Wednesday, October 20, 2010

எந்திரன்

எந்திரன் படம் பார்த்தேன். பல வருடங்களுக்கு முன்பாக ரஜினியை புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும் போன்ற படங்களில் ரசித்திருக்கிறேன். இவை தவிர அவர் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை அவர்கள், நினைத்தாலே இனிக்கும், குரு சிஷ்யன், தில்லுமுல்லு , தளபதி. நல்ல நடிகர். ஆனால் அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கி அவருக்குள்ளே இருக்கும் ஒரு சிறந்த நடிகரை அழித்து விட்டார்களே என்ற வேதனை எனக்கு எப்பவும் உண்டு.
படத்தை ரஜனிகாந்தால் மட்டும்தான் இப்படி ஒரு வெற்றிப்படம் ஆக்கி இருக்க முடியும். வேறு யார் நடித்திருந்தாலும் 'காதுலே பூ' என்று ஒதுக்கி இருப்பார்கள். அனால் அவருள்ளே இருக்கும் அபாரமான நடிப்புத் திறமைக்கு சவாலான ஒரு திரைக்கதை யாரிடமும் இன்று இல்லையா என்ற ஆதங்கம் மேலிடுகிறது.

நூறு மனிதர்களின் ஆற்றல் சக்தி படைத்த இந்த ரோபோட் டால் எத்தனையோ செய்ய முடியும் ஆனால் அதுவும் ஐஸ்வர்யாவின் அழகில் மயங்கி அவளை அடைய வேண்டும் என்று அலைகிறது. வேறு எந்தப்பெண்ணையும் இந்த நெருக்கத்தில் பார்க்காததினால் இருக்கலாம். அவள்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிகிறது. இன்னும் இரண்டு அழகான இளம் பெண்களை அதற்கு முத்தம் கொடுக்கச் சொல்லி இத்தனை கஷ்டங்களைத் தவிர்த்திருக்கலாம். எந்தப் பெண்ணாலும் தன்னுடைய ஹார்மோன் ப்ரவாஹத்தை தணிக்க முடியும் என்று அதனுடைய அறிவுக்குத் தெரிந்து போயிருக்கும்.
(அபிஷேக் பச்சன் கவனிக்கவும்: எங்கேயாவது ரோபோட் சல்லிசா கிடைத்தால் கூட வாங்கிண்டு வந்துடாதீங்க. இந்த மாதிரி ஒரு மனைவியை வீட்டிலே வெச்சுகிட்டு ரொம்ப ஆபத்தான விஷயம்!)
அது சரி அந்த ரோபோட் சிட்டி காட்டுகிற அளவு உணர்சிகளைக் கூட இந்த ஐஸ்வர்யா முகத்தில் காணுமே. ஒருக்கால் அவர்தான் ரோபோட்டோ என்ற சந்தேஹம் வரும் அளவிற்கு உணர்ச்சி காட்டாமல் வந்து போகிறார். அருமையாக நடனம் ஆடுகிறார். ஆனால் கொஞ்சம் அசடான கேரக்டர் - படிக்காமல் பரிட்சையில் பிட் அடிக்கிறது, ஊர் பேர் தெரியாதவனைப் போய் ஒரு நாள் பாய் பிரெண்ட் ஆக இருக்கிறாயா என்று கேட்டு பிரச்சினையை விலை கொடுத்து வாங்குகிறது என்று அசட்டுத்தனமான பெண் . இத்தனை புத்திசாலியான வசீ இந்த அசடை பேசாமல் சிட்டிக்கு விட்டுக் கொடுத்து விட்டு கொஞ்சம் புத்தியுள்ள பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்திருக்கலாம். படம் இண்டர்வல்லில் முடிந்து போயிருக்கும்.
பிரம்மாண்டம் காட்டி இருக்க முடியாது. 150 கோடி செலவழித்து ரெகார்ட் பண்ணி இருக்க முடியாது. ஷங்கருக்கு வேலை இல்லாமல் போய் இருக்கும்.
என்னவோ கொடுத்த நூறு ரூபாய்க்கு என்னென்னமோ வித்தை காண்பித்தார்கள்- பெரியவர்களுக்கான கார்டூன் படம் மாதிரி. மாச்சு பிச்சு என்று அழகான இடங்கள் எல்லாம் காண்பித்தார்கள். ஐஸ்வர்யாவுக்குக் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்ததை வசூல் பண்ணவேன்டியோ என்னவோ தேவை இல்லாத இடங்களில் எல்லாம் பாட்டுக்கள் வேறே. சத்தம் கொஞ்சம் அதிகம். காதில் ஏதோ ரீங்காரம் இருந்துகொண்டே இருந்தது.

ரஜினி படங்களில் காமெடி என்று தனி track தேவையே இல்லை. அவரே அருமையாக காமெடி பண்ணுவார். இங்கே சந்தானம், கருணாஸ் என்று தேவையே இல்லாமல் மொக்கையான காமெடி track. சத்தே இல்லாமல் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் கதையை பல நேரங்களில் கெடுக்கும் வகையில் இருந்தது அவர்கள் காமெடி.

அதெல்லாம் சரி... இந்த grade 2 , 3 என்பதெல்லாம் அரசாங்க லேப் லே தானே இருக்கும்? வசீகரன் அரசாங்க லேப் லையா சிட்டியை உருவாக்கி இருக்கார்? அப்படின்னா எப்படி சிட்டியை அவ்ளோ சுலபமா சானாவோட அனுப்பினார்? 4 மேல் அதிகாரிகள் கிட்டே triplicate லே authorisation வாங்கினால்தானே முடியும்?

அவ்ளோ ரகசியமா அந்த போரா அத்தனை ரோபோக்களை பண்ணி வெச்சிருக்கார்?அதுவும் ரெடி யா பவர் சார்ஜ் பண்ணி. எனக்கு எங்கே வீட்டுலே இருக்கற 4 மெஷின்களுக்கு ரெகுலரா பவர் கட் இல்லாமே பவர் வாங்கவே உயிர் போகிறதே?
இல்லே அரசாங்க லேப் தானே என்ன வேணா நடக்கும் அப்டீங்கறீங்களா? அதுவும் சரிதான்.

எல்லாத்தையும் விட அந்த சனா வைக் கடத்தின உடனே FIR கூட file செய்யறதுக்குள்ளே அத்தனை போலிஸ்காரங்க அது பின்னாடி வந்தாங்க பாருங்க. எந்த சயன்டிஸ்ட் கல்யாணத்துக்கு இந்த போலிஸ் பாதுகாப்பு கெடைக்கும்? வேணா முதல் அமைச்சர் வீட்டுக் கல்யாணத்துக்கு கெடைக்கும்.
அப்புறம் முதல்நாள் சேகரிச்ச குப்பையை அப்டியே உடனே பெருங்குடியில் கொண்டு கொட்டிடுவாங்களாம். அதுவும் government லேப் வேஸ்ட் டை . ஏன்யா வயிற்றெரிச்சலைக் கெளப்பறீங்க....
இதெல்லாம்தான் கொஞ்சம் சயன்ஸ் பிக்ஷேன் மாதிரி இருந்தது.

ரஜினி சார், தளபதி மாதிரி இன்னொரு படம் எப்போ பண்ணுவீங்க?