Monday, September 27, 2010
நினைவில் நின்றதும் , நெஞ்சைத் தொட்டதும்
விஸ்வநாதன் மற்று இயக்குனர் வசந்த் வந்திருந்தார்கள். K.B, M.S.V. கூட்டணிப் பாடல்கள் என்னுடைய இளமை காலத்துப் பாடல்கள். பல சமயங்களில் காலையில் என்ன சாப்பிட்டேன் என்பதே மறந்து போகும் எனக்கு அந்த வரிகள் இன்னும் நினைவு இருப்பது எனக்கே ஆச்சரியம். அத்துணை அருமையான பாடல் வரிகள், இனிமையான இசை - இன்றும் என்னுடைய sub conscious memory யில் அழியாமல் இருக்கின்றன. சில பாடல்களைப் பற்றி அவர்கள் சொன்ன பின்னணிச் செய்திகள் இன்னும் சுவாரசியமாக இருந்தன.
'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில்தான் முதல்முறையாக slow motion shots உபயோகப்படுத்தப்படனவாம். வசந்த் சொன்னார். அதே படத்தில் தான் முதன்முறையாக reverse technique க்கை கையாண்டிருப்பதாக K.B. சொன்னார். இது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சுபா சிவகுமாரை நம்பிக்கையோடு காதலிக்கும் பொது பால் பொங்கி வரும் ('ஆசை பொங்குது பால் போலே ') பிறகு அந்த காதல் கை கூடாது போகும்போது பொங்கிய பால் அப்படியே பாத்திரத்தினுள் அடங்கிப் போகும். இதே போல ஸ்ரீவித்யாவின் காதலுக்கு அடையாளமாய் புகையையும் இப்படியே பயன் படுத்தி இருப்பார். (காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே)
இன்னொரு போட்டியாளர் "அவர்கள்' படத்திலிருந்து 'இங்கும் அங்கும் பாதை உண்டு' பாடலைப் பாடினார். இந்தப் பாடலை கவிஞரின் பிறந்தநாள் விழாவில் வந்திருந்தவர்கள் முன்னிலையிலேயே on-the-spot எழுதி compose செய்தார்களாம். எப்படிப்பட்ட பாடல் - என்ன ஒரு genius? மெட்டுக்குப் பாட்டு எழுதுவதென்பது அந்த காலத்தில மிகவும் அபூர்வம். அதுவும் K.B. படங்களில் பாடல்கள் கதையை ஒட்டி அமைந்திருக்கும். பல சமயங்களில் முக்கியமான முடிவுகளுக்கான அடிப்படை காரணம் பாடல்களிலேயே சொல்லப்பட்டுவிடும், இது போல் plot progression னுக்கு உறுதுணையாக இருக்கும் வரிகள் மிகவும் முக்கியமானதால் அநேகமாக வரிகளும் இசையும் இணைந்து compose செய்ய வேண்டும். ஆனால் 'வான் நிலா நிலா அல்ல' என்ற பட்டினப் பிரவேசம்' படப் பாடல் மெட்டுக்கு எழுதப்பட்டதாம். M.S.V. யின் இந்த மெட்டு K.B. க்கு ரொம்ப பிடித்துப் போனதால் எப்படியாவது இந்த மெட்டுக்கு கவிஞரிடம் ஒரு பாடல் வாங்கி விடுங்கள் என்று K.B. கேட்டுக் கொண்டாராம். ' ந ந நா ந ந நா' என்று M.S.V மெட்டைப் பாடிக் காட்டியபோது கவிஞர் 'நா நா என்று என்னத்தை எழுதுவது' என்று அலுத்துக் கொண்டாராம். பிறகு M.S.V 'ல ல லா" என்று அதே மெட்டை போட்டதும் 'சரி இ ந இந்தா "லா லா என்றே பாட்டு எழுதி தருகிறேன் என்று சொல்லி இந்தப் பாட்டை எழுதித் தந்தாராம். இந்தப்பாடலில் அநேகமான வார்த்தைகளும் ஒவ்வொரு வரியும் லா என்றே முடியும்
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும நிலா என் தேவியின் நிலா
நீ இல்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
இப்படி.
மூன்று முடிச்சு படத்தில் வந்த 'ஆடி வெள்ளி தேடி வந்து" என்ற பாடலில் அந்தாதி பாணியைக் கையாண்டிருப்பது பற்றியும் சொன்னார் K.B. அவர் பல புதுமைகளை செய்து முன்னோடியாக இருந்திருக்கிறார். அதில் எனக்கு மிகவும் பிடித்தது 'வறுமையின் நிறம் சிகப்பு' படத்தில் "சிப்பி இருக்குது முது இருக்குது" பாடலில் ஸ்ரீதேவி மெட்டு சொல்ல கமல் பாடல் வார்த்தைகள் சொல்லுவது. இப்படித்தான் கவிஞரும் , M.S.V யும் வேலை செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
(ஒரு முறை கவிஞர் அரை மணிக்குள் பாடல் எழுதியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இது "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற படத்தில் வரும்
"ஆண்டவன் இல்லா உலகம் இது" என்ற பாட்டு.)
நிகழ்ச்சியில் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், கனாக் காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல, தெய்வம் தந்த வீடு , முத்துக் குளிக்க வாரீஹலா என்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பாடப் பாட K.B.யும், M.S.V யும் கட்டிக்கொள்ளாத குறைதான். நானும் அப்படியே மலரும் நினைவுகளில் மூழ்கி விட்டேன். இன்றைய பாடல்களில் எத்தனை பாடல்கள் இது போல் காலம் கடந்து நிற்கும் என்பது கேள்விக்குறிதான். ஒருவேளை இந்த பாடல்களெல்லாம் என்னுடைய தலைமுறைக்குதான் நெஞ்சில் நிறைந்தவையா என்றும் எனக்குதெரியாது. மொத்தத்தில் மிக அருமையான ஒரு நிகழ்ச்சி.
நிகழ்ச்சியை அளிக்கும் விளம்பரதாரர்கள் Bru காபி:
விளம்பரமும் அருமையோ அருமை.
அந்த பெண் கவலையே இல்லாமல் இரண்டாவது decoction இறக்குவதற்கு வெந்நீர் போடுவதாகட்டும், விருந்தினர்கள் இரண்டாவது decoction என்று கண்டு பிடித்து விடுவார்களோ என்ற மாமியாரின் கவலைக்கு கூல் ஆக "உங்களுக்கு எப்போவாவது தெரிஞ்சுதா?" என்று கேட்பதாகட்டும், அப்புறம் வந்தவர்கள் காபியை 'பிரமாதம்'என்று பாராட்டும் போது இருவரும் பார்வை பரிமாறுவதாகட்டும். இரண்டு நிமிடத்துக்குள் ஒரு சின்ன கதையே சொல்லி விடுகிறார்கள் அதுவும் முற்றிலும் யதார்த்தமாக. இந்த பெண் யாரோ. பாலச்சந்தர் பார்த்தால் அப்படியே அடுத்த படத்தில் போட்டு விடுவார். அவ்வளவு இயல்பான நடிப்பு. கால் சென்டிமீட்டர் மாத்திரம் கண்ணையும் உதட்டையும் அகட்டி குறும்பு, விஷமம், கிண்டல் எல்லாவற்றையும் வெளிபடுத்தும் திறமை அந்த பெண்ணிடம். முகமும் அவ்வளவு அழகாய் ஒத்துழைக்கிறது.
சில சமயம் தோன்றுகிறது இன்றைக்கு வரும் விளம்பரப் படங்களில் இருக்கும் creativity மற்றும் technical excellence முழு நீளப் படங்களில் கூட இல்லையோ என்று.
இங்கே சில நாட்களாக பதிவு செய்யப் பல தடைகள். சில நாட்கள் இணையத் தொடர்பில் குளறுபடி. சில நாட்கள் தமிழில் transliteration செய்வதில் தடங்கல்கள். எல்லாவற்றையும் மீறி இன்றைக்குப் பதிவு செய்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செய்தும் விட்டேன்.
அப்புறம் என்ன செய்தி, நீங்கள் சொல்லுங்கள்...
Monday, September 13, 2010
பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு பண்டம்
ஏறக்குறைய ஒரே மாதிரி ருசி உள்ள பதார்தங்களுக்காக மிகவும் மெனக்கிடுவது எனக்குப் புரியாத விஷயம். இப்படித்தான் சேவை என்னும் சிற்றுணவை செய்வதற்கு எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மிகவும் சிரமம் எடுத்துக் கொள்வார்கள். இதை இடியாப்பம் என்றும் சொல்வார்கள். இப்போதெல்லாம் அது instant வடிவத்தில் கிடைக்கிறது. பாக்கெட்டை பிரித்து வெந்நீரில் கொதிக்க வைத்தால் தயார். ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் இது ஒரு industrial process போல அவ்வளவு சிரமமான சமாசாரம். அரிசியை ஊறவைத்து, இடித்து மாவு கிளறி அப்புறம் இதற்காகவே உபயோகப்படும் ஒரு இயந்திரத்தில் இந்த மாவை அடைத்து அதை மிகவும் சிரமப்பட்டுப் பிழிந்து பின்னர் இதற்கு வித விதமான தாளிதம் செய்து தயாரிப்பார்கள். இதில் ஏதாவது ஒரு கட்டத்தில் இசகு பிசகானாலும் பண்டத்தின் ருசி குறைந்து போகும். இறுதியில் பார்த்தால்
ருசி என்னமோ ஏறக்குறைய எலுமிச்சம்பழ சாதம், தேங்காய் சாதம் போலத்தான்
இருக்கும்.(சேவைப் பிரியர்கள் அடிக்க வராதீர்கள். 'ஏறக்குறைய' என்றுதான் முதலிலேயே சொன்னேனே .)
இப்படித்தான் ஒரு மாமி வீட்டில் ஒருமுறை மிகவும் கஷ்டப்பட்டு சேவை தயாரித்துக் கொடுத்தாள். நானோ நன்றாக சாப்பிட்டு விட்டு 'ஏன் மாமி இந்தக்
கஷ்டம் , வெறும் தேங்காய் சாதம் , எலுமிச்சம்பழ சாதமே கொடுத்திருந்தாலும் போதுமே ' என்று சொல்லிவிட்டேன் . மாமிக்கு வந்ததே கோபம். உனக்காக பட்டு நூல் போல சேவை பண்ணி இருக்கிறேன் இப்படி சொல்லி விட்டாயே என்று நொந்து போனாள்.
பிடி கொழுக்கட்டை என்றொரு சிற்றுண்டி. அரிசி உப்புமாவை அருமையாகத் தயாரித்துபின் அதை உருட்டி இட்லி போல வேக வைத்துக் கொடுப்பார்கள். ஏன் அதை உப்புமாவாகவே சாப்பிடலாமே. எதற்கு இன்னொரு கூடுதல் கட்டம்?
உடம்பு சுகம் இல்லாதவர்கள், வயதானவர் அல்லது குழந்தைகள் போன்ற ஜீரண சக்தி குறைதவர்களுக்கு இந்த இரட்டை வேக்காடுதேவைப்படும். மற்றபடி நாக்கு ருசிக்காகவே சாபிடுவோருக்கு இந்த கூடுதல் வேக்காட்டின் மூலம் ஒரு வித்யாசமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உருவம் மட்டும்தான் வேறுபடும். இல்லை ஒருவேளை ருசியும் நுணுக்கமாக வேறுபடுமோ எனக்குத்தான் அவ்வளவு தெரியவில்லையோ. அதுவும் தெரியாது. ஆனால் இத்தனை நுணுக்கமான சுவை வித்யாசத்துக்காக நான் மெனக்கிட மாட்டேன்.
ஆனாலும் இந்த ராமசெரி இட்லியில் அப்படி என்னதான் இருக்கிறது என்று வலை வீசிப் பார்த்ததில் கிடைத்தது இங்கே:
From http://en.wikipedia.org/wiki/Idli
Ramasseri idli
Ramasseri, an offbeat village in Palakkad is known all over Kerala for the idlis it makes—the delicious Ramasseri Idli. Spongy and soft Ramasseri Idli is slightly different in shape from the conventional idlis. It is a little flat and round. Ramasseri Idli is eaten with Podi mixed in coconut oil. The beginning was from a Mudaliar family living near Mannath Bhagavathi Temple in Ramasseri near Elappully.[citation needed]
The recipe of Ramasseri idli dates back to about one century, which again is a trade secret. The Muthaliyar family had migrated to Palakkad from Kanchipuram in Tamil Nadu. The new generation in the profession says that the secret of the recipe and taste were handed down to them from the older women of the community. Now the idli business is confined to four families in Ramasseri. Selection of rice is very important in making Ramasseri idli. Usually the varieties used are Kazhama, Thavalakannan, Ponni etc.
The taste depends on the boiling of paddy itself. Drying and dehusking are also important and need to be done in a particular way. The combination of rice and black gram is also equally important. For 10 kg of rice, one kg of black gram is used. Idli is made only after four hours of fermentation. Steaming of the idli is done on a cloth covered on the mud pot using firewood. This allegedly provides a special taste to the preparation. Leftover Idli can be torn into crumbs and used for preparing dishes such as Idli fry and Idli Upma.
இதை சமைக்கும் முறையை விளக்கும் எழுத்தும் புகைப்படமும் இங்கே:இப்போது புரிகிறது ஏன் அதனை முறை அந்தப பண்டத்தின் பெயரைத் திரும்ப திரும்ப சொன்னார்கள் என்று. அந்த சின்ன வட்டத்துக்குள் அவ்வளவு விஷயம் இருக்குது. இதை முதலிலேயே படித்து விட்டுப் போயிருந்தால் நானும் இதைப் பற்றி கொஞ்சம் சிலாஹித்துப் பேசி இருக்கலாம். அவர்களும் இவ்வளவு சிரமப்பட்டது வீண் போகவில்லை என்று சந்தோஷப் பட்டிருப்பார்கள். நீங்கள் அடுத்த முறை பாலக்காட்டுபக்கம் போனால் இதை கட்டாயம் ருசித்துப் பாருங்கள்.
ஸ்ஸ்ஸ்..அப்புறம் வந்து அதில் அப்படி என்ன ருசி இருக்கிறது என்று என்னிடம்சொல்லுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன் அந்த கற்பூர வாசத்தைபற்றி.
Monday, August 30, 2010
கதை அல்ல நிஜம்
செடிகளிடம் பேசுவது பாடுவது போன்ற வழிகளால் அவற்றை சிறப்பாக வளர்க்க முடியும் என்று பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இங்கே பெங்களூரில் லால்பாகில் இருக்கும் nursery யில் இதமான இசையை எப்போதும் போட்டு வைக்கிறார்கள். இதற்காகத்தான் என நினைக்கிறேன்.
நமது முன்னோர்களும் செடிகொடிகளுடன் இது போன்ற அன்பு, மரியாதையுடன் இருந்திருக்கிறார்கள் என்று என்னுடைய ஆசிரியை ஒருவர் சொல்வார். நாம் துளசிச் செடியிலிருந்து இலைகளைப் பறிக்கும் போதோ அல்லது பூஜைக்காக செடிகளிடம் பூக்கள் பறிக்கும்போதோ முதலில் அவற்றின் அனுமதி கேட்டுப் பின்னால்தான் பறிக்க வேண்டும். அப்படியே போய் பூவைக் கொய்வதோ கிளையை வெட்டுவதோ இயற்கையை அவமதிக்கும் செயல் என்பார்.
இவற்றை எல்லாம் பின்பற்றி இருந்தால் இன்று இப்படி ecological imbalance எல்லாம் வந்திருக்காது.
இன்றும் கிராமப்புறங்களில் இது போன்ற நம்பிக்கைகள், பழக்கங்கள் இருக்கின்றன. என்னுடைய வீட்டில் வேலை செய்யும் பெண்மணி சில நாட்களில் செடிகளை வெட்டக்கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருப்பாள். ஒருமுறை புல்வெளியின் நடுவே மிளகாய்ச் செடி வளர்ந்திருக்கிறதே அதை வெட்டி அந்த பக்கம் வைக்கலாமே என்றேன். அதற்கு ' ஏன் வேண்டுமானால் அதை சுற்றிக் கொண்டு நீங்கள் நடக்கலாமே. அதுபாவம் இருந்து விட்டுப் போகிறது' என்று சொல்லிவிட்டு அதை அங்கேயே பாதுகாப்பாக வளர்த்தாள். கொஞ்சம் ஹிட்லர் மாதிரித் தோன்றினாலும் அவள் சொன்னதில் அர்த்தம் இருக்கிறது என்று நானும் விட்டு விட்டேன். அந்தச் செடியும் மிக நன்றி உணர்வோடு அளவுக்கு அதிகமாகவே மிளகாய் கொடுத்தது.
இதுபோல எங்கள் தோட்டத்தில் ஒரு பலாமரம் வளர்ந்திருந்தது. நானும் அது காய்க்கும் காய்க்கும் என்று ஆறு வருஷம் ஆசையாகப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது பெரிதாக வளர்ந்து கொண்டே போயிற்று ஆனால காய்ப்பதாக இல்லை. பக்கத்தில் இருந்த எலுமிச்சைச்செடி முருங்கை, கறிவேப்பிலை எல்லாம் வேறே இதன் நிழலில் காய்ந்து போய்க் கொண்டிருந்தன. சரி பலாமரத்தை வெட்டிவிடலாம் என்று தோட்டக்காரரிடம் சொன்னேன். அவர் 'பொறுங்கள் அம்மா காய்க்கும். ஒரு ஆணி கொடுங்கள்' என்று சொல்லி அதன் மேல் ஒரு ஆணியை அடித்தார். இனிமேல் காய்க்கும் பாருங்கள் என்று வேறே சொன்னார். வீட்டு வேலை செய்யும் அம்மா இதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தவள் அந்த மரத்திடம் போய் பேச ஆரம்பித்தாள் : ' உன்னை அம்மா எதற்கு பாடுபட்டு வளர்கிறார்கள். உனக்கு கொஞ்சமும் நன்றியே இல்லையே. இவ்வளவு பெரிதாய் வளர்ந்திருக்கிறாய். ஆனால் ஒரு பிஞ்சு கூட இல்லை. வெக்கமாக இல்லையா. இரு இப்படியே நீ இருந்தால் உன்னை வெட்டிதான் போட வேண்டும்" என்றெல்லாம் மரத்திடம்! எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. மூன்று மாதம் ஆன பின்னால் ஒரு நாள் என்னைக் கூப்பிட்டாள். போய் பார்த்தால் மரத்தில் 8 காய்கள். "பாத்தீங்களாம்மா, அன்னிக்கு என்னமோ சிரிச்சீங்களே. இப்போ பாருங்க. சுரணை வந்திருச்சு. எப்படி காய்ச்சு தொங்குது பாருங்க. நாம் பேசினா அதுக்கு புரியும்' என்றாள்.
எதை நம்புவது, நம்பாமல் இருப்பது எனக்கு ஒன்றும் புரியவில்லை. பலாப்பழங்கள் இனிப்பாக இருந்தன. அது மாத்திரம்தான் புரிந்தது. 'அம்மா தாயே அடுத்த வருஷமும் இது போல பழம் கொடு' என்று ஒரு application போட்டு வைத்திருக்கிறேன். அப்புறம் தோட்டப் பக்கம் போகும்போது ஏதும் எக்குத்தப்பாக பேசுவதில்லை. எதற்கு வம்பு?
Thursday, August 26, 2010
கல்யாணம் பண்ணிப் பார்
வீட்டில் ஒரு திருமணம் என்பது மகிழ்ச்சியான நிகழ்ச்சிதான்; அதைச் சிறப்பாகக் கொண்டாட நினைப்பது இயல்பே. ஆனால் கொண்டாடுவது என்றால் ஆடம்பரமாக செலவு செய்துதான் கொண்டாட வேண்டுமா என்ன? என்னதான் சொன்னாலும் பெண்ணுக்கு நகை புடவை போன்ற விஷயங்களை யாரும் குறைப்பதாக இல்லை. இதில் வேடிக்கை ஆன விஷயம் என்னவென்றால் இன்றைய இளம்பெண்கள் பலரும் தங்க நகை அணிவதை விரும்புவதும் இல்லை. ஆனாலும் பெற்றோர் விடுவதாக இல்லை. சம்பிரதாயம் என்று சொல்லி இருபது பவுனாவது போட்டு விடுகிறார்கள். இப்போதெல்லாம் ஒரு புதுக் கூத்து வேறே சேர்ந்து கொண்டிருக்கிறது. மாப்பிள்ளைப் பையனுக்கு செயின், மோதிரம் போக braceletடாம். எந்தப் பிள்ளை இதை எல்லாம் போட்டுக் கொண்டு இருக்கிறான் என்று புரியவில்லை. எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் மைனர்
வேடம் போடுபவர்கள்தான் இதெல்லாம் போட்டுக் கொண்டு அலைகிறார்கள். மற்றதெல்லாம் கழுத்தில் ஆபீஸ் id கார்டைத்தான் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறது.
புடவை - பெண்ணுக்கு மட்டுமே ஐந்து ஆறு ஆடம்பரமான புடவைகள். புடவைக் கடைகளுக்கு இதுவே ஒரு பெரிய பிசினஸ். சாமுத்ரிக்கா, பரம்பரா என்று என்னென்னமோ பேர் சொல்லி புடைவைகள் - ஒன்றாவது 25 ஆயிரத்துக்குக் குறைவில்லை. இதில் விசேஷம் என்ன வென்றால் இந்தப் பெண்களில் முக்கால்வாசிக்கு மேல் புடவையே கட்டியது இல்லை இனியும் கட்டுவதாக இல்லை. திருமண விசேஷங்களுக்குப் புடவை கட்டி அலங்காரம் செய்வதற்கென்றே அலங்கார நிபுணர்கள் வருவார்கள். பெண்ணின் கூடவே இருந்து வேளாவேளைக்கு அலங்காரம் செய்வார்கள். சும்மா 25அல்லது 30 கொடுத்ததால் போதும் - ஆயிரங்கள்தான். அந்த வீடியோ விலும் போட்டோக்களிலும் அழகாக வரவேண்டும் என்பது மட்டுமே நோக்கம். அப்புறம் இந்தப் புடவைகள் அழகாக மடித்து கப்போர்ட் உள்ளே தூங்கும். அவ்வளவுதான். இதற்கு என் இதனை விலை கொடுத்து வாங்க வேண்டும். பேசாமல் convocation gown போல வாடகைக்கு எடுத்துவிடலாமே என்று தோன்றும். மேல் நாடுகளிலும் வெட்டிங் gown க்கு செலவழிக்கிறார்கள். ஆனால் அது ஒரு உடுப்புக்காக மட்டுமே. இங்கே சுமார் ஐந்தோ ஆறோ. இதெல்லாம் போக ஒரு ஒன்பது கஜம் புடவை வேறே - அந்தக் காலத்தில் பூஜை விரதம் போன்ற நாட்களில் 9 கஜம் உடுத்துவார்கள். இப்போதோ பலருக்கும் அதை உடுத்தவே தெரியாது. ஆனாலும் சம்பிரதாயமாய் அந்த தாலி கட்டும் வைபவத்துக்கு அதைக் கட்டாயம் அணிய வேண்டும். அப்புறம் அலமாரி உள்ளே அது தூங்க வேண்டும். சரி ஒரு மணி நேரத்துக்குத்தானே என்று சாதாரணமாக வாங்குவார்களா என்றால் அதுதான் இல்லை. இரண்டு பக்கமும் கெட்டி ஜரிகை போட்டு பெரிய புடவை வேண்டும். இல்லை என்றால் கல்யாணத்துக்கு வருபவர்கள் என்ன நினைப்பார்கள் என்பார்கள். ஒரு காலத்தில் ஆந்திரா மட்டும் கர்நாடகத்தில் முஹூர்த்ததின் போது மஞ்சளில் தோய்த்த காட்டன் புடவையைத்தான் மணப்பெண்ணுக்கு கட்டுவார்களாம். நான் பார்த்த கேரளா நாயர் திருமணத்திலும் பெண் அது போல லேசான ஜரிகை போட்ட வெளிர் சந்தன புடவைதான் கட்டி இருந்தாள். பெண்ணுக்கும் பிள்ளைக்கும் நெருங்கிய உறவினர்களும் அது போன்ற புடவை அல்லது முண்டு தாவணிதான் அணிந்திருந்தனர். இந்த ஆடம்பரப் பட்டுப் புடவைகள் எல்லாம் எப்போது சம்பிரதாயம் ஆயின என்று கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்க வேண்டும். எனகென்னமோ இவை புடவை உற்பத்தியாளர்களின் மார்க்கெட்டிங் திறமையால் உருவாக்கப்பட்ட சம்பிரதாயங்கள் என்றுதான் தோன்றுகிறது.
சானியா - ஷோயப் திருமணத்தின் போது கேள்விப்பட்டேன் பாகிஸ்தானில் விருந்துகளில் ஒரு சிறப்பு உணவு item மட்டுமே போட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது என்று. இந்தச் சட்டத்தை நம் நாட்டிலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். நம் கல்யாண விருந்துகளில்தான் எத்தனை வீணடிக்கிறோம்! எத்தனை வகையான பொரியல், கூட்டு, எத்தனை வகை இனிப்புகள்! நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிக்கு மேல் சர்க்கரை வியாதி கேஸ். இன்னும் பலருக்கு உடல் பருமன் தொல்லை. எத்தனையே ஆரோக்கியமாக இருந்தாலும் திரும்பத் திரும்ப விருந்து சாப்பாடு மூன்று வேளை சாப்பிட்டால் யாருக்கும் அஜீரணம்தான் வரும். ஒரே ஒரு வேளை அல்லது இரண்டு வேளை மட்டுமே கல்யாண விருந்து கொடுத்தால் போதுமே. அதிலும் எந்த மாதிரியான விருந்து என்று தீர்மானம் செய்து கொண்டு எல்லோருக்கும் அதே போடலாம். ஒரு பக்கம் தென்னிந்திய வகைகள், ஒரு பக்கம் வடை இந்திய உணவு, அப்புறம் chinese, ஒரு பக்கம் pasta, pizza, அது தவிர சாட், அப்புறம் தோசா கவுன்ட்டர், ஸ்வீட்ஸ் அது போக ஐஸ் கிரீம். இது போல் சாப்பிட வேண்டும் என்றால் ஹோடேலுக்குப் போகட்டுமே எதற்கு கல்யாணத்தில் இத்தனை வகைகள்? இப்படித்தான் செலவையும் wastage ஐயும் அதிகரிக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு திருமணத்தில் reception ; இப்படித்தான் எக்கச்சக்கமான சாய்ஸ். ஒரு ரவுண்டு பார்த்துக் கொண்டு வந்ததிலேயே வயிறு ரொம்பிப் போன உணர்வு. நேராக தயிர் சாதம் எங்கே என்று தேடித் பார்த்து அதை மட்டும் சாப்பிட்டு வந்து விட்டேன். அதற்கும் அந்த contractor 350 ரூபாய்தானே போடப்போகிறார்? என்னைப் போலப் பலரும் இருப்பார்கள். யாரால் அங்கே போடும் எல்லாவற்றையும் சாப்பிட முடியும்.?இல்லை சாபிட்டலும் யார் மறுநாள் அவதிப் படுவது?
இது எல்லாவற்றுக்கும் மேலான ஒரு வீண் செலவு என்னவென்றால் இந்தத் தாம்பூலத்தோடு ஏதோ பாத்திரங்கள் அல்லது fancy பொருட்கள் கொடுக்கிறார்களே அது எதற்கு? முக்கால்வாசி வீட்டில் அது வேலைக்காரிக்கு போகிறது. குழந்தைகளை பிறந்தநாள் கொண்டாட அழைக்கும்போது இது போல் பரிசு கொடுத்து அனுப்புவார்கள். வாழ்த்த வரும் குழந்தைகள் பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைக்கு பரிசு கொண்டு வருவார்கள். அதனால் அவர்கள் போகும்போது வெறும் கையோடு அனுப்ப வேண்டாம் என்று ஏதானும் ஒரு பொம்மையோ விளையாட்டு பொருளோ கொடுத்து அனுப்புவார்கள். கல்யாணத்துக்கு வரும் விருந்தினர் அனைவருக்கும் தாம்பூலம் தனித்தனியே கொடுக்க இயலாது என்பதற்காக உருவாக்கப்பட்ட conveneince இந்தப்பை. அதற்கும் மேலே அதனுள்ளே எதற்கு ஒரு ஸ்டீல் பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் டப்பா? மொய்க்கு பதில் மரியாதையா? ஏற்கனவே இருக்கும் செலவு போதாதென்று இது போல் ஏதானும் புதுப் புது 'சம்பிரதாயங்கள்' வேறு எதற்கு உருவாக்க வேண்டும்?
இப்போது கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கிறது என்று சொன்னேனே அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய தாயாருக்கும் இடையே நடந்த ஒரு சம்பாஷணையின் போது நானும் இருந்தேன். தாயார் பெண்ணுக்கு இன்னும் சில வெள்ளிப் பாத்திரங்கள் வாங்க வேண்டும் என்று சொன்னாள்அதற்கு கல்யாணம் ஆக இருக்கும் பெண் சொன்னாள்; "எதற்காக அம்மா, அவர்களோ கேட்கவில்லை. எனக்கோ இவை எல்லாம் உபயோகப் படவே போவதில்லை. இதை வீட்டில் பூட்டி வைத்து விட்டு நான் வேலைக்குப் போகும்போது கவலை வேறு பட வேண்டும். ஏன் வீணாக அலைகிறாய்?" என்று. அதற்கு அவள் தாயார் சொல்கிறாள்: "இதோ பார் சபையில் சில விஷயங்கள் வைத்தால்தான் கௌரவமாக இருக்கும். நீ உபயோகப் படுத்துவாயோ இல்லையோ அதை எல்லாம் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் கொடுப்பதைக் கொடுத்து விடுகிறேன். நீ அவற்றை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்" என்று.
இது என்ன லாஜிக்? கல்யாணத்தில் சீர் செய்வது பெண்ணுக்கும் பிள்ளைக்கும் உபயோகப்படுவதர்கா இல்லை ஊர் மக்களைத் திருப்திப்படுத்தவா?
ஆனால் பெரும்பான்மையான உயர் மத்தியத்தர மக்களின் மனோபாவம் இப்படித்தான் இருக்கிறது. "மாற்றம் தேவை ஆனால் நான் அதை செய்யத் தயாராக இல்லை. வேறு யாராவது முன்வந்து செய்தால் நான் அதை ஆதரிக்கத் தயார்."
என்னவோ போங்கள். இருக்கிறவர்கள் இது போலெல்லாம் செய்து ஒரு முன்னோடி உருவாக்கி விடுகிறார்கள். இது இல்லாதவர்களின் சுமையை அதிகரிக்கிறது. அப்புறம் பெண் குழந்தை என்றாலே செலவு என்ற ரீதியில் எண்ணங்கள். இதனால் கீழ்மட்டங்களில் பல வேண்டாத பின்விளைவுகள்.
இன்னொரு சட்டமும் வேண்டும்: இந்த தேர்தல் செலவுக்கு ஒரு உச்ச மட்டம் நிர்ணயித்திருப்பதைப் போல், திருமண செலவுக்கும் ஒரு உச்சமட்டம் கொண்டு வர வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?
Wednesday, August 18, 2010
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
மரணத்தின் நிச்சயம் நம் எல்லோருக்கும் தெரிந்தே இருந்தாலும் நம்மைச் சுற்றியவர்களுக்கு முடிவு வரும்போது அது எவ்வளவு வயதானவர்கள் ஆனாலும் அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எங்களுக்குத் தெரிந்தவர் ஒருவரது தாயார் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக கோமாவில் இருந்த போது அவருடைய மனைவி 'இது போல இருப்பதைவிட அவர் இறந்துவிடுவதே நலம்' என்று கூறியபோது அவரது கணவருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. 'கோமாவிலாவது என் அம்மாவை என்னால் பார்க்க முடிகிறதே என்று நான் ஆறுதல் அடைகிறேன் நீ எப்படி இது போல சொல்லலாம்' என்று கடுமையாக சண்டை போட்டார். அந்த அம்மாவுக்கு அப்படி ஒரு வாழ்வு தேவையா என்று அவர் யோசிக்கவே இல்லை. நமக்கு உகந்தவர்களின் மரணம் நம்மைக் கலங்க வைப்பது அவர்களுக்காகவா இல்லை நமக்காகவா என்று எனக்குத் தோன்றும்.
எனக்குத் தெரிந்த பலரும் இறப்பு என்ற யதார்த்தத்தைப் பற்றி யோசிக்கவே தயங்குபவர்களாகத்தான் இருக்கிறார்கள். இது போன்ற பேச்சை எடுத்தாலே 'சரி அபசகுனமாக எதாவது உளராதே' என்பார்கள். இல்லை என்றால் 'அது நடக்கும்போது அதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம். இப்போது சும்மா இரு' என்பார்கள். நாம் வாழ்கையின் மற்ற நிகழ்வுகளைப் பற்றி எல்லாம் நாம் யோசிக்கிறோம். அவற்றுக்காக திட்டமிட்டு செயல் படுகிறோம். ஆனால் இறப்பு என்பது மாத்திரம் பிறருக்கு மட்டுமே நடக்ககூடிய ஒன்று என்பது போல ஒதுக்கி வைத்து விடுகிறோம். சமீப காலத்தில் இன்சூரன்ஸ் கம்பனிகாரர்கள் மட்டுமே நமக்கு இறப்பின் நிச்சயத்தை நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து எந்த வீட்டிலுமே குடும்பமாக உட்கார்ந்து ' எனக்கு ஏதானும் நேர்ந்து விட்டால் ' என்ற scenario பற்றி நிதானமாக உணர்ச்சி வசப்படாமல் பேசி நான் பார்த்ததில்லை. நானே சில சமயம் என் மகனிடமோ மருமகளிடமோ வீட்டில் எந்தெந்த file எங்கிருக்கிறது என்று சொல்ல முயலும் போதெல்லாம் அவர்கள் என்னை அடக்கி விடுவார்கள் .அதெல்லாம் நேரம் வரும்போது பார்த்துக் கொள்கிறோம் என்று.
இன்னொரு நண்பருக்கு கான்செர் மிகவும் முற்றிய நிலையில் இன்னும் சில நாட்களே என்று இருந்த சமயத்தில் கூட அவர் வீட்டில் எல்லோரும் மரணத்தைப் பற்றி நினைக்க விரும்பவில்லை. என்னமோ எல்லாம் இயல்பாக இருப்பது போலவும் ' இதோ அவர் எழுந்து முன் போல் நடமாடப் போகிறார்' என்பது போலவும் நடந்து கொண்டார்கள். ஒரு வேளை அவர்கள் உண்மையை எதிர்கொண்டிருந்தால் அந்த சில நாட்களை இன்னும் அர்த்தமுள்ளவை ஆக்கி இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது அவருடன் வாய் விட்டுப் பேசி அவரது நிஜ உணர்வுகளையும், அவரது பயங்களையும் பற்றிப் பேச ஒரு வாய்ப்பு இருந்திருக்கலாம். இவர்களுக்கு நிஜத்தை எதிர் நோக்கும் பலம் இல்லாததினால் கடைசி நாட்களில் அவர் தனது உள்மனதின் பாரங்களை மனதிலேயே சுமந்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டுவிட்டரோ என்று தோன்றியது. இதில் வேடிக்கை என்னவென்றால் நோயாளி உட்பட அத்துணை பேருக்கும் அவரது மரணத்தின் அண்மையைப் பற்றி தெரியும். ஆனாலும் யாரும் அதைப் பற்றி இயல்பாகப் பேசத் தயாராக இல்லை. மரணத்தின் பிடியில் இருக்கும் அவர் எத்துணை தனிமைப் பட்டு போயிருப்பார் இல்லை ?
நமக்குப் பிரியமானவர்கள் நம்மைப் பிரியும்போது ஏற்படக்கூடிய துக்கத்தை நான் மறுக்கவில்லை. பாசத்தால் ஏற்படும் அந்த வலி மிகவும் இயற்கை ஆனது. நான் சொல்ல வருவது என்னவென்றால் மரணம் என்ற நிகழ்வு நமக்கு அளிக்கும் அதிர்ச்சியை குறைக்க ஒரே வழி அதைப் பற்றி தெளிவாக சிந்திப்பதும் அதைப் பற்றி இயல்பாகப் பேசுவதும்தான். மரணத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டோமானால் இருக்கும் நாட்களை இன்னமும் தரத்தோடு வாழ்வோமா என்கிற கேள்விதான். அது யாருக்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்ற உணர்வு வந்தால் நம் வாழ்க்கையில் வன்மைகள் குறையுமோ? யாரும் சாஸ்வதம் இல்லை என்று தெளிந்து இருக்கும்போது பொறாமை, காழ்ப்புணர்ச்சி, பேச்சிலும் செயலிலும் வன்மை எல்லாம் குறையுமோ? எனக்குத் தெரிந்த வீட்டில் ஒரு பெண் அவரது மாமியாரை அவர் இருக்கும் வரை நோக அடித்து விட்டு இப்போது அவரது மறைவுக்குப் பின்னால் அவருக்கு ஸ்ரத்தையாக வருடாவருடம் திவசம் செய்கிறாள் - 25 வருடங்களாய். பலரும் இப்படித்தான் சொல்கிறார்கள் : 'இப்படி திடீர் என்று போய் விடுவார் என்று முன்னமே தெரிந்திருந்தால் அதை செய்திருப்பேன் இதை சொல்லி இருப்பேனே என்று. என்னமோ மரணம் என்பது அரியதான நிகழ்வு என்பதைப் போல.
மரணத்துக்குப் பின்னால் ஒருவரை நினைத்து நினைத்து அழுவதை விட அவரோடு இருக்கும் நாட்களை அன்புடனும் புரிதலுடனும் வாழ்வது இன்னும் சிறப்பல்லவா. ஒரு வேளை expiry தேதி குறிக்கப்பட்டு பிறந்தோமானால் பூமியில் வாழ்கை இன்னும் அர்த்தமுள்ளதாக வாழ்வோமோ என்னவோ?
Monday, August 2, 2010
சும்மாதான் ஹீ ஹீ
எனக்கு வைரமுத்துவின் அழகான வரிகள் நினைவுக்கு வந்தன:
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்கு தெரிகின்றதே வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தங்களுக்கு தெரிகின்றதா
இந்த வரிகளைக் கூட அந்த பெண் இப்படித்தான் படிப்பாளோ என்னமோ:
வலிமிஹும் இடங்கல் வலிமிஹா இடங்கல் தமிழுக்கு தெரிகிந்ரதெ
வலிமிஹும் இடங்கல் வலிமிஹா இடங்கல் தங்கலுக்குத் தெரிகின்ரதா
இது மாதிரி உச்சரிக்கும் போது தமிழுக்கும், தமிழை நேசிப்பவர்களுக்கு எத்தனை வலிக்கும் என்று அந்த பெண்ணுக்கு எங்கே புரியப் போகிறது?
எப்படியும் பாடல வரிகளை யாரும் கவனிப்பதில்லை என்பதினால்தானோ 'ஆச்சா போச்சா' ' என்று எதையோ எழுதி பாடலைப் பதிவு செய்து விடுகிறார்கள். இசை நன்றாக அமைந்து விட்டால் அது வெற்றியும் ஆகிவிடுகிறது. தமிழ் படம் என்ற படத்தில் மிக அழகாக oh maha zeeya பாடலில் கிண்டல் செய்திருந்தார்கள். வார்த்தைகளுக்கு அர்த்தமே வேண்டாம். புரியாத மொழியில் இருந்தால் இன்னும் நலம். அப்படி இருக்கிறது நிலைமை. ரஹ்மான் க்கு இது போன்ற வார்த்தைகளின் மீது பயங்கர காதல் - 'கும்சும் கும்சும் குப்பச்சி, 'அஜூபா ஜுஜோபா' என்று எதாவது ஹம்மிங் வைத்து விடுவார். அதுவும் சூப்பர் ஹிட் ஆகிவிடும்.
ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு பாடல்களை வானொலியில் மட்டுமே கேட்க முடியும். அதனால் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் அதிகம். படங்களிலும் பாடல்கள் படத்தோடு ஒட்டி இருக்கும். இப்போது போல பொழுது போகவில்லை என்றால் சுவிட்சர்லாந்த்தில் ஒரு டூயட் இல்லை என்றால் கனவு சீன் என்பது போன்ற அமைப்புகள் இருக்காது. ஒரு படத்தின் பாடல வரிகளில் இருந்தே அந்த படத்தின் கதையை ஓரளவு யூகிக்க முடியும். படங்கள் மறந்து போய் விட்டாலும் பாடல்கள் நினைவில் நிற்கின்றன. வானம்பாடி என்றொரு படம். நிறைய பேருக்கு நினைவிருக்காது. ஆனால் அந்த படத்தில் வந்த 'கங்கைக் கரைத் தோட்டம்', 'ஏட்டில் எழுதி வைத்தேன்' , 'கடவுள் மனிதனாக வேண்டும்' போன்ற பாடல்கள் எல்லோருக்கும் நினைவிருக்கும். அத்தனை அழகான, கருத்துள்ள பாடல்கள். இன்னும் சில பாடல்கள் ஏதோ நமக்காகவே நம் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்டவை போலிருக்கும். இதனாலேயே அவை காலத்தை மீறி இன்றும் பசுமையாக இருகின்றன.
வானொலியில் கேட்கும்போது பாடல் வரிகளாலும், இசையாலும், பாடகர்களின் குரலாலும் அவ்வளவு பிடித்த அந்த பாடல்களை இன்று சில சமயம் தொலைக்காட்சியில் பார்க்கும்போது சற்று அதிர்ச்சி ஆகி விடுகிறது.
'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்' என்று ஒரு அருமையான பாடல். அந்தக் காட்சியை இப்போது சமீபத்தில்தான் ஒரு தொலைக்காட்சி சேனலில் பார்த்தேன். வெறுத்துப் போய் விட்டேன்: அசோகனுக்கு இப்படி ஒரு பாட்டு தேவையா என்று. அதே போல 'ரோஜா மலரே ராஜகுமாரி' என்று ஒரு அழகான melody. திரையில் பார்த்தால் சச்சுவும் ஆனந்தன் என்று ஒரு ஹீரோ(?யாரோ ?) வும். கோர்ட்டில் கேஸ் போடலாமா என்று கோபம் வந்தது எனக்கு. இப்போதும் சில படங்களில் இது போன்ற அநீதி நடக்கிறது. இந்த 'ஜீன்ஸ்' படத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். அந்த பிரஷாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய். இது முதல் அநியாயம் என்றால் பாடல்களுக்குக் குரல் ஹரி, உன்னி கிருஷ்ணன் . இதெல்லாம் கொஞ்சம் too much இல்லை? பாடல்களை கேட்டு விட்டு படத்துக்குப் போனவர்களின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இது போலத்தான் அந்த மைக் மோகனுக்கும் ஒரு ராசி. பாட்டெல்லாம் பிரமாதமாக அமைந்து விடும். ' ஏதடா இளையராஜா, SPB, வைரமுத்து என்று ஒரு கூட்டணியே நமக்காக கஷ்டப்படுகிரார்களே' என்று கொஞ்சமாவது கஷ்டப்பட்டு நடித்தாரா என்றால் அதுதான் இல்லை. போதாக்குறைக்கு இவருக்கு என்று குரல் கொடுக்க வேறு ஒரு ஆள் - சுரேந்தர். இந்த மாதிரி அநியாயத்தின் உச்சகட்டம் 'பூவே செம்பூவே' என்ற பாடல் 'சொல்ல துடிக்குது மனசு' என்ற படத்தில். படத்தைப் பார்த்தவர்களுக்குப் புரியும் என் கோபம்.
இதுக்கெல்லாம் ஒரு சட்டம் போட வேண்டும் இனிமேல். என்ன சொல்கிறீர்கள்?
இப்போது FM ரேடியோ வாயிலாகத் திரும்பவும் வானொலி கலாச்சாரம் முன்னுக்கு வந்து கொண்டிருதாலும், முன்னைப் போல பாடல்களை அனுபவிக்க முடியவில்லை. முன்பெல்லாம் தொகுப்பாளர்கள் பாடலைப் பற்றிய சுவையான விஷயங்களைச் சொல்லுவார்கள். அளவாகப் பேசி பாடல்களை முழுமையாக ஒலிபரப்புவார்கள். இப்போது எங்கே? இந்த RJ க்கள் பேசிப் பேசியே கழுத்தறுக்கிறார்கள். அதென்ன எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியே பேசுகிறார்கள் என்றும் புரியவில்லை. பாடல்களையும் பாதி பாதிதான் ஒலிபரப்புகிறார்கள். இது நிம்மதியாய் பாடல்களை அனுபவிக்க ஏற்றமாதிரி இல்லை. fast food மாதிரி அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுவது மாதிரிதான் இருக்கிறது. பாட்டை இந்த மாதிரி அனுபவிக்க முடியுமா சொல்லுங்கள். இது இன்றைய இளைய தலைமுறையின் வாழ்கை முறையை சார்ந்ததாக இருப்பதினால் அவர்களுக்கு வேண்டுமானால் பிடிக்குமோ என்னமோ? அப்துல் ஹமீது போல வல்லினம் மெல்லினம் எல்லாம் சரியாக உச்சரித்து தமிழ் சினிமாப் பாடல்களைப் பற்றிய அபாரமான ஞானத்தோடு தொகுப்பவர்கள் எல்லாம் இன்றைய வானொலிகளுக்குத் தேவையில்லை. சும்மா பொழுதுபோக்காகப் பேசத் தெரிந்தால் போதும்.
ஹிஹிஹி, இதைப் படிக்கும்போதே புரிந்திருக்குமே எனக்கும் பொழுது போகவில்லை என்று. அதேதான். serious ஆக போஸ்ட் எழுத கை ஓடவில்லை. சரி இப்படி ஏதானும் oh maha zeeya மாதிரி அர்த்தமில்லாமல் கொஞ்சம் சத்தம் போட்டால் ஏதானும் inspiration வருகிறதா பார்ப்போமே என்றுதான். கோபித்துக் கொள்ளாதீர்கள்.
Thursday, July 29, 2010
மொழிப் பிரச்சினை
ஒரு நாள் நான் என் தோழிகளுடன் படம் பார்ப்பதற்கு ஒரு mall க்கு சென்றிருந்தேன். அங்கே வந்திருந்த காலேஜ் கூட்டம் எல்லாம் ஆங்கிலத்தில்தான் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது என் தோழி சொன்னாள் 'இன்றைய நகர்புற இளைஞர்களுக்கு அவரவர் தாய் மொழியே தெரிவதில்லை. தெரிந்தாலும் அவர்கள் அதை பேசுவதை இழிவாக நினைக்கிறார்கள்", இன்னொரு தோழி சொன்னாள் " ஐயே இதெல்லாம் சும்மா வெளிவேஷம். எதிர்பாராமல் கன்னத்தில் ஒரு அறை விட்டுப் பார் "ஐயோ அப்பா என்றுதான் கத்தும்"
அப்போது பார்த்து ஒரு பெண் ஏதோ தடுக்கி கீழே விழப்போனது. ஆனால் அதன் வாயிலிருந்து "ஐயோ, அம்மா' என்றெல்லாம் வரவில்லை. 'ouch' என்றுதான் சொல்லிற்று. உடனே நான் என் தோழியைக் கேட்டேன் "இப்போது என்ன சொல்கிறாய்?" என்று. அதற்கு அவள் சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது. அவள் சொன்னாள்: " பார். இவர்களெல்லாம் மேலை நாகரீகத்தில் மூழ்கிப் போய் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தும் திறனைக் கூட இழந்து விட்டார்கள். எல்லாவற்றிலும் ஒரு செயற்கைப் பூச்சு இருக்கிறது. இதனால்தான்
இவர்கள் நிஜமான உணர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் வரும் கணங்களில் உடைந்து போய் விடுகிறார்கள். அப்புறம் மனவியல் மருத்துவர்களைத் தேடிப் போகிறார்கள்" என்று.
இது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு இன்னும் புரியவில்லை. ஆனால் கலாச்சார பூர்வமாக நம்முடைய உணர்வுகளை முழுமையாக ஒரு அந்நிய மொழியில் வெளிப்படுத்த முடியுமா என்பது எனக்கு ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. நாம் சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்படுபவர்கள். எல்லாவற்றிலும் ஒரு தீவிரம் - தீக்குளிக்கும் அளவிற்கும் போகத் தயங்காதவர்கள். ஆங்கிலேயர்கள் உணர்சிகளை மிகவும் மிதமாக வெளிப்படுத்தும் தங்களது 'stiff upper lip' பற்றி பெருமை கொள்பவர்கள். அப்படிப்பட்டவர்களின் மொழியில் நமது ஆழ்ந்த உணர்வுகளை வெளிப்படுத்த முடியுமா என்பதுதான் எனது சந்தேகம். இன்னொரு கோணத்திலிருந்து யோசித்தால் 'எந்த நாடானால் என்ன. கடைசியில் எல்லோரும் மனிதர்கள். எந்த ஊரானாலும், எந்தக் கலாசாரம் ஆனாலும் உணர்வுகள் என்பவை மனிதர்கள் எல்லோருக்கும் பொதுவானவைதானே. ஆழ்ந்த உணர்சிகளை வெளிப்படுத்த எந்த மொழியிலும் வகை இருக்கத்தானே செய்யும்" என்று.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?