Showing posts with label சும்மா போஸ்ட். Show all posts
Showing posts with label சும்மா போஸ்ட். Show all posts

Tuesday, November 2, 2010

தீப ஒளித் திருநாள்

என்ன உங்கள் வீட்டில் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலா ? தமிழக முதலமைச்சரின் ஆசியோடு நடக்கும் ஒரு தொலைக்காட்சியில் இதை தீப ஒளித் திருநாள் என்று சொல்கிறார்கள். கேட்க அழகாக இருக்கிறது ஏனென்றால் பலரும் தீபாவலி என்று வலிக்கும்படி சொல்வதை தவிர்க்கலாமே. இப்போதெல்லாம் பண்டிகைக் கொண்டாட்டம் என்றாலே புத்தாடை , விசேஷமான தின்பண்டங்கள் அப்புறம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று ஆகிவிட்டது போல் தோன்றுகிறது. ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையத்திலும் காலை 6 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணி வரையில் சிறப்பு நிகழ்ச்சிகள் அதிலும் முக்கால்வாசி சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்சிகள்தான். இதில் எனக்கு ஒரு பெரிய சந்தேகம் , இல்லை இரண்டு பெரிய சந்தேகங்கள். இப்படி நாள் முழுதும் சிறப்பு நிகழ்ச்சிகள் போட்டால் வீட்டில் எப்போது சமையல் எல்லாம் நடக்கும்? இல்லை சமையல் அறையிலேயே தொலைக்காட்சி வைத்திருப்பார்களோ? அப்புறம் இப்படி சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டே இருந்தால் கோவிலுக்குப் போவது, அக்கம்பக்க நண்பர்கள் வீட்டுக்குச் சென்று வாழ்த்தி வருவது அல்லது குடும்பமாய் உட்கார்ந்து விருந்து சாப்பிடுவது இதெல்லாம் எப்படி நடக்கும்? இவற்றுக்க்காகத்தான் மிக நீண்ட விளம்பர இடைவேளைகள் கொடுக்கிறார்கள் போல இருக்கிறது.
இந்த விசேஷ தினங்களில் எனக்குப் பிடித்த நிகழ்ச்சி பட்டிமன்றம். இதை நிதானமாய் மத்தியானமாய் காண்பிக்கக் கூடாதா? காலையில் 10 30 மணிக்குள் அவசரமாய் முடித்து விடுவார்கள். நான் சமையல் வேலை எல்லாம் முடிந்து டிவி முன் வரு முன் இதெல்லாம் முடிந்து போய் ஏதோ ஒரு அஜித் படமோ அல்லது விஜய் படமோ உலகத்திலேயே முதல்முறையாக காண்பிப்பார்கள். அப்புறம் மதியம் முழுவதும் முன் பின் தெரியாத நடிகைகள் அவர்கள் வீட்டு தீவாளி பற்றி புரியாத தமிழில் பேசுவார்கள். தொலைக்காட்சிக்காரகள் இந்நிகழ்சிகளைக் கண்டு ரசியுங்கள் என்று வேறே அடிக்கடி சொல்வார்கள். என்னத்தை ரசிக்கிறது?
இந்த பெங்களூரில் வேறே தீபாவலி கார்த்திகை என்றால் போதும் மழையும் காற்றும் தவறாமல் வந்து விடும். அப்புறம் என்ன தீபம் ஏற்றுவது? குடத்துக்குள்ளேதான் ஏற்றணும்.
அதென்னமோ இந்தப் புடவைக் கடைக்காரர்கள் விளம்பரங்களில்தான் தீபாவளி பார்த்தாலே ஆசைப்படும்படி இருக்கிறது. பெரிய பெரிய கோலங்கள், பட்டுப்பாவடையில் குட்டிக் குழந்தைகள் பட்டாசு கொளுத்துகிறார்கள், இளம்பெண்கள் அழகான போத்தீஸ் புடைவைகளில் வலம் வருகிறார்கள், எல்லோரும் குடும்பமாய் உட்கார்ந்து சிரிக்கிறார்கள். யாரும் தொலைகாட்சி முன் உட்கார்ந்து த்ரிஷா வீட்டு தீபாவளி பார்ப்பதே இல்லை.

உங்கள் வீட்டு தீபாவளி பற்றி சொல்லுங்கள்.
அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பி கு: ஒரு கேள்வி, எனக்குத் தெரிந்த சிலர் இந்த பதிவுகளை ஆங்கில ஸ்க்ரிப்டில் எழுத சொல்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியும் ஆனால் படிக்க வராதாம். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?