் எல்லாம் வியந்து போவார்கள்.
சம்பந்தமே இல்லாதவரிடம் உறவு கொண்டாடுவதைச் சொல்ல இது போல் சொல்வார்கள்:
வாச்சானுக்கு போச்சான் மதனிக்கு உடப்பிறந்தான்
என்பது போல உறவு என்று.
இதையே இன்னொரு விதமாக இன்னும் நீட்டி முழக்கி சொல்வார்கள்:
பூவாளூர் சந்தையிலே உங்கள் மாமா கூடையும் எங்கள் சித்தப்பா கூடையும் இடித்துக் கொண்டு இருந்தன
என்பது போல உறவு என்று. அவர்கள் இவ்வளவு விஸ்தாரமாக சொல்வதிலேயே தெரியும் எத்தனை தூரத்து உறவு என்று.

இன்னும் சில உபமானங்கள்:


விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டினாப்ல

யானைக்கு கோமணம் கட்டின மாதிரி

ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி

நெருப்பைக் குளிப்பட்டினாப்போலே

கடைஞ்ச மோர்லே வெண்ணை எடுக்கற மனுஷன்

தாம்பும் அரதல் தோண்டியும் பொத்தல்

சீலை இல்லேன்னு சின்னாயி வீட்டுக்குப் போனாளாம் அவள் ஈச்சம்பாயைக்
கட்டிண்டு எதுத்தாப்போலே வந்தாளாம்

அடியே ங்கரத்துக்கு ஆம்படையானைக் காணுமாம்
புள்ளைக்கு பேர் வெச்சாச்சு
சந்தான கோபால கிருஷ்ணன்னு

இப்படிப் பல. இவைகளுக்கு என்ன அர்த்தம் என்று புரிகிறதல்லவா? பாருங்கள் எவ்வளவு நக்கல், கிண்டல், ஹாஸ்யம், அதே சமயத்தில் சொல்லவந்தது எவ்வளவு தெளிவாக சொல்லப்படுகிறது. எதையும் பூசி மெழுகும் வழக்கம் கிடையாது 'தேங்காயையும் கல்லையும் எதிர் எதிரே போட்டு உடைப்பது போல' ஒரு பேச்சு. 'Political incorrectness" என்றால் தஞ்சாவூர்தான்.
தி ஜானகிராமன் அவர்களது கதைகளைப் படிக்கும்போதே ஏதோ எங்கள் உறவினர்கள் உரையாடுவதைப் போலத் தோன்றும்.

சில வஜனகளுக்குப் பின்னே ஒரு கதையே இருக்கும்
உதாரணமாக ஒருவர் முதலில் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டுப் போன பொருளை பின்னால் வந்து கேட்டால்
சொவத்துக் கீரைய வழிச்சுப் போடடி சொரணை கேட்ட வெள்ளாட்டி
என்பது போல வந்தான் என்பார்கள்

இதன் பின்னே உள்ள கதை என்னவென்றால் வயலில் வேலை செய்து விட்டு வேளாளன் மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்தானாம். வாரம் முழுவதும் மனைவி கீரையும் சோறுமே வைத்துக்கொண்டிருந்தாளாம். மறுபடியும் அன்று கீரையும் சோறும் பார்த்துக்கோபமாகி அந்த கீரைச் சட்டியை சுவற்றில் விசிறி அடிக்கப் போக கீரை எல்லாம் சுவற்றில் அப்பி கொண்டதாம். பின்னர் இரவுச் சாப்பாட்டின் போது வெறும் சோறு மட்டும்தான் இருந்தது. அப்போது வேளாளன் சொன்னானாம்:
'சுவத்துக் கீரைய வழிச்சுப் போடடி ' என்று. அவள் ஏதானும் கிண்டலாக சொல்லி விட்டால் என்ன செய்வது? அதற்காக அவனே முந்திக் கொண்டு அவளை
'சொரணை கெட்ட வெள்ளாட்டி' என்றானாம். எப்படிக் கதை?

இது போல் பல கதைகள் சொல்வார்கள். சில கதைகள் மற்றவட்டாரங்களுக்கும் பொதுவானாலும் இவர்கள் சொல்லும் விதமே தனி. இதோ ஒரு உதாரணம்:
மருமகள் குளத்துக்குத் தண்ணி எடுக்க போய் தாமதமாகத் திரும்பினாளாம். மாமியார் கேட்டாளாம்:
"மேனா மினுக்கியரே என் மூத்த மகன் தேவியரே
தண்ணி எடுக்க போன இடத்தில் தாமசங்கள் ஏனடியோ"
என்று.

மருமகள் உடனே அழுது கொண்டே போய் கணவனிடம் சொன்னாளாம்:
"சொமமழகரே துப்பட்டிக்காரரே
உங்கம்மா என்னை உருக உருக சொன்னா "
என்று

அவன் போய் தாயாரைக் கேட்டானாம்:
"கடுகாய் சிறுத்தவரே காசாம்பு மேனியரே
என் இடை சிறுத்த செம்பகத்தை என்ன சொன்னீர் மாதாவே?" என்று

அம்மாவுக்கு வந்ததே பாக்கணும் கோவம்:
"பீத்த முறமே நான் பெருக்கி வெச்ச வாருகல்லே
நான் ஆத்தாங்கரையோட போறவரைக்கும்
என்னை அம்மான்னு கூப்புடாதேடா கட்டேல போறவனே" அப்படீன்னு
சொன்னாளாம்.
எப்படி? செம descriptive இல்லை டயலாக் எல்லாம்? கதை சொல்லச் சொன்னால் ஸ்கரிப்டோட டிராமாவே ரெடி. ஒவ்வொருவருடைய கேரக்டர் எவ்வளவு நயமாக வெளிப்படுகிறது பாருங்கள்.

பின்னால் ஒரு தரம் இன்னும் ஒரு கதை சொல்கிறேன். அதற்குள் உங்கள் வட்டாரத்தின் சுவாரஸ்யமான் வழக்குகளைப் பற்றி கமென்ட் எழுதலாமே?

Monday, July 5, 2010

சிக்கு புக்கு ரயிலு

முன்பெல்லாம் ரயில் பிரயாணம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எப்போதிருந்து என்றால்
"ஜன்னலுக்கு வெளிலே எட்டிப் பார்க்காதே கரி கண்ணிலே படும்" என்பார்களே அந்த காலத்திலே கூட . அப்போதெல்லாம் ஊருக்கு கிளம்பும் தினம் ஸ்டேஷனில போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறிவிடலாம். நிறைய அந்ரிஸர்வ்ட் பெட்டிகள் இருக்கும். அகப்பட்ட இடத்தில் உட்கார்ந்து கொண்டு போய் விடலாம். சிறு பெண்ணாக இருக்கையில் சென்னையிலிருந்து தஞ்சாவூர் போகும் ரயில்களில் அநேகமாக இரவு வண்டிகளில் பிரயாணம் செய்தது நினைவிருக்கிறது. இரண்டு பக்கத்துத் தாத்தாக்களின் வீடுகளும், இதர உறவினர்களின் வீடுகளும் அக்கம்பக்கமான ஊர்களில் அந்தப்பக்கம்தான் இருந்தன. ரிசேர்வ் செய்யாத காரணத்தினாலா அல்லது அப்போது குழந்தைகளுக்கு பெர்த் கிடையாதா என்று தெரியவில்லை - பெரும்பாலும் நானும் என் தங்கையும் சீட்டுகளுக்கு இடையே தரையில் தினசரி தாள்களின் மேல் விரித்த பெட் ஷீட் மேல் கிடத்தப்படுவோம். இப்போது 6 அல்லது 7 மணி நேரங்களே நீடிக்கும் பிரயாணங்கள் அப்போதெல்லாம் பல மணி நேரம் ஆகும். வழியில் வரும் ஊர்களில் எல்லாம் வண்டி நிற்கும். சில நிறுத்தங்களில்
அந்த ஊரில் விசேஷமான பழங்கள், தின்பண்டங்கள் விற்பார்கள் - பண்ருட்டி பலாப்பழம் போல.எங்கள் வீட்டிலிருந்து பெரும்பாலும் மிளகாய்ப்பொடியில் பிரட்டப்பட்ட இட்லியும் தயிர் சாதமும் கையில் கட்டிக்கொண்டு வந்திருப்பார்கள். இது போன்ற நிறுத்தங்களில் காபி, பழங்கள் மற்றும் ஏதேனும் தின்பண்டங்கள் வாங்கப்படும். சிலசமயம் எஞ்சினுக்கு கரி நிரப்புவதற்காக நிறைய நேரம் நிற்கும். அப்போதெல்லாம் பிளாட்பாரத்தில் இறங்கி நடக்க அனுமதி கிடைக்கும். என்ஜினிலிருந்து கடைசிபெட்டி வரை நடந்து விட்டால் என்னமோ எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட மாதிரி பெருமைப் பட்டுக் கொள்வோம்.

ரயிலில் ஜன்னல் பக்கம் உட்காருவதற்கு ஒரு அடிதடி. அப்புறம் பெரியவர்கள் மத்தியஸ்தம் செய்து ஒவ்வொருவரும் கொஞ்ச நேரம் ஜன்னல் பக்கம்
உட்கார ஏற்பாடு செய்வார்கள். வெளியில் காணும் காட்சிகள் எல்லாம் ஏதோ discovery சேனல் குறும்படம் போல் இருக்கும் - மரங்கள், வயல்வெளி, ஆறு, நதி, தூரத்தில் வீடுகள் அதனுள்ளே மினுமினுக்கும் விளக்குகள் என்று.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு வரை கூட இந்த fascination இருந்தது. ஒரு முறை கன்னியாகுமரி எக்ஸ்ப்ரெசில் திருச்சூர் வரை போய் வந்த பின் தீர்மானம் செய்தேன் - ஒரு முறை இந்த ரயிலில் சும்மா டிக்கெட் புக் செய்து கொண்டு கன்னியாகுமரி வரை போய் அடுத்த ரயிலில் திரும்பி விட வேண்டும் என்று - அவ்வளவு அற்புதமாக இருந்தது அந்த பாதை. எங்கு பார்த்தாலும் பசுமை ஆங்காங்கே சிறு ஓடைகள் , ஓட்டு வீடுகள் என்று.
சமீப காலத்தில் இதெல்லாம் மாறிப் போய் ரயில் பிரயாணம் என்றாலே ஒரு ஆயாசம் வந்து விடுகிறது. 'ஏன் என்ன ஆச்சு' என்கிறீர்களா? - எனக்குத்தான் வயசாகிப் போச்சு என்று நினைக்கிறேன். இல்லை இந்திய ரயில்வேயின் தரம்தான் குறைந்து போய் விட்டதா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. இத்தனைக்கும் முன்பெல்லாம் மூன்றாவது வகுப்பிலும், இரண்டாவது வகுப்பிலும்தான் பிரயாணம். இப்போதெல்லாம் ஏ சி ஆனாலும் முடியவில்லை.
லால்பாக், பிருந்தாவன் , சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏறின பத்தே நிமிஷத்தில் ஒருவர் வருவார் - காபி, டீ என்று. சற்றே நேரத்தில் வடை, சமோசா, கட்லெட் . பிறகு ஒருவர் போளி ஒப்பட்டு கொண்டு வருவார்ர். பின்னர் சிப்ஸ், சாக்லேட், பிஸ்கட் . இவர்கள் அரை மணிக்கு ஒருதரம் விடாக்கண்டர்களாய் வந்து நம்மை விசாரித்துக்கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் அதிகம் இருக்கும் பெட்டி என்றால் இன்னும் ஒருதரம் கூட வருவார்கள். காலை வண்டி என்றால் பொங்கல், இட்லி, வடை அல்லது பிரட் ஆம்லேட் , மதிய வேளையில் வெஜ் பிரியாணி, டொமாடோ ரைஸ், லைம் ரைஸ், தயிர் சாதம். அப்புறம் cold ட்ரிங்க்ஸ், ஐஸ் கிரீம் வேறே. இது போல் 6 நிமிடத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில் பிரயாணம் முழுவதும் கதவைத் திறந்து கொண்டிருப்பார்கள். இதிலேயே ஏ.சி. பெட்டி சூடாக ஆரம்பிக்கும். போதாதென்று இந்த உணவுப் பண்டங்களின் மணம் வேறு பெட்டியை நிரப்பும். ஜன்னலையும் திறக்க முடியாது. இதெல்லாம் சேர்ந்து லேசாக வயிற்றைப் பிரட்ட ஆரம்பிக்கும். இன்னும் அவற்றை எல்லாம் வாங்கி சாப்பிட்டால் என்ன ஆகுமோ தெரியாது.

இந்தக் கஷ்டங்களை நினைத்துக்கொண்டு
'ஆறு மணி நேரப் பிரயாணம்தானே , இரண்டாம் வகுப்பில் போய் விடலாம்' என்று நினைத்தால் அங்கு வேறு விதமான பிரச்சினை. இந்த வகுப்புக் கழிவறைகளை நாளைக்கு ஒரு முறைதான் சுத்தம் செய்வார்கள் போல. சில சமயம் பெங்களூரில் சென்னையிலிருந்து வந்த வண்டியில் ஏறும்போதே இவை உபயோகிக்க லாயக்கில்லாமல் போய்விடுவதும் உண்டு. அவ்வளவு மணம் வீசும்.
அப்புறம் மூவர் உட்கார ஒதுக்கப்பட்ட பலகையில் ஒருவர் வந்து ஒட்டிக்கொள்வார் - 'இதோ அரக்கோணம் வரைக்கும்' என்பார். சிலசமயம் கால் கை நீட்ட வழி இல்லாமல் சாமான்களை வைத்துப் பெட்டியை நிரப்பி விடுவார்கள்.

இரவுப்பிரயாணத்தில் வேறு விதத் தொல்லைகள் - ஒரு முறை அவசரமாக சென்னை போக வேண்டி தத்கால் திட்டத்தில் சீட்டு எடுத்து கடைசியில் அந்த பெட்டியில் மொத்தம் மூன்றே பேர். நான், இன்னொரு நடுவயது ஆண் மற்றும் டிக்கெட் பரிசோதகர். பயத்தில் இரவு முழுவதும் உறக்கமே இல்லை. இன்னொரு முறை சைடு பெர்த்தில் படுத்திருந்த ஒரு பெண்மணியை வயதுப்பையன் ஒருவன் தடவிப்பார்க்க முயற்சிக்கப் போக அதனால் தூக்கம் போயிற்று. இப்போதெல்லாம் சைடு பெர்த் என்றலே பயமாக இருக்கிறது.

இவற்றோடு கூட இப்போது இன்னொரு தொல்லை சேர்ந்து கொண்டிருகிறது - அதான் இந்த செல் போன் தொல்லை. ஆளாளுக்கு போனை எடுத்து வீட்டு
விஷயங்கள் அத்தனையும் சத்தம் போட்டு பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படித்தான் இந்த முறை சென்னை போகும் ட்ரெயினில் ஒரு மாமி தன பேரனின் ஆயுஷ்யஹோமத்துக்கு தன உற்றம் சுற்றம் எல்லோரையும் அழைத்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் எனக்கு அந்த தேதி, அட்ரெஸ் எல்லாம் மன்ப்பாடமாகிப் போச்சு. அவர் கணவருக்கு சமீபத்தில் உடம்பு சுகம் இல்லாமல் இருந்தது போல் இருக்கிறது. அதை பற்றி அவர்கள் எல்லோரும் விசாரிக்க எல்லோருக்கும் இவர் status அப்டேட் கொடுக்க பயணம் முழுக்க அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை. கூட இருந்த எங்களுக்குத்தான் தாங்கவில்லை. இன்னொரு பக்கம் ஒரு மனிதர் ஆபீஸ்மீட்டிங்கை
போனில் நடத்திக் கொண்டிருந்தார். தேவையா? இவர்கள் எல்லாம் ஒரு 5 வருஷம் முன்னாடி எப்படி வாழ்க்கை நடத்தினார்களோ தெரியவில்லை. ஒரே அலம்பல். பேசட்டும். பெட்டி முழுக்கக் கேட்கும்படியாகவா பேசுவது? இந்த ரயில்வேகாரர்களும் சரி - கழிவறைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்வதில்லை. பெட்டிகளை அவ்வபோது சுத்தம் செய்வதைப் பற்றி அவ்வளவு அக்கறை எடுப்பதில்லை. அனால் ரயில் பெட்டி முழுவதும் அங்கங்கே சுவிட்சு வைத்திருக்கிறார்கள். செல்போன் சார்ஜ் செய்து கொள்ள வசதியாய். கொடுமையோ கொடுமை.

இப்படியாகத்தானே சின்னச் சின்ன ஆசையான ரயில் பயணம் இப்போதெல்லாம் நான் தவிர்க்க விரும்பும் விஷயமாகிப் போனது.
போன முறை அமெரிக்க போன பொழுது Amtrak ட்ரெயினில் நியூ யார்க் கிலிருந்து வாஷிங்டன் வரைக்கும் போன பொழுது தோன்றியது - நம்மூரிலும் இப்படிப்பட்ட ரயில் திட்டம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று. என்னுடைய வாழ்நாளில் வருமா?