Sunday, January 2, 2011

சொல்வனம்

பில்லி காலின்ஸ் என்று ஒரு அமெரிக்க கவிஞர். எனக்கு மிகவும் பிடித்த கவிஞர். இவர் கவிதைகள் மிகவும் எளிமையானவை. மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தை மிக அழ்காக சொல்வதுதானே கவிதையின் சிறப்பு? உதாரணமாய் மறதியைப் பற்றி ஒரு கவிதை. அதில் எப்படி மெது மெதுவாய் ஒவ்வொரு விஷயமாய் மறந்து போகிறது என்று நகைச்சுவையுடன் சொல்லிகொண்டே வருகிறவர் சடாரென்று ஒரு வரியில் மிக அழகான ஒரு சிந்தனையை வைக்கிறார் பாருங்கள்:

No wonder the moon in the window seems to have drifted
out of a love poem that you used to know by heart.


ஜன்னல் வழியே ஆகாயத்தில் கண்ணால் காணும் நிலவு, நாம் பாடம் செய்த ஒரு காதல் கவிதையிலிருந்து விலகி வெளிவந்தது போலத் தோன்றுகிறதாம்.
மறதியில் நமக்கு நிஜத்துக்கும் நினைவுக்கும் இருக்கும் இடைவெளி கூட மங்கிப் போகிறது என்பதை அழகாய் சொல்லும் வரி. காதல் கவிதை மறந்து போய் அந்தக் கவிதையுடன் சேர்ந்து உணர்ந்த நிலவு மட்டும் கண்ணெதிரே. அந்தக் கவிதையில் இருக்கவேண்டிய இது இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற குழப்பம்.
என்னைப் போல இந்த நிலையை அடைந்தவர்களுக்கு இது இன்னும் நன்றாகப் புரியும்.
சொல்வனம் என்றொரு இணையப் பத்திரிகை. நண்பர் ஒருவரும் அவரது நண்பர்களும் சில வருடங்களாய் நடத்தி வருகிறார்கள். நல்ல கட்டுரைகள், கதைகள் மற்றும் பல தரமான பகுதிகள். முடிந்தால் சென்று படித்து வரவும். விருப்பம் இருந்தால் நீஙகளும் எழுதலாம். அப்புறம் இந்த இதழில் பில்லி காலின்ஸின் மூன்று கவிதைகளை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன்.
படித்து உங்கள் எதிர்வினைகளைப் பதிவு செய்யலாமே?


பி. கு: மறந்தே போனேன் பாருங்கள். என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Friday, December 17, 2010

எங்க வீட்டு கல்யாணம்

சில வருடங்களுக்கு முன் டுபுக்கு என்ற வலைப்பதிவாளர் ஒரு கல்யாணத்தில் தான் கேட்ட சில சுவையான சம்பாஷணைகளைப் பதிவு செய்திருந்தார். அதை நான் மிகவும் ரசித்துப் படித்தேன். ஏன் என்றால் இது போன்ற நிகழ்வுகள் நம் கல்யாணங்கள் எல்லாவற்றிலும் பொதுவான ஒன்று - நம் எல்லோர் வீட்டிலும் இது போல ஒரு மாமா , சித்தி, அல்லது அத்திம்பேர் இருப்பார். அவரை யாரானும் சிறிசுகள் கலாய்த்துக் கொண்டிருப்பார்கள். இல்லை விவரமான பெரிசுகள் என்றால் அவர்கள் சிறிசுகளை கலாய்த்துக் கொண்டிருப்பார்கள். கல்யாணத்துக்குக் களை கூட்டுவதே இது போன்ற விஷயங்கள்தான். மற்றபடி காசி யாத்திரை, ஊஞ்சல், பச்சைப்படி என்று அதெல்லாம் புரோஹிதர் இயக்கத்தில் அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும். இவை எல்லாம் வீடியோவில் பிடிக்கப்பட்டு பத்திரப்பட்டுவிடும்; ஆனால் இந்த உபகதைகள் சிலருக்கு மட்டுமே தெரிந்து நாளடைவில் தொலைந்து போய் விடும்.

இந்தக் கல்யாணத்தில் அப்படி நான் கவனித்த சில சுவையான விஷயங்கள்:
Scene1
பிள்ளையின் மாமா மனைவியிடம்: ஏண்டி பாத்ரூம் உள்ளே போயிருக்கேன். கதவை போட்டுண்டு வந்துட்டே? இத்தனை நாழி கதவை தட்டிண்டிருந்தேன்.
மாமி: ஐயையோ சாரின்னா நான் கவனிக்கலை.
மாமா: ஆமாம் நான் இல்லைன்னு நீ என்னிக்காவது கவனிச்சாதானே?
( வடக்கே கல்யாணத்திலே மாப்பிள்ளையோட செருப்பைதான் ஒளிச்சு வெப்பா. இங்கே மாப்பிள்ளைக்கு மாமாவையே ஒளிச்சு வைக்கறா போலிருக்கு!!)

Scene2
ஒரு அத்தை பெண் (ஒ அ பெ): பொண்ணுக்கு என்ன பண்றா? புள்ளை ஆத்துலே ஏதானும் demand உண்டா?
இன்னொருத்தி: ஒண்ணுமே வேண்டாமாம். சேவை நாழி மாத்ரம் கேட்டாளாம். பிள்ளைக்கு சேவை ரொம்ப பிடிக்குமாம்.
ஒ அ பெ : போச்சுடா. சேவை யார் பிழியறது. ஒரு 5 பவுன் கூட வேணா போட்டுடலாம்.

Scene3
தங்கை என்னிடம்: கார் சாவியை எங்கே வெச்சு தொலைச்சே?
நான்: உன் பைலேதான் போட்டிருப்பேன் சரியா பாரு.
தங்கை: காணுமே.
ஒரு சித்தப்பா பெண்: என்ன காணும்?
தங்கை: என் கார் சாவி. இவ எங்கயோ வெச்சுத் தொலைச்சுட்டா.
அடுத்த 10 நிமிடத்தில் நான் போன இடமெல்லாம்:
'சாவி கெடைச்சுதா?'
"எங்கே தொலைச்சே?'
"வேறே என்ன காணும்?'
'நீ கொஞ்சம் நிதானமா இருக்கணும். ஆனாலும் பரபரப்பு.'
நேரம்தான்.
போதாக்குறைக்கு செருப்பைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு 8-10 வயது நண்டு சொல்கிறது:
"பெரியம்மாவுக்கு இதே வேலையா போச்சு. எதையானும் தொலைக்கிறது. அப்புறம் அதை தேடறது."
தேவையா?

Scene4:
பெண்ணின் அம்மா: பச்சப்படி எல்லாம் சுத்தி ஆச்சு. வாத்யார் எங்கே? அவர்தான் எப்படி உள்ளே கூப்டுண்டு போகணும்னு வந்து சொல்லணும்.
தங்கை: அவர் என்கிட்டே சொல்லிட்டு போனார்: "நீங்க ஊஞ்சல் பச்சப்படி முடிச்சு மேடைக்கு பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிண்டு வந்துடுங்கோ. நான் கொஞ்சம் சாப்டுட்டு வரேன். எனக்கு low sugar ஆயிடும்" அப்படீன்னு சொல்லிட்டு போனார்.
(இது எப்படி இருக்கு!இந்த நாள்லே யாரையும் நம்ப முடியலை சார்!!)

Scene5:
வீட்டு பெரிசு ஒண்ணு: ஏண்டி உஷா, தாலி கட்டினதும் ஜூஸ் ஒண்ணு கொடுப்பாளே. ஒண்ணும் காணுமே.
நான்: அதோ பாருங்கோ அந்த மூலைலே நின்னுண்டு ஒருத்தன் குடுத்திண்டிருக்கான். வாங்கோ
அங்கே போனால் ஜூஸ் ஓவர்.
பெரிசு: நாக்கெல்லாம் வறண்டு போச்சு கொஞ்சம் தாராளமா கலக்கப்படாதோ. arrangements போறாது.
நான்: ஷூ வாய மூடுங்கோ, நாம்தான் பொண் ஆத்துக்காரா. யாரை போய் குத்தம் சொல்றது?
இந்த பெருசுங்க தொல்லை ஆனாலும் தாங்கலைபா.

Scene6:
காலையிலிருந்து பாண்டில் அலைந்து கொண்டிருந்த சித்தி பையனிடம் நான்: ஏன் வேஷ்டி எடுத்துண்டு வரலியா?
சித்தி பிள்ளை: எனக்கு இவா வேஷ்டி வெச்சு குடுப்பானு நான் எடுத்துண்டு வரலை. இவா எனக்கு வேஷ்டியே குடுக்கலை.
போச்சுடா. வாயை மூடிண்டு இருந்திருக்கணும்.


நாங்கள் நான்கு பேர் உறவினர்களுக்கு பக்ஷணம் கொடுக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு தூரத்து மாமி என்னிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். நானும் பக்ஷணம் கொடுத்து அனுப்பினேன். கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால் என் மன்னியிடம் பக்ஷணம் வாங்கிக் கொண்டிருக்கிறாள். பின்னால் கேட்டால் எங்கள் நாலு பேரிடமும் ஒரொரு பாக்கெட் வங்கிக் கொண்டு போயிருக்கிறாள். சம்பந்திகளை விட அதிகமாய் சீர் பக்ஷணம் அவள் வீட்டிற்குதான் போயிருக்கும் போலிருக்கு. அதான் நல்ல பெரிய பையாக கொண்டு வந்திருந்தாள். இனிமேல் வாசலில் இதற்கெல்லாம் செக்யூரிட்டி செக் போடவேண்டும் போல் இருக்கிறது.

நான் கலந்துகொண்ட கல்யாணத்தில் சில விஷயங்கள் ஆச்சரியம் அளித்தன. பெண்ணுக்கு ஒரு கிலோ அளவு வெள்ளி சாமான் வாங்கி இருந்தாலும் கல்யாண கலாட்டாவில் தொலைந்து போய்விடும் என்ற பயத்தில் எதையும் லாக்கெரில் இருந்து எடுக்கவே இல்லையாம். விரதம் எல்லாம் சத்திரத்தில் கொடுத்த பித்தளை பாத்திரங்களிலேயே செய்தார்கள். சில நேரங்களில் பேப்பர் கப்பில் கூட எண்ணை, குங்குமம் சந்தனம் எல்லாம் வைத்திருந்தார்கள். எனக்குக் கல்யாணத்தில் கொடுக்கப்பட்ட வெள்ளிபாதிரங்கள் உபயோகப்பட்ட ஒரே நாள் என் கல்யாணம் அன்றுதான். இப்போதெல்லாம் அதற்கும் உபயோகப்படவில்லை.

விரதத்திலிருந்து கட்டுசாதம் வரை நான் சாப்பிட்ட விருந்துகளின் எண்ணிக்கை 7. நடுவே நலங்கின்போது வேறே ஏதோ சமோசா, ஸ்வீட் என்று கொடுத்தார்கள். நல்லவேளை அது ஒன்று மட்டும் நான் தொடவில்லை. இப்போது 4 நாட்களாய் 'எத்தை தின்றால் பித்தம் தீரும்' என்ற நிலைமையில் இருக்கிறேன்.

சாப்பாட்டு ஹாலில் ஒரு uncle ரொம்ப கஷ்டப்படுத்தி விட்டார் - "எனக்காக ஒரே ஒரு இட்லி. இன்னும் ஒரு தோசை. முறுகலாய்' எனறு. அவரை வேறே நாலைந்து பேர் புகழ்ந்து தள்ளி விட்டார்கள் - 'இப்போதெல்லாம் பாருங்கோ. கல்யாண வீட்டில் பந்தி விசாரிப்பே இருக்கறதில்லை. வந்தியா, சாப்டியா எனறு ஆகி விட்டது. உங்களை மாதிரி யார் இப்படி கேட்கிறார்கள்' எனறு. அவ்ளவுதான் மனுஷர் அடுத்த பந்தியில் இன்னும் ஒரு படி மேலே போய் விசாரிக்க ஆரம்பித்து விட்டார். அவரைக் கொண்டு சமையலறை மூலையில் cacophonix மாதிரி கட்டிப் போட்டு விடலாமா என்ற ஒரு யோசனை கூட எனக்கு வந்தது. மனுஷன் சோறு போட்டே கொன்று விடுவார். அடுத்த கல்யாணத்தில் அவரை பார்த்தால் பட்டினி கிடப்பது உத்தமம்.

பெண் வீட்டில் பூஜை அறையில் ஒரு அடுக்கில் இரண்டு தேங்காய்களை ஊற வைத்திருந்தார்கள். என்ன விஷயம் எனறு விசாரித்தால் அப்படி போட்டு வைத்தால் மழை வராது என்றார்கள். கல்யாணத்துக்கு 5 நாள் முன் வரையில் புயலும் பெருமழையும் அடித்ததில் அரண்டு போய் இது போல் செய்திருக்கிறார்கள்.
இப்போது தெரிகிறது சென்னையில் பாதி சமயம் ஏன் மழை வருவதில்லை எனறு.

மற்றபடி எல்லாம் சௌக்கியம். உங்கள் சௌக்யத்துக்கு கமெண்ட் போடவும்.

Sunday, November 21, 2010

தாங்க முடியலைங்க..

உங்கள் வீட்டுப் பெண்ணுக்கோ பிள்ளைக்கோ திருமணம் என்று வைத்துக்கொள்ளுங்கள். யாரையாவது அழைப்பதற்கு நேரில் போக வேண்டும் என்றால் எந்த நேரத்தில் போவீர்கள்? உங்களுக்கு சௌகர்யமான நேரத்திலா அல்லது அவர்களுக்கு சௌகர்யமான நேரத்திலா?
ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது - பத்து மணி இதற்கு உகந்த வேளையா?
எங்கள் வீட்டில் எல்லாம் ஞாயிறு காலையில் நான்கு தினசரிகள் வரும். ஒவ்வொன்றாய் கொஞ்சம் மேய்ந்து விட்டு , அடிகாஸ் ஹோடேலோ அல்லது s.l.v. யிலிருந்தோ இட்லி அ தோசை வரவழைத்து மெதுவாக சாப்பிட்டு விட்டு, இன்டர்நெட்டில் மெயில் எல்லாம் பார்த்து, உறவினர்/ நண்பர்கள் யாரானும் சாட்டில் இருந்தால் கொஞ்சம் வம்பளந்து விட்டு பத்து மணி வாக்கில்தான் குளியலைப் பற்றிய யோசனையே வரும். சரி என்று தலை முழுக்க எண்ணை தடவி பாக்கி இருப்பதை முகத்தில் தடவி குளிக்க போகலாம் என்று எழுந்தால் வாசலில் பெல். எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியும் ஞாயிறு அன்று பனிரெண்டு மணிக்கு மேல்தான் வருவாள். சரி வேறே வழி இல்லை என்று எண்ணையில் தோய்த்தெடுத்த பஜ்ஜி போல ஹவுஸ் கோட்டுடன் வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்தால் இரண்டு மூன்று பேர். யாரென்று கூட தெரியவில்லை. ஏதானும் தேர்தல் வருகிறதோ , ஓட்டு கேட்க வந்திருக்கிறார்களோ அல்லது சென்செஸ் பேர்வழிகளா என்று பார்த்தால் 'பிள்ளை கல்யாணம்' என்று ஆரம்பித்தார்கள். அந்த காலத்து நண்பர்கள், பார்த்து பதினைந்து வருடம் ஆகி இருக்கும். அடையாளம் கண்டு பிடிக்கவே முழுதாய் ஒரு நிமிடம் ஆயிற்று. இத்தனை நாள் கழித்து பார்க்கிறோம், நானோ இந்த கோலத்தில். மானமே போச்சு. சரி உட்கார வைத்து விட்டு கொஞ்சம் டீசென்ட் ஆக உடை உடுத்தி வரலாம் என்று பார்த்தால் 'இல்லை உட்கார நேரமில்லை. நிறைய வீடு போக வேண்டும்' என்கிறார்கள். அங்கெல்லாம் போய் விட்டு இங்கே வரக்கூடாதோ! குளிக்கப் போன கணவரோ நிதானமாய் நிம்மதியாய் ஷவரில் வெந்நீரை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். Ignoring the elephant in the room என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது போல ஒரு conversation. எண்ணை சட்டி போல நான் இருந்த கோலம் அவர்களுக்கும் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். எனக்கோ 'பூமி பிளக்காதா உள்ளே போய் விட மாட்டோமா' என்ற நிலை. ஆனால் மேலே என்னமோ சாதாரணமாய் ' பெண் என்ன செய்கிறாள்? பிள்ளை எங்கே இருக்கிறான்? ' என்பது போல ஒரு சம்பாஷணை.
ஒரு வழியாய் அரை மணி நேரத்தில் போய் சேர்ந்தார்கள்.

முன்பெல்லாம் குறிப்பிட்ட நாட்களில் அல்லது நேரங்களில் சில காரியங்களை செய்யலாம் என்ற நியதிகள் , கட்டுப்பாடுகள் உண்டு. சில சமயம் அவை புரியாமல் இருக்கும். செவ்வாய்கிழமை செய்தால் என்ன, அமாவாசை அன்று போனால் என்ன என்று தோன்றும். நானே பல சமயம் இவற்றை எல்லாம் அபத்தம் என்று ஒதுக்கி இருக்கிறேன். நேற்றுதான் புரிந்தது எதற்காக இவை எல்லாம் ஆரம்பித்திருக்கலாம் என்று. இது போல் சில நியதிகள் இருந்தால் நமக்கும் நிச்சயமாய்த் தெரியும் இன்னின்ன நாட்களில் அ நேரங்களில் யாரும் வர மாட்டார்கள் என்று. அப்போது நாம் பாட்டுக்கு நிதானமாய் நம் அலுவல்களை முடித்துக் கொள்ளலாம். இன்றைய தேதியில் எல்லோரிடமும் தொலைபேசி இருக்கிறது. வரும் முன்பாக ஒரு கால் அடிக்க முடியாதா? குறைந்த பக்ஷமாய் நமக்கு முன் சென்ற வீட்டிலிருந்து கிளம்பும் போதாவது கூப்பிட்டு சொல்லலாமே. நாலைந்து பேர் இருக்கும் வீடு என்றால் பிரச்சினை இல்லை. யாரானும் ஒருவர் இருப்பார்கள். அவர்களை பேசிக்கொண்டிருக்கச் சொல்லி விட்டு நாம் தயாராகி வரலாம். எங்கள் வீடு போன்ற இடங்களில்தான் பிரச்சினை.
நான் ஒன்றும் இந்த social etiquette பற்றி மிகவும் கவலைப் படுபவள் இல்லை என்றாலும் விருந்தினர் முன்பு இருக்கவேண்டிய கோலத்துக்கு ஒரு எல்லை உண்டல்லவா. நமக்கே கூச்சமாய் இருக்கும் நிலையில் எப்படி ? சொல்வார்களே திரௌபதி சபைக்கு வந்த நிலையை பற்றி - கிட்டத்தட்ட அப்படிதான் எனக்கும். கிருஷ்ணன் வந்து ஒரு கண்ணியமான ஆடையை போர்த்த மாட்டாரா என்பது போல.

ஏற்கனவே இத்தனை எரிச்சலில் இருந்தேனா. இது போதாதென்று அவர்கள் பத்திரிக்கையைக் கொடுத்து கூடவே ஒரு சின்ன டப்பாவையும் கொடுத்தார்கள். என்னவென்று பிரித்துப் பார்த்தால் ஒரு சின்ன குங்கும கிண்ணம். உள்ளே ஒரு பொடி குங்குமம் கூட இல்லை. இது என்ன கூத்து? கல்யாணத்தில் மணமக்களுக்கு நாம்தான் ஆசீர்வாதமாய் பணமோ பொருளோ கொடுப்போம். அழைக்கப்பட்டவர்களுக்கு என்ன பரிசுப்பொருள்? வருவதற்கு ஊக்கப் பரிசா? இதையே முஹூர்த்தம் ஆன பின் தாம்பூலப் பையில் கொடுத்திருந்தால் கூட இத்தனை விசித்திரமாக இருந்திருக்காது. அதென்ன அழைப்புடன் ஒரு gift? முன்பெல்லாம் கல்யாணத்துக்கு அழைத்து வண்டி சத்தம் என்று ரயில் டிக்கெட்டுக்கான பணத்தையும் கொடுப்பார்களாம். அது போலவா இது?

என்னமோ போங்கள் மொத்தத்தில் ஒண்ணும் புரியவில்லை. இனிமேல் வாசலில் விசிடிங் hours ஒரு போர்டு போட்டு விட்டு மற்ற நேரத்தில் வருபவர்களுக்கு போஸ்ட் பாக்ஸ் தவிர ஒரு பெட்டியும் வைக்கலாம் என்று இருக்கிறேன் - இது போல பரிசுப் பொருட்களைப் போட்டு விட்டு செல்வதற்கு. அப்புறம் இது போல் பத்திரிக்கையோட gift கொடுத்த கல்யாணத்துக்கு போக முடியாவிட்டால் அப்படியே அவர்கள் கிளம்பும்போது அவர்கள் கையிலேயே கொஞ்சம் அட்சதையோடு gift கொடுத்தால் கோபித்துக் கொள்வார்களா என்ன? ச்சே ச்சே அதெல்லாம் கோவிக்க மாட்டாங்க. அவங்க ஆரம்பிச்சு வெச்சதைதானே நாமளும் பண்ணபோறோம், என்ன சொல்றீங்க... அவங்களுக்கு சௌகர்யமாய் வழக்கங்களை மாற்றிக் கொண்டிருப்பதைப்போல நாமும் கொஞ்சம் மாற்றினால் புரிந்து கொள்ள மாட்டார்களா என்ன?

ரொம்ப மண்டை காஞ்சு இருந்தேன். நேத்து தலைக்குப் போட்ட எண்ணை கூட பிரயோஜனப் படலை. அதான் உங்களிடம் சொல்லி கொஞ்சம் ஆறுதல் தேடலாமேன்னு. மனசுக்கு ஆறுதலாய் ஏதானும் சொல்லிட்டுப் போங்க.

Tuesday, November 2, 2010

தீப ஒளித் திருநாள்

என்ன உங்கள் வீட்டில் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலா ? தமிழக முதலமைச்சரின் ஆசியோடு நடக்கும் ஒரு தொலைக்காட்சியில் இதை தீப ஒளித் திருநாள் என்று சொல்கிறார்கள். கேட்க அழகாக இருக்கிறது ஏனென்றால் பலரும் தீபாவலி என்று வலிக்கும்படி சொல்வதை தவிர்க்கலாமே. இப்போதெல்லாம் பண்டிகைக் கொண்டாட்டம் என்றாலே புத்தாடை , விசேஷமான தின்பண்டங்கள் அப்புறம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று ஆகிவிட்டது போல் தோன்றுகிறது. ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையத்திலும் காலை 6 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணி வரையில் சிறப்பு நிகழ்ச்சிகள் அதிலும் முக்கால்வாசி சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்சிகள்தான். இதில் எனக்கு ஒரு பெரிய சந்தேகம் , இல்லை இரண்டு பெரிய சந்தேகங்கள். இப்படி நாள் முழுதும் சிறப்பு நிகழ்ச்சிகள் போட்டால் வீட்டில் எப்போது சமையல் எல்லாம் நடக்கும்? இல்லை சமையல் அறையிலேயே தொலைக்காட்சி வைத்திருப்பார்களோ? அப்புறம் இப்படி சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டே இருந்தால் கோவிலுக்குப் போவது, அக்கம்பக்க நண்பர்கள் வீட்டுக்குச் சென்று வாழ்த்தி வருவது அல்லது குடும்பமாய் உட்கார்ந்து விருந்து சாப்பிடுவது இதெல்லாம் எப்படி நடக்கும்? இவற்றுக்க்காகத்தான் மிக நீண்ட விளம்பர இடைவேளைகள் கொடுக்கிறார்கள் போல இருக்கிறது.
இந்த விசேஷ தினங்களில் எனக்குப் பிடித்த நிகழ்ச்சி பட்டிமன்றம். இதை நிதானமாய் மத்தியானமாய் காண்பிக்கக் கூடாதா? காலையில் 10 30 மணிக்குள் அவசரமாய் முடித்து விடுவார்கள். நான் சமையல் வேலை எல்லாம் முடிந்து டிவி முன் வரு முன் இதெல்லாம் முடிந்து போய் ஏதோ ஒரு அஜித் படமோ அல்லது விஜய் படமோ உலகத்திலேயே முதல்முறையாக காண்பிப்பார்கள். அப்புறம் மதியம் முழுவதும் முன் பின் தெரியாத நடிகைகள் அவர்கள் வீட்டு தீவாளி பற்றி புரியாத தமிழில் பேசுவார்கள். தொலைக்காட்சிக்காரகள் இந்நிகழ்சிகளைக் கண்டு ரசியுங்கள் என்று வேறே அடிக்கடி சொல்வார்கள். என்னத்தை ரசிக்கிறது?
இந்த பெங்களூரில் வேறே தீபாவலி கார்த்திகை என்றால் போதும் மழையும் காற்றும் தவறாமல் வந்து விடும். அப்புறம் என்ன தீபம் ஏற்றுவது? குடத்துக்குள்ளேதான் ஏற்றணும்.
அதென்னமோ இந்தப் புடவைக் கடைக்காரர்கள் விளம்பரங்களில்தான் தீபாவளி பார்த்தாலே ஆசைப்படும்படி இருக்கிறது. பெரிய பெரிய கோலங்கள், பட்டுப்பாவடையில் குட்டிக் குழந்தைகள் பட்டாசு கொளுத்துகிறார்கள், இளம்பெண்கள் அழகான போத்தீஸ் புடைவைகளில் வலம் வருகிறார்கள், எல்லோரும் குடும்பமாய் உட்கார்ந்து சிரிக்கிறார்கள். யாரும் தொலைகாட்சி முன் உட்கார்ந்து த்ரிஷா வீட்டு தீபாவளி பார்ப்பதே இல்லை.

உங்கள் வீட்டு தீபாவளி பற்றி சொல்லுங்கள்.
அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பி கு: ஒரு கேள்வி, எனக்குத் தெரிந்த சிலர் இந்த பதிவுகளை ஆங்கில ஸ்க்ரிப்டில் எழுத சொல்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியும் ஆனால் படிக்க வராதாம். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Wednesday, October 20, 2010

எந்திரன்

எந்திரன் படம் பார்த்தேன். பல வருடங்களுக்கு முன்பாக ரஜினியை புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும் போன்ற படங்களில் ரசித்திருக்கிறேன். இவை தவிர அவர் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை அவர்கள், நினைத்தாலே இனிக்கும், குரு சிஷ்யன், தில்லுமுல்லு , தளபதி. நல்ல நடிகர். ஆனால் அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கி அவருக்குள்ளே இருக்கும் ஒரு சிறந்த நடிகரை அழித்து விட்டார்களே என்ற வேதனை எனக்கு எப்பவும் உண்டு.
படத்தை ரஜனிகாந்தால் மட்டும்தான் இப்படி ஒரு வெற்றிப்படம் ஆக்கி இருக்க முடியும். வேறு யார் நடித்திருந்தாலும் 'காதுலே பூ' என்று ஒதுக்கி இருப்பார்கள். அனால் அவருள்ளே இருக்கும் அபாரமான நடிப்புத் திறமைக்கு சவாலான ஒரு திரைக்கதை யாரிடமும் இன்று இல்லையா என்ற ஆதங்கம் மேலிடுகிறது.

நூறு மனிதர்களின் ஆற்றல் சக்தி படைத்த இந்த ரோபோட் டால் எத்தனையோ செய்ய முடியும் ஆனால் அதுவும் ஐஸ்வர்யாவின் அழகில் மயங்கி அவளை அடைய வேண்டும் என்று அலைகிறது. வேறு எந்தப்பெண்ணையும் இந்த நெருக்கத்தில் பார்க்காததினால் இருக்கலாம். அவள்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிகிறது. இன்னும் இரண்டு அழகான இளம் பெண்களை அதற்கு முத்தம் கொடுக்கச் சொல்லி இத்தனை கஷ்டங்களைத் தவிர்த்திருக்கலாம். எந்தப் பெண்ணாலும் தன்னுடைய ஹார்மோன் ப்ரவாஹத்தை தணிக்க முடியும் என்று அதனுடைய அறிவுக்குத் தெரிந்து போயிருக்கும்.
(அபிஷேக் பச்சன் கவனிக்கவும்: எங்கேயாவது ரோபோட் சல்லிசா கிடைத்தால் கூட வாங்கிண்டு வந்துடாதீங்க. இந்த மாதிரி ஒரு மனைவியை வீட்டிலே வெச்சுகிட்டு ரொம்ப ஆபத்தான விஷயம்!)
அது சரி அந்த ரோபோட் சிட்டி காட்டுகிற அளவு உணர்சிகளைக் கூட இந்த ஐஸ்வர்யா முகத்தில் காணுமே. ஒருக்கால் அவர்தான் ரோபோட்டோ என்ற சந்தேஹம் வரும் அளவிற்கு உணர்ச்சி காட்டாமல் வந்து போகிறார். அருமையாக நடனம் ஆடுகிறார். ஆனால் கொஞ்சம் அசடான கேரக்டர் - படிக்காமல் பரிட்சையில் பிட் அடிக்கிறது, ஊர் பேர் தெரியாதவனைப் போய் ஒரு நாள் பாய் பிரெண்ட் ஆக இருக்கிறாயா என்று கேட்டு பிரச்சினையை விலை கொடுத்து வாங்குகிறது என்று அசட்டுத்தனமான பெண் . இத்தனை புத்திசாலியான வசீ இந்த அசடை பேசாமல் சிட்டிக்கு விட்டுக் கொடுத்து விட்டு கொஞ்சம் புத்தியுள்ள பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்திருக்கலாம். படம் இண்டர்வல்லில் முடிந்து போயிருக்கும்.
பிரம்மாண்டம் காட்டி இருக்க முடியாது. 150 கோடி செலவழித்து ரெகார்ட் பண்ணி இருக்க முடியாது. ஷங்கருக்கு வேலை இல்லாமல் போய் இருக்கும்.
என்னவோ கொடுத்த நூறு ரூபாய்க்கு என்னென்னமோ வித்தை காண்பித்தார்கள்- பெரியவர்களுக்கான கார்டூன் படம் மாதிரி. மாச்சு பிச்சு என்று அழகான இடங்கள் எல்லாம் காண்பித்தார்கள். ஐஸ்வர்யாவுக்குக் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்ததை வசூல் பண்ணவேன்டியோ என்னவோ தேவை இல்லாத இடங்களில் எல்லாம் பாட்டுக்கள் வேறே. சத்தம் கொஞ்சம் அதிகம். காதில் ஏதோ ரீங்காரம் இருந்துகொண்டே இருந்தது.

ரஜினி படங்களில் காமெடி என்று தனி track தேவையே இல்லை. அவரே அருமையாக காமெடி பண்ணுவார். இங்கே சந்தானம், கருணாஸ் என்று தேவையே இல்லாமல் மொக்கையான காமெடி track. சத்தே இல்லாமல் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் கதையை பல நேரங்களில் கெடுக்கும் வகையில் இருந்தது அவர்கள் காமெடி.

அதெல்லாம் சரி... இந்த grade 2 , 3 என்பதெல்லாம் அரசாங்க லேப் லே தானே இருக்கும்? வசீகரன் அரசாங்க லேப் லையா சிட்டியை உருவாக்கி இருக்கார்? அப்படின்னா எப்படி சிட்டியை அவ்ளோ சுலபமா சானாவோட அனுப்பினார்? 4 மேல் அதிகாரிகள் கிட்டே triplicate லே authorisation வாங்கினால்தானே முடியும்?

அவ்ளோ ரகசியமா அந்த போரா அத்தனை ரோபோக்களை பண்ணி வெச்சிருக்கார்?அதுவும் ரெடி யா பவர் சார்ஜ் பண்ணி. எனக்கு எங்கே வீட்டுலே இருக்கற 4 மெஷின்களுக்கு ரெகுலரா பவர் கட் இல்லாமே பவர் வாங்கவே உயிர் போகிறதே?
இல்லே அரசாங்க லேப் தானே என்ன வேணா நடக்கும் அப்டீங்கறீங்களா? அதுவும் சரிதான்.

எல்லாத்தையும் விட அந்த சனா வைக் கடத்தின உடனே FIR கூட file செய்யறதுக்குள்ளே அத்தனை போலிஸ்காரங்க அது பின்னாடி வந்தாங்க பாருங்க. எந்த சயன்டிஸ்ட் கல்யாணத்துக்கு இந்த போலிஸ் பாதுகாப்பு கெடைக்கும்? வேணா முதல் அமைச்சர் வீட்டுக் கல்யாணத்துக்கு கெடைக்கும்.
அப்புறம் முதல்நாள் சேகரிச்ச குப்பையை அப்டியே உடனே பெருங்குடியில் கொண்டு கொட்டிடுவாங்களாம். அதுவும் government லேப் வேஸ்ட் டை . ஏன்யா வயிற்றெரிச்சலைக் கெளப்பறீங்க....
இதெல்லாம்தான் கொஞ்சம் சயன்ஸ் பிக்ஷேன் மாதிரி இருந்தது.

ரஜினி சார், தளபதி மாதிரி இன்னொரு படம் எப்போ பண்ணுவீங்க?

Monday, September 27, 2010

நினைவில் நின்றதும் , நெஞ்சைத் தொட்டதும்

ஜெயா டிவி யில் ஹரியுடன் நான் என்று ஒரு நிகழ்ச்சி. நல்ல பாடகர் ஒருவரைத தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பாடுவதை விட ஹரிஹரன் ஜேம்ஸ் வசந்தன் மற்றும் சரத் வாசுதேவன் அவர்கள் பாடியதை விமர்சிப்பது மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. அதுவும் சரத் மிகவும் நகைச்சுவையோடு விமர்சிப்பார். கடந்த வாரம் பாலச்சந்தர், M.S.
விஸ்வநாதன் மற்று இயக்குனர் வசந்த் வந்திருந்தார்கள். K.B, M.S.V. கூட்டணிப் பாடல்கள் என்னுடைய இளமை காலத்துப் பாடல்கள். பல சமயங்களில் காலையில் என்ன சாப்பிட்டேன் என்பதே மறந்து போகும் எனக்கு அந்த வரிகள் இன்னும் நினைவு இருப்பது எனக்கே ஆச்சரியம். அத்துணை அருமையான பாடல் வரிகள், இனிமையான இசை - இன்றும் என்னுடைய sub conscious memory யில் அழியாமல் இருக்கின்றன. சில பாடல்களைப் பற்றி அவர்கள் சொன்ன பின்னணிச் செய்திகள் இன்னும் சுவாரசியமாக இருந்தன.
'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில்தான் முதல்முறையாக slow motion shots உபயோகப்படுத்தப்படனவாம். வசந்த் சொன்னார். அதே படத்தில் தான் முதன்முறையாக reverse technique க்கை கையாண்டிருப்பதாக K.B. சொன்னார். இது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சுபா சிவகுமாரை நம்பிக்கையோடு காதலிக்கும் பொது பால் பொங்கி வரும் ('ஆசை பொங்குது பால் போலே ') பிறகு அந்த காதல் கை கூடாது போகும்போது பொங்கிய பால் அப்படியே பாத்திரத்தினுள் அடங்கிப் போகும். இதே போல ஸ்ரீவித்யாவின் காதலுக்கு அடையாளமாய் புகையையும் இப்படியே பயன் படுத்தி இருப்பார். (காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே)

இன்னொரு போட்டியாளர் "அவர்கள்' படத்திலிருந்து 'இங்கும் அங்கும் பாதை உண்டு' பாடலைப் பாடினார். இந்தப் பாடலை கவிஞரின் பிறந்தநாள் விழாவில் வந்திருந்தவர்கள் முன்னிலையிலேயே on-the-spot எழுதி compose செய்தார்களாம். எப்படிப்பட்ட பாடல் - என்ன ஒரு genius? மெட்டுக்குப் பாட்டு எழுதுவதென்பது அந்த காலத்தில மிகவும் அபூர்வம். அதுவும் K.B. படங்களில் பாடல்கள் கதையை ஒட்டி அமைந்திருக்கும். பல சமயங்களில் முக்கியமான முடிவுகளுக்கான அடிப்படை காரணம் பாடல்களிலேயே சொல்லப்பட்டுவிடும், இது போல் plot progression னுக்கு உறுதுணையாக இருக்கும் வரிகள் மிகவும் முக்கியமானதால் அநேகமாக வரிகளும் இசையும் இணைந்து compose செய்ய வேண்டும். ஆனால் 'வான் நிலா நிலா அல்ல' என்ற பட்டினப் பிரவேசம்' படப் பாடல் மெட்டுக்கு எழுதப்பட்டதாம். M.S.V. யின் இந்த மெட்டு K.B. க்கு ரொம்ப பிடித்துப் போனதால் எப்படியாவது இந்த மெட்டுக்கு கவிஞரிடம் ஒரு பாடல் வாங்கி விடுங்கள் என்று K.B. கேட்டுக் கொண்டாராம். ' நா நா' என்று M.S.V மெட்டைப் பாடிக் காட்டியபோது கவிஞர் 'நா நா என்று என்னத்தை எழுதுவது' என்று அலுத்துக் கொண்டாராம். பிறகு M.S.V ' லா" என்று அதே மெட்டை போட்டதும் 'சரி இந்தா "லா லா என்றே பாட்டு எழுதி தருகிறேன் என்று சொல்லி இந்தப் பாட்டை எழுதித் தந்தாராம். இந்தப்பாடலில் அநேகமான வார்த்தைகளும் ஒவ்வொரு வரியும் லா என்றே முடியும்
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும நிலா என் தேவியின் நிலா
நீ இல்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
இப்படி.

மூன்று முடிச்சு படத்தில் வந்த 'ஆடி வெள்ளி தேடி வந்து" என்ற பாடலில் அந்தாதி பாணியைக் கையாண்டிருப்பது பற்றியும் சொன்னார் K.B. அவர் பல புதுமைகளை செய்து முன்னோடியாக இருந்திருக்கிறார். அதில் எனக்கு மிகவும் பிடித்தது 'வறுமையின் நிறம் சிகப்பு' படத்தில் "சிப்பி இருக்குது முது இருக்குது" பாடலில் ஸ்ரீதேவி மெட்டு சொல்ல கமல் பாடல் வார்த்தைகள் சொல்லுவது. இப்படித்தான் கவிஞரும் , M.S.V யும் வேலை செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
(ஒரு முறை கவிஞர் அரை மணிக்குள் பாடல் எழுதியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இது "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற படத்தில் வரும்
"ஆண்டவன் இல்லா உலகம் இது" என்ற பாட்டு.)

நிகழ்ச்சியில் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், கனாக் காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல, தெய்வம் தந்த வீடு , முத்துக் குளிக்க வாரீஹலா என்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பாடப் பாட K.B.யும், M.S.V யும் கட்டிக்கொள்ளாத குறைதான். நானும் அப்படியே மலரும் நினைவுகளில் மூழ்கி விட்டேன். இன்றைய பாடல்களில் எத்தனை பாடல்கள் இது போல் காலம் கடந்து நிற்கும் என்பது கேள்விக்குறிதான். ஒருவேளை இந்த பாடல்களெல்லாம் என்னுடைய தலைமுறைக்குதான் நெஞ்சில் நிறைந்தவையா என்றும் எனக்குதெரியாது. மொத்தத்தில் மிக அருமையான ஒரு நிகழ்ச்சி.

நிகழ்ச்சியை அளிக்கும் விளம்பரதாரர்கள் Bru காபி:
விளம்பரமும் அருமையோ அருமை.
அந்த
பெண் கவலையே இல்லாமல் இரண்டாவது decoction இறக்குவதற்கு வெந்நீர் போடுவதாகட்டும், விருந்தினர்கள் இரண்டாவது decoction என்று கண்டு பிடித்து விடுவார்களோ என்ற மாமியாரின் கவலைக்கு கூல் ஆக "உங்களுக்கு எப்போவாவது தெரிஞ்சுதா?" என்று கேட்பதாகட்டும், அப்புறம் வந்தவர்கள் காபியை 'பிரமாதம்'என்று பாராட்டும் போது இருவரும் பார்வை பரிமாறுவதாகட்டும். இரண்டு நிமிடத்துக்குள் ஒரு சின்ன கதையே சொல்லி விடுகிறார்கள் அதுவும் முற்றிலும் யதார்த்தமாக. இந்த பெண் யாரோ. பாலச்சந்தர் பார்த்தால் அப்படியே அடுத்த படத்தில் போட்டு விடுவார். அவ்வளவு இயல்பான நடிப்பு. கால் சென்டிமீட்டர் மாத்திரம் கண்ணையும் உதட்டையும் அகட்டி குறும்பு, விஷமம், கிண்டல் எல்லாவற்றையும் வெளிபடுத்தும் திறமை அந்த பெண்ணிடம். முகமும் அவ்வளவு அழகாய் ஒத்துழைக்கிறது.
சில
சமயம் தோன்றுகிறது இன்றைக்கு வரும் விளம்பரப் படங்களில் இருக்கும் creativity மற்றும் technical excellence முழு நீளப் படங்களில் கூட இல்லையோ என்று.
இங்கே சில நாட்களாக பதிவு செய்யப் பல தடைகள். சில நாட்கள் இணையத் தொடர்பில் குளறுபடி. சில நாட்கள் தமிழில் transliteration செய்வதில் தடங்கல்கள். எல்லாவற்றையும் மீறி இன்றைக்குப் பதிவு செய்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செய்தும் விட்டேன்.
அப்புறம் என்ன செய்தி, நீங்கள் சொல்லுங்கள்...

Monday, September 13, 2010

பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு பண்டம்

சமீபத்தில் பாலக்காட்டில் ஒரு குடும்ப வைபவத்திற்கு போயிருந்தோம். காலை உணவுக்கு எங்களை அழைத்திருந்த வீட்டில் ராமசெரி இட்லி என்ற பெயர் பலமுறை சொல்லப்பட்டது. "வாருங்கள் ராமசெரி இட்லி வந்தாச்சு' என்றார் ஒருவர். சற்று நேரத்தில் இன்னொருவர் 'ராமசெரி இட்லி ஆறிப் போய் விடப்போகிறது. சாப்பிட வாருங்கள்' என்றார். பரமாறியவர் 'ம்ம், ராமசெரி இட்லி எப்படி, நன்றாக இருக்கிறதா?' என்றார். அப்படி அதில் என்னதான் விசேஷம் என்று பார்த்தால் ஆவியில் வைத்த தோசை போன்ற ஒரு பதார்த்தம். மிருதுவாக இருந்தது. ருசி நம் இட்லி போலத்தான். இலையில் வைத்த இரண்டை சாப்பிட்டு முடித்ததும் இன்னொருவர் வந்து "இன்னும் ரெண்டு போட்டுக் கொள்ளுங்கள். இது இங்கே விட்டால் வேறு எங்கும் கிடைக்காது.' என்றார். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பார்களே அந்த கதை போல எனக்கு இந்த பதார்த்தத்தில் அப்படி என்ன விசேஷம் என்றே புரியவில்லை. ராமசெரி இட்லி இல்லை என்றால் என்ன எங்கள் ஊரில் எங்கும் இட்லி கிடைக்குமே. ஒரே பதார்த்தம்தானே, வடிவம்தான் வேறு மாதிரி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

ஏறக்குறைய ஒரே மாதிரி ருசி உள்ள பதார்தங்களுக்காக மிகவும் மெனக்கிடுவது எனக்குப் புரியாத விஷயம். இப்படித்தான் சேவை என்னும் சிற்றுணவை செய்வதற்கு எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மிகவும் சிரமம் எடுத்துக் கொள்வார்கள். இதை இடியாப்பம் என்றும் சொல்வார்கள். இப்போதெல்லாம் அது instant வடிவத்தில் கிடைக்கிறது. பாக்கெட்டை பிரித்து வெந்நீரில் கொதிக்க வைத்தால் தயார். ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் இது ஒரு industrial process போல அவ்வளவு சிரமமான சமாசாரம். அரிசியை ஊறவைத்து, இடித்து மாவு கிளறி அப்புறம் இதற்காகவே உபயோகப்படும் ஒரு இயந்திரத்தில் இந்த மாவை அடைத்து அதை மிகவும் சிரமப்பட்டுப் பிழிந்து பின்னர் இதற்கு வித விதமான தாளிதம் செய்து தயாரிப்பார்கள். இதில் ஏதாவது ஒரு கட்டத்தில் இசகு பிசகானாலும் பண்டத்தின் ருசி குறைந்து போகும். இறுதியில் பார்த்தால்
ருசி என்னமோ ஏறக்குறைய எலுமிச்சம்பழ சாதம், தேங்காய் சாதம் போலத்தான்
இருக்கும்.(சேவைப் பிரியர்கள் அடிக்க வராதீர்கள். 'ஏறக்குறைய' என்றுதான் முதலிலேயே சொன்னேனே .)
இப்படித்தான் ஒரு மாமி வீட்டில் ஒருமுறை மிகவும் கஷ்டப்பட்டு சேவை தயாரித்துக் கொடுத்தாள். நானோ நன்றாக சாப்பிட்டு விட்டு 'ஏன் மாமி இந்தக்
கஷ்டம் , வெறும் தேங்காய் சாதம் , எலுமிச்சம்பழ சாதமே கொடுத்திருந்தாலும் போதுமே ' என்று சொல்லிவிட்டேன் . மாமிக்கு வந்ததே கோபம். உனக்காக பட்டு நூல் போல சேவை பண்ணி இருக்கிறேன் இப்படி சொல்லி விட்டாயே என்று நொந்து போனாள்.

பிடி கொழுக்கட்டை என்றொரு சிற்றுண்டி. அரிசி உப்புமாவை அருமையாகத் தயாரித்துபின் அதை உருட்டி இட்லி போல வேக வைத்துக் கொடுப்பார்கள். ஏன் அதை உப்புமாவாகவே சாப்பிடலாமே. எதற்கு இன்னொரு கூடுதல் கட்டம்?
உடம்பு சுகம் இல்லாதவர்கள், வயதானவர் அல்லது குழந்தைகள் போன்ற ஜீரண சக்தி குறைதவர்களுக்கு இந்த இரட்டை வேக்காடுதேவைப்படும். மற்றபடி நாக்கு ருசிக்காகவே சாபிடுவோருக்கு இந்த கூடுதல் வேக்காட்டின் மூலம் ஒரு வித்யாசமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உருவம் மட்டும்தான் வேறுபடும். இல்லை ஒருவேளை ருசியும் நுணுக்கமாக வேறுபடுமோ எனக்குத்தான் அவ்வளவு தெரியவில்லையோ. அதுவும் தெரியாது. ஆனால் இத்தனை நுணுக்கமான சுவை வித்யாசத்துக்காக நான் மெனக்கிட மாட்டேன்.

ஆனாலும் இந்த ராமசெரி இட்லியில் அப்படி என்னதான் இருக்கிறது என்று வலை வீசிப் பார்த்ததில் கிடைத்தது இங்கே:
From http://en.wikipedia.org/wiki/Idli

Ramasseri idli

Ramasseri, an offbeat village in Palakkad is known all over Kerala for the idlis it makes—the delicious Ramasseri Idli. Spongy and soft Ramasseri Idli is slightly different in shape from the conventional idlis. It is a little flat and round. Ramasseri Idli is eaten with Podi mixed in coconut oil. The beginning was from a Mudaliar family living near Mannath Bhagavathi Temple in Ramasseri near Elappully.[citation needed]

The recipe of Ramasseri idli dates back to about one century, which again is a trade secret. The Muthaliyar family had migrated to Palakkad from Kanchipuram in Tamil Nadu. The new generation in the profession says that the secret of the recipe and taste were handed down to them from the older women of the community. Now the idli business is confined to four families in Ramasseri. Selection of rice is very important in making Ramasseri idli. Usually the varieties used are Kazhama, Thavalakannan, Ponni etc.

The taste depends on the boiling of paddy itself. Drying and dehusking are also important and need to be done in a particular way. The combination of rice and black gram is also equally important. For 10 kg of rice, one kg of black gram is used. Idli is made only after four hours of fermentation. Steaming of the idli is done on a cloth covered on the mud pot using firewood. This allegedly provides a special taste to the preparation. Leftover Idli can be torn into crumbs and used for preparing dishes such as Idli fry and Idli Upma.

இதை சமைக்கும் முறையை விளக்கும் எழுத்தும் புகைப்படமும் இங்கே:
இப்போது புரிகிறது ஏன் அதனை முறை அந்தப பண்டத்தின் பெயரைத் திரும்ப திரும்ப சொன்னார்கள் என்று. அந்த சின்ன வட்டத்துக்குள் அவ்வளவு விஷயம் இருக்குது. இதை முதலிலேயே படித்து விட்டுப் போயிருந்தால் நானும் இதைப் பற்றி கொஞ்சம் சிலாஹித்துப் பேசி இருக்கலாம். அவர்களும் இவ்வளவு சிரமப்பட்டது வீண் போகவில்லை என்று சந்தோஷப் பட்டிருப்பார்கள். நீங்கள் அடுத்த முறை பாலக்காட்டுபக்கம் போனால் இதை கட்டாயம் ருசித்துப் பாருங்கள்.
ஸ்ஸ்ஸ்..அப்புறம் வந்து அதில் அப்படி என்ன ருசி இருக்கிறது என்று என்னிடம்சொல்லுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன் அந்த கற்பூர வாசத்தைபற்றி.