நேற்று எனது நண்பனின் சகோதரி இறந்துவிட்டார்கள். ஒரு வருடத்துக்கும் மேலாக மூளையில் கான்செர் நோயால் அவதிப் பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் போயிற்று. ஆனால் அதற்கு முந்தைய நாட்களில் அந்தப் பெண்மணியின் வாழ்கை எல்லோரும் ஆசைப் படக்கூடிய வகையில் இருந்தது. பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் எல்லோராலும் கொண்டாடப்பட்டவர். பணத்துக்கு குறையே கிடையாது. கணவர் அவர் எது செய்தாலும் அதற்கு உடன்படக்கூடிய மனிதர். இந்த காய்ச்சல் வந்த பிறகுதான் அவருக்குத் துன்பம் என்றால் என்ன என்றே தெரியும். அது வரை கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்தவர். இத்துணை முழுமையான வாழ்வு என்பது எத்தனை பேருக்கு வாய்க்கக் கூடிய ஒன்று? ஆனாலும் அவருடைய வீட்டில் யாருக்கும் மனம் சமாதானமாக இல்லை. எல்லோரும் இன்னும் சில காலம் அவர் வாழ்ந்திருக்கலாமே என்பது போலத்தான் பேசினார்கள்.
மரணத்தின் நிச்சயம் நம் எல்லோருக்கும் தெரிந்தே இருந்தாலும் நம்மைச் சுற்றியவர்களுக்கு முடிவு வரும்போது அது எவ்வளவு வயதானவர்கள் ஆனாலும் அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எங்களுக்குத் தெரிந்தவர் ஒருவரது தாயார் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக கோமாவில் இருந்த போது அவருடைய மனைவி 'இது போல இருப்பதைவிட அவர் இறந்துவிடுவதே நலம்' என்று கூறியபோது அவரது கணவருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. 'கோமாவிலாவது என் அம்மாவை என்னால் பார்க்க முடிகிறதே என்று நான் ஆறுதல் அடைகிறேன் நீ எப்படி இது போல சொல்லலாம்' என்று கடுமையாக சண்டை போட்டார். அந்த அம்மாவுக்கு அப்படி ஒரு வாழ்வு தேவையா என்று அவர் யோசிக்கவே இல்லை. நமக்கு உகந்தவர்களின் மரணம் நம்மைக் கலங்க வைப்பது அவர்களுக்காகவா இல்லை நமக்காகவா என்று எனக்குத் தோன்றும்.
எனக்குத் தெரிந்த பலரும் இறப்பு என்ற யதார்த்தத்தைப் பற்றி யோசிக்கவே தயங்குபவர்களாகத்தான் இருக்கிறார்கள். இது போன்ற பேச்சை எடுத்தாலே 'சரி அபசகுனமாக எதாவது உளராதே' என்பார்கள். இல்லை என்றால் 'அது நடக்கும்போது அதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம். இப்போது சும்மா இரு' என்பார்கள். நாம் வாழ்கையின் மற்ற நிகழ்வுகளைப் பற்றி எல்லாம் நாம் யோசிக்கிறோம். அவற்றுக்காக திட்டமிட்டு செயல் படுகிறோம். ஆனால் இறப்பு என்பது மாத்திரம் பிறருக்கு மட்டுமே நடக்ககூடிய ஒன்று என்பது போல ஒதுக்கி வைத்து விடுகிறோம். சமீப காலத்தில் இன்சூரன்ஸ் கம்பனிகாரர்கள் மட்டுமே நமக்கு இறப்பின் நிச்சயத்தை நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து எந்த வீட்டிலுமே குடும்பமாக உட்கார்ந்து ' எனக்கு ஏதானும் நேர்ந்து விட்டால் ' என்ற scenario பற்றி நிதானமாக உணர்ச்சி வசப்படாமல் பேசி நான் பார்த்ததில்லை. நானே சில சமயம் என் மகனிடமோ மருமகளிடமோ வீட்டில் எந்தெந்த file எங்கிருக்கிறது என்று சொல்ல முயலும் போதெல்லாம் அவர்கள் என்னை அடக்கி விடுவார்கள் .அதெல்லாம் நேரம் வரும்போது பார்த்துக் கொள்கிறோம் என்று.
இன்னொரு நண்பருக்கு கான்செர் மிகவும் முற்றிய நிலையில் இன்னும் சில நாட்களே என்று இருந்த சமயத்தில் கூட அவர் வீட்டில் எல்லோரும் மரணத்தைப் பற்றி நினைக்க விரும்பவில்லை. என்னமோ எல்லாம் இயல்பாக இருப்பது போலவும் ' இதோ அவர் எழுந்து முன் போல் நடமாடப் போகிறார்' என்பது போலவும் நடந்து கொண்டார்கள். ஒரு வேளை அவர்கள் உண்மையை எதிர்கொண்டிருந்தால் அந்த சில நாட்களை இன்னும் அர்த்தமுள்ளவை ஆக்கி இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது அவருடன் வாய் விட்டுப் பேசி அவரது நிஜ உணர்வுகளையும், அவரது பயங்களையும் பற்றிப் பேச ஒரு வாய்ப்பு இருந்திருக்கலாம். இவர்களுக்கு நிஜத்தை எதிர் நோக்கும் பலம் இல்லாததினால் கடைசி நாட்களில் அவர் தனது உள்மனதின் பாரங்களை மனதிலேயே சுமந்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டுவிட்டரோ என்று தோன்றியது. இதில் வேடிக்கை என்னவென்றால் நோயாளி உட்பட அத்துணை பேருக்கும் அவரது மரணத்தின் அண்மையைப் பற்றி தெரியும். ஆனாலும் யாரும் அதைப் பற்றி இயல்பாகப் பேசத் தயாராக இல்லை. மரணத்தின் பிடியில் இருக்கும் அவர் எத்துணை தனிமைப் பட்டு போயிருப்பார் இல்லை ?
நமக்குப் பிரியமானவர்கள் நம்மைப் பிரியும்போது ஏற்படக்கூடிய துக்கத்தை நான் மறுக்கவில்லை. பாசத்தால் ஏற்படும் அந்த வலி மிகவும் இயற்கை ஆனது. நான் சொல்ல வருவது என்னவென்றால் மரணம் என்ற நிகழ்வு நமக்கு அளிக்கும் அதிர்ச்சியை குறைக்க ஒரே வழி அதைப் பற்றி தெளிவாக சிந்திப்பதும் அதைப் பற்றி இயல்பாகப் பேசுவதும்தான். மரணத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டோமானால் இருக்கும் நாட்களை இன்னமும் தரத்தோடு வாழ்வோமா என்கிற கேள்விதான். அது யாருக்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்ற உணர்வு வந்தால் நம் வாழ்க்கையில் வன்மைகள் குறையுமோ? யாரும் சாஸ்வதம் இல்லை என்று தெளிந்து இருக்கும்போது பொறாமை, காழ்ப்புணர்ச்சி, பேச்சிலும் செயலிலும் வன்மை எல்லாம் குறையுமோ? எனக்குத் தெரிந்த வீட்டில் ஒரு பெண் அவரது மாமியாரை அவர் இருக்கும் வரை நோக அடித்து விட்டு இப்போது அவரது மறைவுக்குப் பின்னால் அவருக்கு ஸ்ரத்தையாக வருடாவருடம் திவசம் செய்கிறாள் - 25 வருடங்களாய். பலரும் இப்படித்தான் சொல்கிறார்கள் : 'இப்படி திடீர் என்று போய் விடுவார் என்று முன்னமே தெரிந்திருந்தால் அதை செய்திருப்பேன் இதை சொல்லி இருப்பேனே என்று. என்னமோ மரணம் என்பது அரியதான நிகழ்வு என்பதைப் போல.
மரணத்துக்குப் பின்னால் ஒருவரை நினைத்து நினைத்து அழுவதை விட அவரோடு இருக்கும் நாட்களை அன்புடனும் புரிதலுடனும் வாழ்வது இன்னும் சிறப்பல்லவா. ஒரு வேளை expiry தேதி குறிக்கப்பட்டு பிறந்தோமானால் பூமியில் வாழ்கை இன்னும் அர்த்தமுள்ளதாக வாழ்வோமோ என்னவோ?