Monday, August 30, 2010

கதை அல்ல நிஜம்

வடிவுக்கரசி என்ற தமிழ் நடிகை ஒரு பேட்டியில் சொன்னார்கள் அவர்களுக்கு செடிகள் வளர்ப்பதில் விருப்பம் உண்டாம். அவர்களுடைய் பால்கனியிலேயே நாலைந்து தொட்டிகளில் பூச்செடிகள் வளர்க்கிறார்களாம். இதென்ன பெரிய செய்தி என்கிறீர்களா? இருங்கள். அவர்கள் அடுத்து சொன்ன விஷயம்தான் சுவாரசியமாக இருந்தது - அதாவது இந்த செடிகளுடன் பேசுவாராம். ''ஓஹோ அந்த மாதிரி கேசா' என்று நினைக்காதீர்கள். அந்த செடிகளும் இதற்கு respond செய்யுமாம். ஒரு முறை அவர்கள் இருக்கும் கட்டிடத்தில் செடிகள் வளர்ப்பதற்கு ஏதோ எதிர்ப்பு தெரிவித்தார்களாம். ( நாட்டிலே எதைத்தான் எதிர்ப்பது என்றுதான் வரைமுறையே இல்லாமல் இருக்கிறதே நிலைமை!) சரி என்று இவரும் அந்த செடிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தாராம்: 'இங்கே செடிகள் வைத்துக்கொள்ளக்கூடாதாம். உங்களை எல்லாம் கொண்டு கீழே எங்கேயாவது வைக்கலாமா என்று இருக்கிறேன்" என்று. அடுத்த சில நாட்களுக்கு ஒரு செடியிலும் பூவே பூக்கவில்லையாம். அப்புறம் இந்த எதிர்ப்பெல்லாம் கொஞ்சம் அடங்கியதும் செடிகளிடம் 'சரி இப்படி எதனை நாள்தான் பூக்காமலேயே இருப்பீங்க. என்னாலே வெளிலே போயெல்லாம் பூ வாங்க முடியாது. கொஞ்சம் பூக்கற வழியைப் பாருங்க" என்றாராம் . மறுபடியும் பூத்ததாம்.

செடிகளிடம் பேசுவது பாடுவது போன்ற வழிகளால் அவற்றை சிறப்பாக வளர்க்க முடியும் என்று பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இங்கே பெங்களூரில் லால்பாகில் இருக்கும் nursery யில் இதமான இசையை எப்போதும் போட்டு வைக்கிறார்கள். இதற்காகத்தான் என நினைக்கிறேன்.
நமது முன்னோர்களும் செடிகொடிகளுடன் இது போன்ற அன்பு, மரியாதையுடன் இருந்திருக்கிறார்கள் என்று என்னுடைய ஆசிரியை ஒருவர் சொல்வார். நாம் துளசிச் செடியிலிருந்து இலைகளைப் பறிக்கும் போதோ அல்லது பூஜைக்காக செடிகளிடம் பூக்கள் பறிக்கும்போதோ முதலில் அவற்றின் அனுமதி கேட்டுப் பின்னால்தான் பறிக்க வேண்டும். அப்படியே போய் பூவைக் கொய்வதோ கிளையை வெட்டுவதோ இயற்கையை அவமதிக்கும் செயல் என்பார்.
இவற்றை எல்லாம் பின்பற்றி இருந்தால் இன்று இப்படி ecological imbalance எல்லாம் வந்திருக்காது.

இன்றும் கிராமப்புறங்களில் இது போன்ற நம்பிக்கைகள், பழக்கங்கள் இருக்கின்றன. என்னுடைய வீட்டில் வேலை செய்யும் பெண்மணி சில நாட்களில் செடிகளை வெட்டக்கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருப்பாள். ஒருமுறை புல்வெளியின் நடுவே மிளகாய்ச் செடி வளர்ந்திருக்கிறதே அதை வெட்டி அந்த பக்கம் வைக்கலாமே என்றேன். அதற்கு ' ஏன் வேண்டுமானால் அதை சுற்றிக் கொண்டு நீங்கள் நடக்கலாமே. அதுபாவம் இருந்து விட்டுப் போகிறது' என்று சொல்லிவிட்டு அதை அங்கேயே பாதுகாப்பாக வளர்த்தாள். கொஞ்சம் ஹிட்லர் மாதிரித் தோன்றினாலும் அவள் சொன்னதில் அர்த்தம் இருக்கிறது என்று நானும் விட்டு விட்டேன். அந்தச் செடியும் மிக நன்றி உணர்வோடு அளவுக்கு அதிகமாகவே மிளகாய் கொடுத்தது.
இதுபோல எங்கள் தோட்டத்தில் ஒரு பலாமரம் வளர்ந்திருந்தது. நானும் அது காய்க்கும் காய்க்கும் என்று ஆறு வருஷம் ஆசையாகப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது பெரிதாக வளர்ந்து கொண்டே போயிற்று ஆனால காய்ப்பதாக இல்லை. பக்கத்தில் இருந்த எலுமிச்சைச்செடி முருங்கை, கறிவேப்பிலை எல்லாம் வேறே இதன் நிழலில் காய்ந்து போய்க் கொண்டிருந்தன. சரி பலாமரத்தை வெட்டிவிடலாம் என்று தோட்டக்காரரிடம் சொன்னேன். அவர் 'பொறுங்கள் அம்மா காய்க்கும். ஒரு ஆணி கொடுங்கள்' என்று சொல்லி அதன் மேல் ஒரு ஆணியை அடித்தார். இனிமேல் காய்க்கும் பாருங்கள் என்று வேறே சொன்னார். வீட்டு வேலை செய்யும் அம்மா இதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தவள் அந்த மரத்திடம் போய் பேச ஆரம்பித்தாள் : ' உன்னை அம்மா எதற்கு பாடுபட்டு வளர்கிறார்கள். உனக்கு கொஞ்சமும் நன்றியே இல்லையே. இவ்வளவு பெரிதாய் வளர்ந்திருக்கிறாய். ஆனால் ஒரு பிஞ்சு கூட இல்லை. வெக்கமாக இல்லையா. இரு இப்படியே நீ இருந்தால் உன்னை வெட்டிதான் போட வேண்டும்" என்றெல்லாம் மரத்திடம்! எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. மூன்று மாதம் ஆன பின்னால் ஒரு நாள் என்னைக் கூப்பிட்டாள். போய் பார்த்தால் மரத்தில் 8 காய்கள். "பாத்தீங்களாம்மா, அன்னிக்கு என்னமோ சிரிச்சீங்களே. இப்போ பாருங்க. சுரணை வந்திருச்சு. எப்படி காய்ச்சு தொங்குது பாருங்க. நாம் பேசினா அதுக்கு புரியும்' என்றாள்.

எதை நம்புவது, நம்பாமல் இருப்பது எனக்கு ஒன்றும் புரியவில்லை. பலாப்பழங்கள் இனிப்பாக இருந்தன. அது மாத்திரம்தான் புரிந்தது. 'அம்மா தாயே அடுத்த வருஷமும் இது போல பழம் கொடு' என்று ஒரு application போட்டு வைத்திருக்கிறேன். அப்புறம் தோட்டப் பக்கம் போகும்போது ஏதும் எக்குத்தப்பாக பேசுவதில்லை. எதற்கு வம்பு?

Thursday, August 26, 2010

கல்யாணம் பண்ணிப் பார்

எனக்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரப் பெண் ஒருத்திக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் என் மகனுக்குத் கல்யாணம் நடந்தது என்றாலும் இப்போதுதான் திருமணம் என்ற ஒரு நிகழ்வின் முழுப் பரிமாணமும் எனக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. சமீப காலத்தில் எங்கள் நெருங்கிய வட்டத்தில் நடந்த சில திருமணங்களின் செலவு 10 லட்சத்துக்கும் மேற்பட்டது என்று கேள்விப் பட்டபோது ஒரு வேளை திருமணப் பந்தலையே பண நோட்டுக்களை வைத்து கட்டினார்களோ என்று நான் யோசித்ததுண்டு. ஆனால் இன்றைய விலைவாசியில் தலைக்கு முன்னூற்று ஐம்பது ருபாய் என்ற கணக்கில் கல்யாண சாப்பாட்டுக்கே பல லட்சங்கள் செலவாகிறதாம். அது போக மேடை அலங்காரம், பூப் பந்தல்கள், மணப்பெண் அலங்காரம், தாம்பூலப்பை , சீர் பட்சணம், இரண்டு நாள் சத்திர வாடகை சேர்த்தால் பத்து லட்சம் ஒன்றுமே இல்லை என்று என் உறவுக்காரப் பெண்மணி (பெண்ணின் தாயார்) எனக்கு விளக்கினாள். இது தவிர புடவை, வேஷ்டி, தங்க நகைகள், வெள்ளிப் பத்திரம் என்று இன்னும் சில லட்சங்கள்.

வீட்டில் ஒரு திருமணம் என்பது மகிழ்ச்சியான நிகழ்ச்சிதான்; அதைச் சிறப்பாகக் கொண்டாட நினைப்பது இயல்பே. ஆனால் கொண்டாடுவது என்றால் ஆடம்பரமாக செலவு செய்துதான் கொண்டாட வேண்டுமா என்ன? என்னதான் சொன்னாலும் பெண்ணுக்கு நகை புடவை போன்ற விஷயங்களை யாரும் குறைப்பதாக இல்லை. இதில் வேடிக்கை ஆன விஷயம் என்னவென்றால் இன்றைய இளம்பெண்கள் பலரும் தங்க நகை அணிவதை விரும்புவதும் இல்லை. ஆனாலும் பெற்றோர் விடுவதாக இல்லை. சம்பிரதாயம் என்று சொல்லி இருபது பவுனாவது போட்டு விடுகிறார்கள். இப்போதெல்லாம் ஒரு புதுக் கூத்து வேறே சேர்ந்து கொண்டிருக்கிறது. மாப்பிள்ளைப் பையனுக்கு செயின், மோதிரம் போக braceletடாம். எந்தப் பிள்ளை இதை எல்லாம் போட்டுக் கொண்டு இருக்கிறான் என்று புரியவில்லை. எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் மைனர்
வேடம் போடுபவர்கள்தான் இதெல்லாம் போட்டுக் கொண்டு அலைகிறார்கள். மற்றதெல்லாம் கழுத்தில் ஆபீஸ் id கார்டைத்தான் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறது.

புடவை - பெண்ணுக்கு மட்டுமே ஐந்து ஆறு ஆடம்பரமான புடவைகள். புடவைக் கடைகளுக்கு இதுவே ஒரு பெரிய பிசினஸ். சாமுத்ரிக்கா, பரம்பரா என்று என்னென்னமோ பேர் சொல்லி புடைவைகள் - ஒன்றாவது 25 ஆயிரத்துக்குக் குறைவில்லை. இதில் விசேஷம் என்ன வென்றால் இந்தப் பெண்களில் முக்கால்வாசிக்கு மேல் புடவையே கட்டியது இல்லை இனியும் கட்டுவதாக இல்லை. திருமண விசேஷங்களுக்குப் புடவை கட்டி அலங்காரம் செய்வதற்கென்றே அலங்கார நிபுணர்கள் வருவார்கள். பெண்ணின் கூடவே இருந்து வேளாவேளைக்கு அலங்காரம் செய்வார்கள். சும்மா 25அல்லது 30 கொடுத்ததால் போதும் - ஆயிரங்கள்தான். அந்த வீடியோ விலும் போட்டோக்களிலும் அழகாக வரவேண்டும் என்பது மட்டுமே நோக்கம். அப்புறம் இந்தப் புடவைகள் அழகாக மடித்து கப்போர்ட் உள்ளே தூங்கும். அவ்வளவுதான். இதற்கு என் இதனை விலை கொடுத்து வாங்க வேண்டும். பேசாமல் convocation gown போல வாடகைக்கு எடுத்துவிடலாமே என்று தோன்றும். மேல் நாடுகளிலும் வெட்டிங் gown க்கு செலவழிக்கிறார்கள். ஆனால் அது ஒரு உடுப்புக்காக மட்டுமே. இங்கே சுமார் ஐந்தோ ஆறோ. இதெல்லாம் போக ஒரு ஒன்பது கஜம் புடவை வேறே - அந்தக் காலத்தில் பூஜை விரதம் போன்ற நாட்களில் 9 கஜம் உடுத்துவார்கள். இப்போதோ பலருக்கும் அதை உடுத்தவே தெரியாது. ஆனாலும் சம்பிரதாயமாய் அந்த தாலி கட்டும் வைபவத்துக்கு அதைக் கட்டாயம் அணிய வேண்டும். அப்புறம் அலமாரி உள்ளே அது தூங்க வேண்டும். சரி ஒரு மணி நேரத்துக்குத்தானே என்று சாதாரணமாக வாங்குவார்களா என்றால் அதுதான் இல்லை. இரண்டு பக்கமும் கெட்டி ஜரிகை போட்டு பெரிய புடவை வேண்டும். இல்லை என்றால் கல்யாணத்துக்கு வருபவர்கள் என்ன நினைப்பார்கள் என்பார்கள். ஒரு காலத்தில் ஆந்திரா மட்டும் கர்நாடகத்தில் முஹூர்த்ததின் போது மஞ்சளில் தோய்த்த காட்டன் புடவையைத்தான் மணப்பெண்ணுக்கு கட்டுவார்களாம். நான் பார்த்த கேரளா நாயர் திருமணத்திலும் பெண் அது போல லேசான ஜரிகை போட்ட வெளிர் சந்தன புடவைதான் கட்டி இருந்தாள். பெண்ணுக்கும் பிள்ளைக்கும் நெருங்கிய உறவினர்களும் அது போன்ற புடவை அல்லது முண்டு தாவணிதான் அணிந்திருந்தனர். இந்த ஆடம்பரப் பட்டுப் புடவைகள் எல்லாம் எப்போது சம்பிரதாயம் ஆயின என்று கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்க வேண்டும். எனகென்னமோ இவை புடவை உற்பத்தியாளர்களின் மார்க்கெட்டிங் திறமையால் உருவாக்கப்பட்ட சம்பிரதாயங்கள் என்றுதான் தோன்றுகிறது.

சானியா - ஷோயப் திருமணத்தின் போது கேள்விப்பட்டேன் பாகிஸ்தானில் விருந்துகளில் ஒரு சிறப்பு உணவு item மட்டுமே போட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது என்று. இந்தச் சட்டத்தை நம் நாட்டிலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். நம் கல்யாண விருந்துகளில்தான் எத்தனை வீணடிக்கிறோம்! எத்தனை வகையான பொரியல், கூட்டு, எத்தனை வகை இனிப்புகள்! நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிக்கு மேல் சர்க்கரை வியாதி கேஸ். இன்னும் பலருக்கு உடல் பருமன் தொல்லை. எத்தனையே ஆரோக்கியமாக இருந்தாலும் திரும்பத் திரும்ப விருந்து சாப்பாடு மூன்று வேளை சாப்பிட்டால் யாருக்கும் அஜீரணம்தான் வரும். ஒரே ஒரு வேளை அல்லது இரண்டு வேளை மட்டுமே கல்யாண விருந்து கொடுத்தால் போதுமே. அதிலும் எந்த மாதிரியான விருந்து என்று தீர்மானம் செய்து கொண்டு எல்லோருக்கும் அதே போடலாம். ஒரு பக்கம் தென்னிந்திய வகைகள், ஒரு பக்கம் வடை இந்திய உணவு, அப்புறம் chinese, ஒரு பக்கம் pasta, pizza, அது தவிர சாட், அப்புறம் தோசா கவுன்ட்டர், ஸ்வீட்ஸ் அது போக ஐஸ் கிரீம். இது போல் சாப்பிட வேண்டும் என்றால் ஹோடேலுக்குப் போகட்டுமே எதற்கு கல்யாணத்தில் இத்தனை வகைகள்? இப்படித்தான் செலவையும் wastage ஐயும் அதிகரிக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு திருமணத்தில் reception ; இப்படித்தான் எக்கச்சக்கமான சாய்ஸ். ஒரு ரவுண்டு பார்த்துக் கொண்டு வந்ததிலேயே வயிறு ரொம்பிப் போன உணர்வு. நேராக தயிர் சாதம் எங்கே என்று தேடித் பார்த்து அதை மட்டும் சாப்பிட்டு வந்து விட்டேன். அதற்கும் அந்த contractor 350 ரூபாய்தானே போடப்போகிறார்? என்னைப் போலப் பலரும் இருப்பார்கள். யாரால் அங்கே போடும் எல்லாவற்றையும் சாப்பிட முடியும்.?இல்லை சாபிட்டலும் யார் மறுநாள் அவதிப் படுவது?

இது எல்லாவற்றுக்கும் மேலான ஒரு வீண் செலவு என்னவென்றால் இந்தத் தாம்பூலத்தோடு ஏதோ பாத்திரங்கள் அல்லது fancy பொருட்கள் கொடுக்கிறார்களே அது எதற்கு? முக்கால்வாசி வீட்டில் அது வேலைக்காரிக்கு போகிறது. குழந்தைகளை பிறந்தநாள் கொண்டாட அழைக்கும்போது இது போல் பரிசு கொடுத்து அனுப்புவார்கள். வாழ்த்த வரும் குழந்தைகள் பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைக்கு பரிசு கொண்டு வருவார்கள். அதனால் அவர்கள் போகும்போது வெறும் கையோடு அனுப்ப வேண்டாம் என்று ஏதானும் ஒரு பொம்மையோ விளையாட்டு பொருளோ கொடுத்து அனுப்புவார்கள். கல்யாணத்துக்கு வரும் விருந்தினர் அனைவருக்கும் தாம்பூலம் தனித்தனியே கொடுக்க இயலாது என்பதற்காக உருவாக்கப்பட்ட conveneince இந்தப்பை. அதற்கும் மேலே அதனுள்ளே எதற்கு ஒரு ஸ்டீல் பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் டப்பா? மொய்க்கு பதில் மரியாதையா? ஏற்கனவே இருக்கும் செலவு போதாதென்று இது போல் ஏதானும் புதுப் புது 'சம்பிரதாயங்கள்' வேறு எதற்கு உருவாக்க வேண்டும்?

இப்போது கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கிறது என்று சொன்னேனே அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய தாயாருக்கும் இடையே நடந்த ஒரு சம்பாஷணையின் போது நானும் இருந்தேன். தாயார் பெண்ணுக்கு இன்னும் சில வெள்ளிப் பாத்திரங்கள் வாங்க வேண்டும் என்று சொன்னாள்அதற்கு கல்யாணம் ஆக இருக்கும் பெண் சொன்னாள்; "எதற்காக அம்மா, அவர்களோ கேட்கவில்லை. எனக்கோ இவை எல்லாம் உபயோகப் படவே போவதில்லை. இதை வீட்டில் பூட்டி வைத்து விட்டு நான் வேலைக்குப் போகும்போது கவலை வேறு பட வேண்டும். ஏன் வீணாக அலைகிறாய்?" என்று. அதற்கு அவள் தாயார் சொல்கிறாள்: "இதோ பார் சபையில் சில விஷயங்கள் வைத்தால்தான் கௌரவமாக இருக்கும். நீ உபயோகப் படுத்துவாயோ இல்லையோ அதை எல்லாம் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் கொடுப்பதைக் கொடுத்து விடுகிறேன். நீ அவற்றை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்" என்று.
இது என்ன லாஜிக்? கல்யாணத்தில் சீர் செய்வது பெண்ணுக்கும் பிள்ளைக்கும் உபயோகப்படுவதர்கா இல்லை ஊர் மக்களைத் திருப்திப்படுத்தவா?
ஆனால் பெரும்பான்மையான உயர் மத்தியத்தர மக்களின் மனோபாவம் இப்படித்தான் இருக்கிறது. "மாற்றம் தேவை ஆனால் நான் அதை செய்யத் தயாராக இல்லை. வேறு யாராவது முன்வந்து செய்தால் நான் அதை ஆதரிக்கத் தயார்."

என்னவோ போங்கள். இருக்கிறவர்கள் இது போலெல்லாம் செய்து ஒரு முன்னோடி உருவாக்கி விடுகிறார்கள். இது இல்லாதவர்களின் சுமையை அதிகரிக்கிறது. அப்புறம் பெண் குழந்தை என்றாலே செலவு என்ற ரீதியில் எண்ணங்கள். இதனால் கீழ்மட்டங்களில் பல வேண்டாத பின்விளைவுகள்.

இன்னொரு சட்டமும் வேண்டும்: இந்த தேர்தல் செலவுக்கு ஒரு உச்ச மட்டம் நிர்ணயித்திருப்பதைப் போல், திருமண செலவுக்கும் ஒரு உச்சமட்டம் கொண்டு வர வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?

Wednesday, August 18, 2010

இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா

நேற்று எனது நண்பனின் சகோதரி இறந்துவிட்டார்கள். ஒரு வருடத்துக்கும் மேலாக மூளையில் கான்செர் நோயால் அவதிப் பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் போயிற்று. ஆனால் அதற்கு முந்தைய நாட்களில் அந்தப் பெண்மணியின் வாழ்கை எல்லோரும் ஆசைப் படக்கூடிய வகையில் இருந்தது. பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் எல்லோராலும் கொண்டாடப்பட்டவர். பணத்துக்கு குறையே கிடையாது. கணவர் அவர் எது செய்தாலும் அதற்கு உடன்படக்கூடிய மனிதர். இந்த காய்ச்சல் வந்த பிறகுதான் அவருக்குத் துன்பம் என்றால் என்ன என்றே தெரியும். அது வரை கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்தவர். இத்துணை முழுமையான வாழ்வு என்பது எத்தனை பேருக்கு வாய்க்கக் கூடிய ஒன்று? ஆனாலும் அவருடைய வீட்டில் யாருக்கும் மனம் சமாதானமாக இல்லை. எல்லோரும் இன்னும் சில காலம் அவர் வாழ்ந்திருக்கலாமே என்பது போலத்தான் பேசினார்கள்.

மரணத்தின் நிச்சயம் நம் எல்லோருக்கும் தெரிந்தே இருந்தாலும் நம்மைச் சுற்றியவர்களுக்கு முடிவு வரும்போது அது எவ்வளவு வயதானவர்கள் ஆனாலும் அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எங்களுக்குத் தெரிந்தவர் ஒருவரது தாயார் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக கோமாவில் இருந்த போது அவருடைய மனைவி 'இது போல இருப்பதைவிட அவர் இறந்துவிடுவதே நலம்' என்று கூறியபோது அவரது கணவருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. 'கோமாவிலாவது என் அம்மாவை என்னால் பார்க்க முடிகிறதே என்று நான் ஆறுதல் அடைகிறேன் நீ எப்படி இது போல சொல்லலாம்' என்று கடுமையாக சண்டை போட்டார். அந்த அம்மாவுக்கு அப்படி ஒரு வாழ்வு தேவையா என்று அவர் யோசிக்கவே இல்லை. நமக்கு உகந்தவர்களின் மரணம் நம்மைக் கலங்க வைப்பது அவர்களுக்காகவா இல்லை நமக்காகவா என்று எனக்குத் தோன்றும்.

எனக்குத் தெரிந்த பலரும் இறப்பு என்ற யதார்த்தத்தைப் பற்றி யோசிக்கவே தயங்குபவர்களாகத்தான் இருக்கிறார்கள். இது போன்ற பேச்சை எடுத்தாலே 'சரி அபசகுனமாக எதாவது உளராதே' என்பார்கள். இல்லை என்றால் 'அது நடக்கும்போது அதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம். இப்போது சும்மா இரு' என்பார்கள். நாம் வாழ்கையின் மற்ற நிகழ்வுகளைப் பற்றி எல்லாம் நாம் யோசிக்கிறோம். அவற்றுக்காக திட்டமிட்டு செயல் படுகிறோம். ஆனால் இறப்பு என்பது மாத்திரம் பிறருக்கு மட்டுமே நடக்ககூடிய ஒன்று என்பது போல ஒதுக்கி வைத்து விடுகிறோம். சமீப காலத்தில் இன்சூரன்ஸ் கம்பனிகாரர்கள் மட்டுமே நமக்கு இறப்பின் நிச்சயத்தை நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து எந்த வீட்டிலுமே குடும்பமாக உட்கார்ந்து ' எனக்கு ஏதானும் நேர்ந்து விட்டால் ' என்ற scenario பற்றி நிதானமாக உணர்ச்சி வசப்படாமல் பேசி நான் பார்த்ததில்லை. நானே சில சமயம் என் மகனிடமோ மருமகளிடமோ வீட்டில் எந்தெந்த file எங்கிருக்கிறது என்று சொல்ல முயலும் போதெல்லாம் அவர்கள் என்னை அடக்கி விடுவார்கள் .அதெல்லாம் நேரம் வரும்போது பார்த்துக் கொள்கிறோம் என்று.

இன்னொரு நண்பருக்கு கான்செர் மிகவும் முற்றிய நிலையில் இன்னும் சில நாட்களே என்று இருந்த சமயத்தில் கூட அவர் வீட்டில் எல்லோரும் மரணத்தைப் பற்றி நினைக்க விரும்பவில்லை. என்னமோ எல்லாம் இயல்பாக இருப்பது போலவும் ' இதோ அவர் எழுந்து முன் போல் நடமாடப் போகிறார்' என்பது போலவும் நடந்து கொண்டார்கள். ஒரு வேளை அவர்கள் உண்மையை எதிர்கொண்டிருந்தால் அந்த சில நாட்களை இன்னும் அர்த்தமுள்ளவை ஆக்கி இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது அவருடன் வாய் விட்டுப் பேசி அவரது நிஜ உணர்வுகளையும், அவரது பயங்களையும் பற்றிப் பேச ஒரு வாய்ப்பு இருந்திருக்கலாம். இவர்களுக்கு நிஜத்தை எதிர் நோக்கும் பலம் இல்லாததினால் கடைசி நாட்களில் அவர் தனது உள்மனதின் பாரங்களை மனதிலேயே சுமந்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டுவிட்டரோ என்று தோன்றியது. இதில் வேடிக்கை என்னவென்றால் நோயாளி உட்பட அத்துணை பேருக்கும் அவரது மரணத்தின் அண்மையைப் பற்றி தெரியும். ஆனாலும் யாரும் அதைப் பற்றி இயல்பாகப் பேசத் தயாராக இல்லை. மரணத்தின் பிடியில் இருக்கும் அவர் எத்துணை தனிமைப் பட்டு போயிருப்பார் இல்லை ?

நமக்குப் பிரியமானவர்கள் நம்மைப் பிரியும்போது ஏற்படக்கூடிய துக்கத்தை நான் மறுக்கவில்லை. பாசத்தால் ஏற்படும் அந்த வலி மிகவும் இயற்கை ஆனது. நான் சொல்ல வருவது என்னவென்றால் மரணம் என்ற நிகழ்வு நமக்கு அளிக்கும் அதிர்ச்சியை குறைக்க ஒரே வழி அதைப் பற்றி தெளிவாக சிந்திப்பதும் அதைப் பற்றி இயல்பாகப் பேசுவதும்தான். மரணத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டோமானால் இருக்கும் நாட்களை இன்னமும் தரத்தோடு வாழ்வோமா என்கிற கேள்விதான். அது யாருக்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்ற உணர்வு வந்தால் நம் வாழ்க்கையில் வன்மைகள் குறையுமோ? யாரும் சாஸ்வதம் இல்லை என்று தெளிந்து இருக்கும்போது பொறாமை, காழ்ப்புணர்ச்சி, பேச்சிலும் செயலிலும் வன்மை எல்லாம் குறையுமோ? எனக்குத் தெரிந்த வீட்டில் ஒரு பெண் அவரது மாமியாரை அவர் இருக்கும் வரை நோக அடித்து விட்டு இப்போது அவரது மறைவுக்குப் பின்னால் அவருக்கு ஸ்ரத்தையாக வருடாவருடம் திவசம் செய்கிறாள் - 25 வருடங்களாய். பலரும் இப்படித்தான் சொல்கிறார்கள் : 'இப்படி திடீர் என்று போய் விடுவார் என்று முன்னமே தெரிந்திருந்தால் அதை செய்திருப்பேன் இதை சொல்லி இருப்பேனே என்று. என்னமோ மரணம் என்பது அரியதான நிகழ்வு என்பதைப் போல.
மரணத்துக்குப் பின்னால் ஒருவரை நினைத்து நினைத்து அழுவதை விட அவரோடு இருக்கும் நாட்களை அன்புடனும் புரிதலுடனும் வாழ்வது இன்னும் சிறப்பல்லவா. ஒரு வேளை expiry தேதி குறிக்கப்பட்டு பிறந்தோமானால் பூமியில் வாழ்கை இன்னும் அர்த்தமுள்ளதாக வாழ்வோமோ என்னவோ?

Monday, August 2, 2010

சும்மாதான் ஹீ ஹீ

சமீபத்தில் ஒரு தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருந்த பெண் வல்லினம் மெல்லினம் எல்லாவற்றையும் கலந்து தமிழைக் கொலை செய்து கொண்டிருந்தது - bathma, meha ஹிட் , ராஜா சேஹரன் இப்படி எல்லாம் இஷ்டத்துக்கு உச்சரித்துக்கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
எனக்கு வைரமுத்துவின் அழகான வரிகள் நினைவுக்கு வந்தன:
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்கு தெரிகின்றதே வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தங்களுக்கு தெரிகின்றதா

இந்த வரிகளைக் கூட அந்த பெண் இப்படித்தான் படிப்பாளோ என்னமோ:

வலிமிஹும் இடங்கல் வலிமிஹா இடங்கல் தமிழுக்கு தெரிகிந்ரதெ
வலிமிஹும் இடங்கல் வலிமிஹா இடங்கல் தங்கலுக்குத் தெரிகின்ரதா

இது மாதிரி உச்சரிக்கும் போது தமிழுக்கும், தமிழை நேசிப்பவர்களுக்கு எத்தனை வலிக்கும் என்று அந்த பெண்ணுக்கு எங்கே புரியப் போகிறது?

எப்படியும் பாடல வரிகளை யாரும் கவனிப்பதில்லை என்பதினால்தானோ 'ஆச்சா போச்சா' ' என்று எதையோ எழுதி பாடலைப் பதிவு செய்து விடுகிறார்கள். இசை நன்றாக அமைந்து விட்டால் அது வெற்றியும் ஆகிவிடுகிறது. தமிழ் படம் என்ற படத்தில் மிக அழகாக oh maha zeeya பாடலில் கிண்டல் செய்திருந்தார்கள். வார்த்தைகளுக்கு அர்த்தமே வேண்டாம். புரியாத மொழியில் இருந்தால் இன்னும் நலம். அப்படி இருக்கிறது நிலைமை. ரஹ்மான் க்கு இது போன்ற வார்த்தைகளின் மீது பயங்கர காதல் - 'கும்சும் கும்சும் குப்பச்சி, 'அஜூபா ஜுஜோபா' என்று எதாவது ஹம்மிங் வைத்து விடுவார். அதுவும் சூப்பர் ஹிட் ஆகிவிடும்.

ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு பாடல்களை வானொலியில் மட்டுமே கேட்க முடியும். அதனால் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் அதிகம். படங்களிலும் பாடல்கள் படத்தோடு ஒட்டி இருக்கும். இப்போது போல பொழுது போகவில்லை என்றால் சுவிட்சர்லாந்த்தில் ஒரு டூயட் இல்லை என்றால் கனவு சீன் என்பது போன்ற அமைப்புகள் இருக்காது. ஒரு படத்தின் பாடல வரிகளில் இருந்தே அந்த படத்தின் கதையை ஓரளவு யூகிக்க முடியும். படங்கள் மறந்து போய் விட்டாலும் பாடல்கள் நினைவில் நிற்கின்றன. வானம்பாடி என்றொரு படம். நிறைய பேருக்கு நினைவிருக்காது. ஆனால் அந்த படத்தில் வந்த 'கங்கைக் கரைத் தோட்டம்', 'ஏட்டில் எழுதி வைத்தேன்' , 'கடவுள் மனிதனாக வேண்டும்' போன்ற பாடல்கள் எல்லோருக்கும் நினைவிருக்கும். அத்தனை அழகான, கருத்துள்ள பாடல்கள். இன்னும் சில பாடல்கள் ஏதோ நமக்காகவே நம் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்டவை போலிருக்கும். இதனாலேயே அவை காலத்தை மீறி இன்றும் பசுமையாக இருகின்றன.

வானொலியில் கேட்கும்போது பாடல் வரிகளாலும், இசையாலும், பாடகர்களின் குரலாலும் அவ்வளவு பிடித்த அந்த பாடல்களை இன்று சில சமயம் தொலைக்காட்சியில் பார்க்கும்போது சற்று அதிர்ச்சி ஆகி விடுகிறது.
'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்' என்று ஒரு அருமையான பாடல். அந்தக் காட்சியை இப்போது சமீபத்தில்தான் ஒரு தொலைக்காட்சி சேனலில் பார்த்தேன். வெறுத்துப் போய் விட்டேன்: அசோகனுக்கு இப்படி ஒரு பாட்டு தேவையா என்று. அதே போல 'ரோஜா மலரே ராஜகுமாரி' என்று ஒரு அழகான melody. திரையில் பார்த்தால் சச்சுவும் ஆனந்தன் என்று ஒரு ஹீரோ(?யாரோ ?) வும். கோர்ட்டில் கேஸ் போடலாமா என்று கோபம் வந்தது எனக்கு. இப்போதும் சில படங்களில் இது போன்ற அநீதி நடக்கிறது. இந்த 'ஜீன்ஸ்' படத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். அந்த பிரஷாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய். இது முதல் அநியாயம் என்றால் பாடல்களுக்குக் குரல் ஹரி, உன்னி கிருஷ்ணன் . இதெல்லாம் கொஞ்சம் too much இல்லை? பாடல்களை கேட்டு விட்டு படத்துக்குப் போனவர்களின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இது போலத்தான் அந்த மைக் மோகனுக்கும் ஒரு ராசி. பாட்டெல்லாம் பிரமாதமாக அமைந்து விடும். ' ஏதடா இளையராஜா, SPB, வைரமுத்து என்று ஒரு கூட்டணியே நமக்காக கஷ்டப்படுகிரார்களே' என்று கொஞ்சமாவது கஷ்டப்பட்டு நடித்தாரா என்றால் அதுதான் இல்லை. போதாக்குறைக்கு இவருக்கு என்று குரல் கொடுக்க வேறு ஒரு ஆள் - சுரேந்தர். இந்த மாதிரி அநியாயத்தின் உச்சகட்டம் 'பூவே செம்பூவே' என்ற பாடல் 'சொல்ல துடிக்குது மனசு' என்ற படத்தில். படத்தைப் பார்த்தவர்களுக்குப் புரியும் என் கோபம்.
இதுக்கெல்லாம் ஒரு சட்டம் போட வேண்டும் இனிமேல். என்ன சொல்கிறீர்கள்?

இப்போது FM ரேடியோ வாயிலாகத் திரும்பவும் வானொலி கலாச்சாரம் முன்னுக்கு வந்து கொண்டிருதாலும், முன்னைப் போல பாடல்களை அனுபவிக்க முடியவில்லை. முன்பெல்லாம் தொகுப்பாளர்கள் பாடலைப் பற்றிய சுவையான விஷயங்களைச் சொல்லுவார்கள். அளவாகப் பேசி பாடல்களை முழுமையாக ஒலிபரப்புவார்கள். இப்போது எங்கே? இந்த RJ க்கள் பேசிப் பேசியே கழுத்தறுக்கிறார்கள். அதென்ன எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியே பேசுகிறார்கள் என்றும் புரியவில்லை. பாடல்களையும் பாதி பாதிதான் ஒலிபரப்புகிறார்கள். இது நிம்மதியாய் பாடல்களை அனுபவிக்க ஏற்றமாதிரி இல்லை. fast food மாதிரி அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுவது மாதிரிதான் இருக்கிறது. பாட்டை இந்த மாதிரி அனுபவிக்க முடியுமா சொல்லுங்கள். இது இன்றைய இளைய தலைமுறையின் வாழ்கை முறையை சார்ந்ததாக இருப்பதினால் அவர்களுக்கு வேண்டுமானால் பிடிக்குமோ என்னமோ? அப்துல் ஹமீது போல வல்லினம் மெல்லினம் எல்லாம் சரியாக உச்சரித்து தமிழ் சினிமாப் பாடல்களைப் பற்றிய அபாரமான ஞானத்தோடு தொகுப்பவர்கள் எல்லாம் இன்றைய வானொலிகளுக்குத் தேவையில்லை. சும்மா பொழுதுபோக்காகப் பேசத் தெரிந்தால் போதும்.

ஹிஹிஹி, இதைப் படிக்கும்போதே புரிந்திருக்குமே எனக்கும் பொழுது போகவில்லை என்று. அதேதான். serious ஆக போஸ்ட் எழுத கை ஓடவில்லை. சரி இப்படி ஏதானும் oh maha zeeya மாதிரி அர்த்தமில்லாமல் கொஞ்சம் சத்தம் போட்டால் ஏதானும் inspiration வருகிறதா பார்ப்போமே என்றுதான். கோபித்துக் கொள்ளாதீர்கள்.