தமிழ் வருடப்பிறப்பன்று என்று நினைக்கிறேன் - ஒ அதுதான் இப்போதெல்லாம் சித்திரைத் திருநாள் ஆகிவிட்டதே - அமாம் அன்றுதான், விஜய் டிவி யில் தமிழகத்தின் வட்டார வழக்குகளைப் பற்றி ஒரு அருமையான விவாதம் நடந்தது.
பல்வேறு வட்டாரங்களின் வசவுச் சொற்கள், சொற்ப்பிரயோகங்கள், இச்சொற்களின் மூலம் வெளிப்படும் வாழ்க்கைமுறைகள் என்றெல்லாம் மிக சுவாரஸ்யமான முறையில் கோபிநாத் இந்த கருத்தரங்கை நடத்தினார். சில மொழி ஆராய்ச்சி நிபுணர்களும், எழுத்தாளர்களும் கூட நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துக்களை சொன்னார்கள். தஞ்சை மாவட்டத்தைப் பற்றி இவர்கள் எல்லோருமே ஒப்புக்கொண்டது என்னவென்றால் தஞ்சை மண்ணுக்கு வட்டார வழக்கு என்பது கிடையாது. அது பல்வேறு அரசர்களின் நேர்பார்வையில் இருந்த வட்டாரமானதால் அங்கு பெரும்பாலும் எழுதப்படும் தமிழே அதாவது வரி
வடிவமான தமிழே உபயோகப்படுத்தப்பட்டது அதனால் தஞ்சையில் வட்டாரச் சொற்கள் மிகவும் குறைவு என்று அவர்கள் கூறினர்.
இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால் எங்கள் வீட்டில் பேசப்படும் தமிழைக் கேட்பவர் எவரும் சில நொடிகளில் கேட்டு விடுவார்கள்:
"நீங்க தஞ்சாவூரா?" என்று.
இத்தனைக்கும் நாங்கள் ஒன்றும் செந்தமிழில் பேசுவதில்லை. என்ன, மதுரை, கோயம்பத்தூர் தமிழ் போல எங்கள் பேச்சில் ஒரு ராகம் இருக்காது. நிதானமாக அவசரமே இல்லாமல் பேசுவோம். பிரபஞ்சன் சரியாக சொன்னார் அந்தக் கருத்தரங்கில்: " நிதானமாக வெத்திலையில் சுண்ணாம்பு தடவிக்கொண்டு பேசுவதுபோல் இருக்குமாமா தஞ்சாவூர் பேச்சு.
பிரத்தியேகமான சொற்ப்ரயோகங்கள் என்று பார்த்தால்
நொரநாட்டியம், திருவாழத்தான், சதிராடறது, காண்டுக்கோல், கட்டுவாய், சாணிச்சுருணை, ஓக்காளித்தல், ஈஷிக்கறது, தீர்த்தமாடறது, தம்பிடி, லங்கிணி, தாஜா பண்றது, திலாவறது, முடை,ஜாகை, சவுக்கம், இளப்பம், வெளக்குமாத்துக் கட்டை, மென்னி, பாஷாங்கராகம், பீத்தல், சுருக்க
இது போன்ற சில பிரயோகங்கள் எங்களூர்காரர்களிடம் மட்டுமே கேட்டிருக்கிறேன்.
(Ed: முதலில் ராங்கி, சோப்ளாங்கி, பொம்மனாட்டி, கிராதகன், அவ்வளூண்டு, இவ்வளூண்டு, கொல்லைப்பக்கம் போன்ற வார்த்தைகளையும் சேர்த்திருந்தேன். ஆனால் குறும்புக்காரி மற்றும் என்னுடைய தங்கையார் இந்த லிஸ்ட்டை மறுக்கிறார்கள். அவர்கள் கட்சி என்னவென்றால் இவை எல்லாம் தமிழ் பிராமணர்களிடையே சகஜமாக உபயோகமாகும் வார்த்தைகள். தஞ்சை மண்ணுக்கே சொந்தமானவை அல்ல என்பதாகும். இந்த லிஸ்டுக்கு ஆதாரமே கிடையாது. இது என்னுடைய அபிப்ராயம் மட்டும்தான்.)
இவற்றுக்கெல்லாம் மேலாக தஞ்சாவூர்காரர்கள் பேச்சில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அவர்கள் பேச்சினிடையே சர்வசாதாரணமாக
அடிபடும் பழமொழிகளும், வஜனங்களும். நேரிடையாக ஒரு விஷயத்தை சொல்வதை விட மறைமுகமாக இந்த வசனங்களின் மூலம் உணர்த்துவதில் மிகத் திறமைசாலிகள். சில சமயம் இவை நக்கல் செய்வதற்காகவும் உபயோகிக்கப்படும்.
உதாரணமாக இன்னொருவருடைய பொருளை தாராளமாக உபயோகிப்பவர்களைப் பற்றி கூறுவதற்கு:
ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே
என்பார்கள்.
ஒருத்தி வழக்கத்துக்கும் அதிகமாக கோபத்தைக் காட்டினால்
ஏற்கனவே துர்க்குணி அதிலும் கர்ப்பிணி
என்பார்கள்.
மற்ற வட்டாரத்தவர்களும் இதுபோலபேசுவார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் இப்படிப் பேசுவதை கேட்டு என் நண்பர்கள் எல்லாம் வியந்து போவார்கள்.
சம்பந்தமே இல்லாதவரிடம் உறவு கொண்டாடுவதைச் சொல்ல இது போல் சொல்வார்கள்:
வாச்சானுக்கு போச்சான் மதனிக்கு உடப்பிறந்தான்
என்பது போல உறவு என்று.
இதையே இன்னொரு விதமாக இன்னும் நீட்டி முழக்கி சொல்வார்கள்:
பூவாளூர் சந்தையிலே உங்கள் மாமா கூடையும் எங்கள் சித்தப்பா கூடையும் இடித்துக் கொண்டு இருந்தன
என்பது போல உறவு என்று. அவர்கள் இவ்வளவு விஸ்தாரமாக சொல்வதிலேயே தெரியும் எத்தனை தூரத்து உறவு என்று.
இன்னும் சில உபமானங்கள்:
விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டினாப்ல
யானைக்கு கோமணம் கட்டின மாதிரி
ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி
நெருப்பைக் குளிப்பட்டினாப்போலே
கடைஞ்ச மோர்லே வெண்ணை எடுக்கற மனுஷன்
தாம்பும் அரதல் தோண்டியும் பொத்தல்
சீலை இல்லேன்னு சின்னாயி வீட்டுக்குப் போனாளாம் அவள் ஈச்சம்பாயைக்
கட்டிண்டு எதுத்தாப்போலே வந்தாளாம்
அடியே ங்கரத்துக்கு ஆம்படையானைக் காணுமாம்
புள்ளைக்கு பேர் வெச்சாச்சு
சந்தான கோபால கிருஷ்ணன்னு
இப்படிப் பல. இவைகளுக்கு என்ன அர்த்தம் என்று புரிகிறதல்லவா? பாருங்கள் எவ்வளவு நக்கல், கிண்டல், ஹாஸ்யம், அதே சமயத்தில் சொல்லவந்தது எவ்வளவு தெளிவாக சொல்லப்படுகிறது. எதையும் பூசி மெழுகும் வழக்கம் கிடையாது 'தேங்காயையும் கல்லையும் எதிர் எதிரே போட்டு உடைப்பது போல' ஒரு பேச்சு. 'Political incorrectness" என்றால் தஞ்சாவூர்தான்.
தி ஜானகிராமன் அவர்களது கதைகளைப் படிக்கும்போதே ஏதோ எங்கள் உறவினர்கள் உரையாடுவதைப் போலத் தோன்றும்.
சில வஜனகளுக்குப் பின்னே ஒரு கதையே இருக்கும்
உதாரணமாக ஒருவர் முதலில் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டுப் போன பொருளை பின்னால் வந்து கேட்டால்
சொவத்துக் கீரைய வழிச்சுப் போடடி சொரணை கேட்ட வெள்ளாட்டி
என்பது போல வந்தான் என்பார்கள்
இதன் பின்னே உள்ள கதை என்னவென்றால் வயலில் வேலை செய்து விட்டு வேளாளன் மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்தானாம். வாரம் முழுவதும் மனைவி கீரையும் சோறுமே வைத்துக்கொண்டிருந்தாளாம். மறுபடியும் அன்று கீரையும் சோறும் பார்த்துக்கோபமாகி அந்த கீரைச் சட்டியை சுவற்றில் விசிறி அடிக்கப் போக கீரை எல்லாம் சுவற்றில் அப்பி கொண்டதாம். பின்னர் இரவுச் சாப்பாட்டின் போது வெறும் சோறு மட்டும்தான் இருந்தது. அப்போது வேளாளன் சொன்னானாம்:
'சுவத்துக் கீரைய வழிச்சுப் போடடி ' என்று. அவள் ஏதானும் கிண்டலாக சொல்லி விட்டால் என்ன செய்வது? அதற்காக அவனே முந்திக் கொண்டு அவளை
'சொரணை கெட்ட வெள்ளாட்டி' என்றானாம். எப்படிக் கதை?
இது போல் பல கதைகள் சொல்வார்கள். சில கதைகள் மற்றவட்டாரங்களுக்கும் பொதுவானாலும் இவர்கள் சொல்லும் விதமே தனி. இதோ ஒரு உதாரணம்:
மருமகள் குளத்துக்குத் தண்ணி எடுக்க போய் தாமதமாகத் திரும்பினாளாம். மாமியார் கேட்டாளாம்:
"மேனா மினுக்கியரே என் மூத்த மகன் தேவியரே
தண்ணி எடுக்க போன இடத்தில் தாமசங்கள் ஏனடியோ"
என்று.
மருமகள் உடனே அழுது கொண்டே போய் கணவனிடம் சொன்னாளாம்:
"சொமமழகரே துப்பட்டிக்காரரே
உங்கம்மா என்னை உருக உருக சொன்னா "
என்று
அவன் போய் தாயாரைக் கேட்டானாம்:
"கடுகாய் சிறுத்தவரே காசாம்பு மேனியரே
என் இடை சிறுத்த செம்பகத்தை என்ன சொன்னீர் மாதாவே?" என்று
அம்மாவுக்கு வந்ததே பாக்கணும் கோவம்:
"பீத்த முறமே நான் பெருக்கி வெச்ச வாருகல்லே
நான் ஆத்தாங்கரையோட போறவரைக்கும்
என்னை அம்மான்னு கூப்புடாதேடா கட்டேல போறவனே" அப்படீன்னு
சொன்னாளாம்.
எப்படி? செம descriptive இல்லை டயலாக் எல்லாம்? கதை சொல்லச் சொன்னால் ஸ்கரிப்டோட டிராமாவே ரெடி. ஒவ்வொருவருடைய கேரக்டர் எவ்வளவு நயமாக வெளிப்படுகிறது பாருங்கள்.
பின்னால் ஒரு தரம் இன்னும் ஒரு கதை சொல்கிறேன். அதற்குள் உங்கள் வட்டாரத்தின் சுவாரஸ்யமான் வழக்குகளைப் பற்றி கமென்ட் எழுதலாமே?