Monday, October 22, 2012

நானும் கச்சேரிக்குப் போகிறேன்

எங்கள் ஊர் பக்கப்   பேச்சில்  ஒரு வசனம் உபயோகப்படுத்துவார்கள்: 'எங்கள்  அகத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் " என்று சொல்வார்கள்.'   கச்சேரி என்பது இந்தி கச்சேரி அதாவது கோர்ட்டு. பந்தாவாக வக்கீல் எல்லாம் கச்சேரிக்குப் போய் வேலை செய்து வருகையில் எடுபிடியாய் அவர்கள்  கூடப் போய் வருவார்களே அது போல் பெயருக்கு ஒரு உத்தியோகம் செய்பவர்களைப் பற்றிக் கிண்டலான பிரயோகம்  இது.  தஞ்சாவூர்  கிண்டல் பேச்சுதான்  பிரசித்தம் ஆச்சே.

இதைப்பற்றி இப்போ என்ன என்கிறிர்களா? அங்கேதான் விஷயமே இருக்கு. இன்றைக்கு  நானும் கச்சேரிக்குப் போகிறேன் என்று ஒரு சமத்தான வேலை செய்தேன். இது வேறே விதமான் கச்சேரி - பாட்டுக்கச்சேரி. பயப்பட வேண்டாம், கேட்கத்தான்.
இதற்கு முன்பு நான் கச்சேரிக்குப் போகும்  அழகை உங்களுக்கு விவரமாய் சொல்லவேண்டும்

இங்கே பெங்களூரில் காயன சமாஜத்தில் கடந்த வருடம் மெம்பர் ஆனேன். அதிலிருந்து முடிந்த வரையில் கச்சேரிகளைத்  தவற  விடுவதில்லை. அதுதவிர வேறு சபாக்களின் கச்சேரிகளும்  இந்த ஆடிட்டோர்யத்தில் நடக்கும். பெரும்பாலும் இவற்றுக்கு டிக்கெட் எதுவும் கிடையாது. கொஞ்சம் சீக்கிரமே போனால் சீட் கிடைக்கும். இல்லை என்றாலும் நீள விராந்தாவில் சேர்கள் போட்டுக் கொடுப்பார்கள். பாடகரைப் பார்க்க முடியாது. ஆனால் சுகமாக கேட்டுவிட்டு வரலாம். அப்பப்போ பின்னணிக்கு பெங்களூர் பஸ் ஹாரனும் சேர்ந்து ஒரு ப்யூஷன் எபெக்ட் கிடைக்கும்.

இதெல்லாம் எளிதாய் தோன்றுகிறதா? ஒரே ஒரு கஷ்டம் என்னவென்றால் சபா  இருக்கும் இடம்.  இந்த சபா 1905ல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது மொத்த பெங்களூரையும் நடையிலேயே 2 மணி நேரத்தில் சுற்றிவந்து விடலாம். நல்ல ஷஹரான  இடத்தில் சபாவை ஆரம்பித்திருக்கின்றனர். இன்றைய பெங்களூரில்இந்த இடத்துக்கு காரில் போனால்  ஒரு மைல்  துரத்தில் நிறுத்திவிட்டு நடக்கவேண்டும். அத்தனை போக்குவரத்துள்ள இடம் இது. பிரதானமான மார்க்கெட்டுக்கு போகும் சாலை இது.  சபா வாசலில் இருக்கும் பார்க்கிங்கில்  சபா  ப்ரெஸி டென்ட், செக்ரட்டரி, இதர கமிட்டி உறுப்பினர்களுடைய  வாகனங்களை  நிறுத்தத்தான் இடம் உண்டு, எங்கள் வீ டு இருக்கும்இடத்திலிருந்து சபா 8- 9` கி மீதான்  என்பதால் முதல் கச்சேரிக்கு ஒரு ஆட்டோவில் போகத் தீர்மானித்தேன்.   அங்கங்கே மெட்ரோ ரெயிலுக்காக கட்டுமான வேலை நடந்துகொண்டிருப்பதில் அங்கும் இங்கும் சுற்றி ( எனக்கு தலை சுற்றி) அரை மணி நேரமாச்சு போவதற்கு . மீட்டர்  110 ரூபாய் காண்பித்தது. இந்த அநீதிக்குத்  துணை போகக் கூடாது என்று அடுத்த கச்சேரியிலிருந்து பஸ் ரூட்களை கண்டு பிடித்து நேரத்தே கிளம்பி பஸ்சில் போக ஆரம்பித்தேன்.

6 மணிக்கே கச்சேரிகள்  ஆரம்பிக்கும். 4 மணிக்குள் இரவுக்கான  சமையல் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ( திரும்பி வந்த உடனேயே  பசிக்குமே. நடுவில் வீ ட்டில் பிறர் சாப்பிட வேண்டுமே) நாய்களுக்கும்  உணவு கொடுத்துவிட்டு, 4. 30 க்குள் தயாராகி வீட்டை விட்டு வெளியேறுவேன். கையில் ஒரு பை. அதில் பர்ஸ், அப்புறம் சில்லரை பர்ஸ் தனியே ( இந்த ஊ ரில் பஸ் கண்டக்டர்களிடம் சில்லறையே இருக்காது ), ஒரு தண்ணி பாட்டில், கர்சீ ப், ஒரு சின்ன விசிறி , அவசரப்பசிக்கு  4 பிஸ்கட், கண்ணாடி, ஒரு புத்தகம், ஒரு குடை, செல்போன் இத்தனையும். வீ ட்டிலிருந்து பஸ் நிறுத்தம் 10 நிமிட நடை, அந்த முனையிலும் சபாவுக்கு 6-8 நிமிடம் நடக்கணும். இதனால் செருப்பெல்லாம் சரிப்படாது என்று காலில் வாக்கிங் ஷூ. நல்ல பிரிண்டட் சில்க் புடவை ( என்ன இருந்தாலும் கச்சேரிக்குப் போவதற்கு ஒரு பத்ததி உண்டில்லையா?) , காலில்  ஷூ, கையில் மேற்சொன்ன அத்தனையும் அடங்கிய ஒரு பெரிய பை இதுதான்  நான் கச்சேரிக்குப் போகும் கோலம்.

இதே கோலத்தில்தான் இன்றும் கிளம்பினேன். போன வாரம் சபாவுக்குப் போன போது கிடைத்த ஒரு கச்சேரி நோடீஸில் 22ம் தேதியிலிருந்து 25 ம்  தேதி வரையிலான கச்சேரிகள் பற்றிய விபரமும், எல்லோருக்கும் அனுமதி உண்டு என்றும் பார்த்தேன். முதல்  கச்சேரி 22ம்  தேதி டி . எம் கிருஷ்ணா . இன்றைக்கு.  நாளைக்கு சரஸ்வதி பூஜை. வீட்டிலும் நிறைய வேலைகள் இருந்தன. ஆனாலும் விட மனசு வரவில்லை. சரி ரெண்டு மணி நேரமாவது கேட்டுவிட்டு வந்துவிடலாம் என்று மேற்படி ஆயத்தங்கள் எல்லாம் செய்துகொண்டு சரியாய் 6 மணிக்கு சபா வாசலில் போய் நின்றேன். வாசலில் கார்கள் அவ்வளவு இல்லை. தசரா இல்லையா. அதான் கூட்டம்  கம்மி என்று  கொஞ்சம் சந்தோஷத்துடன் உள்ளே போனேன். விறாந்தாவில் சுவாமி சிலைகளுக்கு முன் விளக்கெல்லாம் ஏற்றி பூ போடு வைத்திருந்தார்கள். அப்புறம் நீளவாக்கில் மேஜைகள் போட்டு  கமிட்டி உறுப்பினர்கள் எல்லாம் ஏதோ சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆயுத  பூஜை போட்டுவிட்டு நல்ல டிபன் போலிருந்தது. உள்ளே கால் வைத்தவள்  'ஒ சாரி' என்று வெளியே வந்தேன்.

பின்னாலே சபா  ஊழியர் ஒருத்தர் 'ஏனு மேடம்' என்று கேட்டுக்கொண்டு வந்தார்.  'கிருஷ்ணா  கச்சேரி...' என்று ஆரம்பித்தேன். 'அது அடுத்த மாசம்னா .. . 28 அக்டோபர் லேர்ந்து நம்ம சபா வருஷாந்திர இசை மாநாடு. அப்புறம் அடுத்த மாசம் அந்த ப்ரோக்ராம். ' என்றார்.

அசடு வழிந்தேன். தலையிலும் அடித்துக்கொண்டேன். சரி வந்ததற்கு பாத்ரூம் போய் விட்டுப் போகலாம் என்று பின்பக்கம் போக கால் வைத்தேன். 'அந்தப்பக்கமும் பூட்டி இருக்கு' என்றார் ஒரு கமிட்டி மெம்பர். என்னைப் பார்த்தால் அவருக்குக் கொஞ்சம் சந்தேகமாய் இருந்தது போல. அவரைச் சொல்லிக் குற்றமில்லை.

இப்படியாகத்தானே நானும் இன்றைக்குக் கச்சேரிக்குப் போய் வந்தது.

ஆனால் அங்கே இருக்கும்  அழகான 4 கோவில்களில் நுழைந்து நிம்மதியாய் தரிசனம் செய்துவிட்டு வந்தேன். இன்றைக்கு ஒவ்வொன்றிலும் பிரமாதமான் அலங்காரம். 33 வருடங்களாய் பெங்களூரில் இருந்தும் பார்க்காத கோவில்கள்.
அசட்டுத்தனமும இப்படி நல்லபடியாய் முடிந்தது.

Monday, April 25, 2011

பாம்புக்கதைகள்

பாம்பு என்றால் எனக்கு ரொம்ப பயம். இதில் என்ன புதுமை - எல்லோருக்கும்தான் பயம் என்கிறீர்களா? பலருக்கும் பாம்பைப் பார்த்தால்தானே பயம்? எனக்கு பாம்பு என்று எழுதிக் காட்டினாலே பயம். ஐந்து வயது இருக்கும் - அமாவாசை அன்று அம்மா சுவாமிக்கு முன் பாம்புக்கோலம் போட்டு தேங்காய் உடைத்து வைத்திருந்தாள். அந்தத் தேங்காயை தின்னப் பார்த்தபோது ‘ம்ஹ்ம். தேங்காயை தின்னக்கூடாது. பாம்பு கடித்துவிடும்’ என்று சொன்ன நினைவு. நைவேத்யத்துக்கு முன் தின்னக் கூடாது என்றாளா , என்ன சொன்னாள் என்பது சரியாய் நினைவில்லை. மனதில் அந்த வயதில் பதிந்தது அமாவாசை அன்று தேங்காய் தின்றால் பாம்பு கடித்துவிடும் என்ற தகவல். பின்னொரு அமாவாசை அன்று அதை மறந்து போய் தேங்காயைத் தின்று பல நாட்களுக்கு பயந்து நடுங்கியதும் நினைவிருக்கிறது. அந்த சமயத்தில்தான் இந்த பயமும் ஆரம்பித்ததோ என்னவோ. சமீப காலம் வரை பாம்பு என்று சொல்லக் கூட மாட்டேன் - ‘அது’ என்று தான் சொல்வேன்.
என் பயத்துக்குத் தகுந்தாற்போல சரியாய் ஒரு இடத்தில் எங்களது க்வார்டெர்ஸ் அமைந்தது. முதலில் வனாந்திரமாய் இருந்த இடத்தில் அரசாங்கம் தாராளமாய் 100 ஏக்கர் நிலம் ஒதுக்க அங்கேயே அலுவலகம் க்வார்டெர்ஸ் எல்லாம் கட்டிவிட்டார்கள். அப்புறம் என்ன, அவ்வப்போது ஊர்வன ஜந்துக்கள் எல்லாம் சுதந்திரமாய் தோட்டத்தில் ஊர, நாங்கள் நடுங்கிக்கொண்டே நடமாடுவோம். இந்தச் செடி வளர்த்தால் வராது அந்தக் கொடி போட்டால் வராது என்றார்கள். எல்லாம் செய்தும் சில நாட்கள் நன்றாய் உடம்பை நீட்டி முன் வெராந்தாவில் மத்தியான வெய்யிலில் ஒன்று பெரிதாய் படுத்திருக்கும். எனக்குக் குலை நடுங்கும்.
சுப்பிரமணிய ஸ்வாமிக்கு (முருகனுங்க, அரசியல்வாதி இல்லை) ஒவ்வொரு கிருத்திகை அன்றும் தேங்காய் உடைத்தால் கண்ணிலேயே படாது என்று என் சித்தி சொல்ல அதை செய்தேன். செய்த வரைக்கும் கண்ணில் படவில்லை என்பது நிஜம்தான்.
அப்புறம் சொந்த வீட்டுக்கு மாறியபின் இதைச் செய்ய விட்டுப்போய் நின்றே போச்சு. ஒருநாள் பார்த்தால் கிட்டத்தட்ட பதினைந்து அடிக்கு ஒன்று தோட்டத்தில். ஒரு அரைமணி படுத்துவிட்டு அப்புறம் நிதானமாய் பலாமரத்தில் ஏறிக் காலியாய் இருக்கும் பக்கத்து மனையில் போய் சுவாதீனமாய் படுத்துக்கொண்டது. இன்னொரு நாள் கம்ப்யூடெரிலிருந்து தலையை தூக்கி ஏதொ யோசனையுடன் ஜன்னலைப்பார்த்தால் அந்தப்பக்கம் மண்தொட்டியில் வைத்திருந்த செடியின் மேலெ ஒன்று தலையைத் தூக்கி நாக்கை நீட்டுகிறது. அரண்டு போய் ஜன்னலை அவசரமாய் சாத்தி கர்ட்டனை இழுத்துவிட்டு உள்ளெ போய் விட்டேன்.

இந்த அழகில் ஒரு நண்பர் ஒரு கதையை அனுப்பி அதைத் தமிழில் மொழி பெயர்க்கச்சொன்னார். ’ஓ செய்கிறேனே’ என்று ஆர்வத்துடன் கதையைப் படித்தால் கதை முழுக்கப் பாம்புகள். ஆனால் அருமையான கதை. ஒவ்வொரு வர்ணனையும், சம்பவமும் சித்திரம் போல வார்த்தைகளால் வரைந்து அருமையான நடை.
கதை இங்கே - படித்துப் பாருங்கள்:
http://www.vondanmcintyre.com/McIntyre-MistGrassSand.

என் மொழிபெயர்ப்பு (முதல் பகுதி) இங்கே

அதோடு எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தை வைத்து ஒரு சிறுகதையும் இங்கே. இந்தப் பிள்ளையின் தந்தையும் தாயும் நான் வேலை செய்த வங்கியில் கணக்கு வைத்திருந்தார்கள். இந்த வாண்டுப்பையன் - நாலு வயது இருக்கும் . வங்கிக்கும் வருவான். ஒருநாள் அவனுடைய தந்தை இந்த சம்பவத்தை சொல்ல அன்றிலிருந்து அந்தப் பையனைப் பார்த்தால் எனக்குக் கொஞ்சம் நடுக்கம்தான். அவன் பையில் என்னத்தைப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறானோ என்று. என்ன விஷயம் என்கிறீர்களா? படித்துவிட்டு சொல்லுங்கள்.

Sunday, April 10, 2011

ப்ரெசென்ட் சார்

கொஞ்ச நாட்களாய் காணாமல் போன காரணம் வேறொன்றுமில்லை இந்த வருடம் பெங்களூரில் அசாத்திய வெய்யில். எனக்கும் வயதாகிறதா தாங்கவில்லை.
ஸ்விட்ஜெர்லாந்து, ந்யு யார்க்கு இங்கே இருந்தெல்லாம் ‘ஐயோ இங்கே இன்னும் பனி கொட்டுகிறது” என்று எழுதி என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறென்.

அப்புறம் இந்த 52.11 வயதில் முதல்முறையாய் ஒரு பத்திரிக்கையில் நான் எழுதிய கதையை பிரசுரித்திருக்கிறார்கள். படிச்சு அபிப்பிராயம் சொன்னீங்கன்னா ஊக்கமாய் இருக்கும். எப்படி திருத்திக்கலாம்னும் ஐடியா சொன்னா நன்னா இருக்கும்.
உங்கள் மறுவினையை எதிர்பார்க்கும்,
உஷா

Sunday, February 6, 2011

இந்திய ரயில் பயணிகளின் கவனத்துக்கு

என்னிடம் இந்திய ரெயில்வேசுக்கு ஏதோ பிணக்கு என நினைக்கிறேன். முன்னமேயே எனது சில கசப்பான அனுபவங்களைப் பற்றி இங்கு எழுதி இருக்கிறேன். ஒரொரு முறை பயணிக்க வேண்டிய நிர்ப்பந்த்தம் வருகையிலும் எனக்கும் கணவருக்கும் இதைப் பற்றி ஒரு வாக்குவாதம் நடக்கும்.
வை: விமானத்தில் தொந்தரவு இல்லாமல் போகலாம்.
நான்: ட்ரெயினில் ஏ.சி கோச்சில் போனாலும் தொந்தரவு இல்லாமல் போகலாம். விமானம் என்றால் பயண நேரத்துக்கு 4 மணி நேரம் முன்னால் புறப்பட வேண்டி இருக்கிறது ஒரு மணீநேர பிரயாணத்துக்கு . இங்கே இரவு ரயிலில் ஏறிப்படுத்துவிட்டால் ஊர். டிக்கெட் செலவும் பத்தில் ஒரு பங்குதான்.
வை: தூக்கம் சரியாய் இருக்காது. பாத்ரூம் நன்றாய் இருக்காது. யாரானும் தவறாய் நடப்பார்கள். பெட்டி திருடு போகும். விமானத்தில் அதெல்லாம் இருக்காதே.
நான்: ஏன் உங்கள் வாயில் நல்ல வார்த்தையே வராதா. ட்ரெயினில் போகும் எல்லோருக்கும் இதெல்லாம் ஆகிறதா என்ன? ஏதொ ஒன்றிரண்டு தரம் ஆவதயே நினைத்து பயந்து கொண்டிருந்தால் வெளியே கிளம்புவதே கஷ்டம். விமான சௌகர்யம் எல்லாம் எதற்கெடுத்தாலும் பழகிப்போனால் அப்புறம் கஷ்டம் ஆகிவிடும். கொஞ்சம் உடம்பை வருத்தப் பழக வேண்டும்.
வைத்தியநாதன் ஒப்புக்கொள்ள மாட்டார். நானும் விட்டுக் கொடுக்காமல் கண்களில் நம்பிக்கை நட்சத்திரத்தை வைத்துக் கொண்டு ”நம் ரெயில்வே ஒண்ணும் அத்தனை மோசம் இல்லை’ என சொல்லிக் கொண்டு ட்ரெயினில் போவேன்.

என் நம்பிக்கையைத் தகர்ப்பதே குறிக்கோள் என்பதுபோல ஏதானும் எனக்குத்தான் நடக்கும். ஒரு முறை சென்னையிலிருந்து வரும் இரவு ரயிலில் செகண்ட் க்ளாஸ் கோச்சில் என் பெர்த்தில் யாரோ ஒருவன் படுத்துக்கொண்டு அரக்கோணம் வரையில் இறங்கமாட்டேன் எனப் படுத்தல். அதிலிருந்து ஏ சி கோச்தான். இன்னொருமுறை சைட் பெர்த்தில் இருந்த என் வயதுப் பெண்மணியை ஒரு இளைஞன் தடவிப் பார்க்க, அந்தப் பெண்மணி சொன்னாள் அவன் குறி வைத்தது சிறு வயதான என் மருமகளைத்தான் இருக்கும். தவறுதலாய் அடுத்த பெர்த்தில் இருந்த அவளைத் தொட்டு விட்டான் என்று. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போச்சு. ஆனாலும் அதற்குப் பிறகு விழித்துக் கொண்டே பயணம் செய்தோம்.

இந்தத்தரம்.

என் சம்மந்தி வீட்டில் அவர்களது முதல் பேத்திக்கு ஆயுஷ்யஹோமம் கோயமுத்தூரில். குழந்தையைப் பார்க்கும் ஆர்வத்தில் சந்தோஷமாய் கிளம்பிப் போனேன். இரண்டு நாளைக்குத் துணிமணிகள். பரிசுப்பொருட்கள். இவ்வளவுதானே. விமானத்தில் அனுமதிக்கும் கைப்பெட்டி அளவில் ஒரு ட்ராலி பேட்டியே போதுமாய் இருந்தது. எனக்குப் பாதையோடு இருக்கும் சைட் பெர்த்தில் மேல் பெர்த். கிழே காலி. யாரும் வரவில்லை என்றால் அங்கே போய் படுத்துவிடலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில் வேக வேகமாய் ஒரு பெண்மணியும் இளைஞனும் ஏறி வந்தனர். ஆர் ஏ சி என நினைக்கிறென். சீட்டுக்கு கீழே பெட்டியை என் பெட்டிக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு பிள்ளை கிழே இறங்கும் முன் ட்ரெயினே நகர ஆரம்பித்துவிட்டது. மணி பத்தரை. தூங்கும் முன் அவள் யாரிடமொ போனில் பேசியது கேட்டது:’காலையில் 4 மணிக்கே ஸ்டேஷன் வருமாம். 3 30கு அலாரம் வைத்து என்னை கொஞ்சம் கூப்பிடுகிராயா?’
3 15மணி இருக்கும் . நான் ஒரு முறை கிழே இறங்கிப் போன போது அந்தப் பெண்மணி பெர்த்தில்இருந்தாள். நான் செருப்புத் தேடும்போது கொஞ்சமாய் தலையைத்திருப்பி பார்த்தாள் - ரொம்ப ஜாக்கிரதை, சமர்த்து போலிருக்கிறது என எண்ணிக் கொண்டேன்.
மறுபடி எனக்கு விழிப்பு வந்த போது கிழே காலி - ஐந்து மணி.
ட்ரெயின் அப்புறம் ஆடி அசைந்துஅரை மணி தாமதமாய் கோயமுத்தூர் போயிற்று. அதற்குள் என் உறவினர் 3 முறை போன் போட்டு 'எங்கே இருக்கிறீர்கள்?' என்றெல்லாம் விசாரித்து 'டாக்சி வெளியே காத்திருக்கிறது' என்று சொல்லி இருந்தார். ஒரு வழியாய் ஸ்டேஷன் வந்ததும் இறங்கிப் பெட்டியை எடுத்த போது ‘அட அகிலாவுடைய அமெரிகன் டூரிஸ்டெரையா எடுத்துவந்தேன்’ என யோசித்துக் க்கொண்டெ வெளியே வந்து விட்டேன்.
(நான் எடுத்துப்போன பேட்டி நீல எகொலாக் ஆனால் எனக்கு இப்போதெல்லாம் காலையில் மூளை அவ்வளவு சுறுசுறுப்பாய் இருப்பதில்லை. ஆழ்வார்பேட்டை ஆண்டவர் சொன்ன மாதிரி இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலக்கம்தானடா)
ட்ரெயின் தாமதமானதில் டேக்ஸி ட்ரைவெருக்குக் கொஞ்சம் கோபம் போலத்தெரிந்தது. கொஞ்சம் சிடு சிடு வென்றிருந்தார்.

ஏற்கனவே தாமதம்.விசேஷ நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. வேகமாய் போய் குளித்து தயாராக வேண்டுமே. விடு விடு வென்று டேக்ஸியில் ஏறி வீடு வந்தேன். குழந்தையைக் கொஞ்ச ஆசையாய் இருந்தது ஆனால் அது புதிய முகத்தை பார்த்ததும் சிணுங்கியது. 'சரி வாங்கி வந்த பொம்மையை வைத்து நைஸ் செய்யலாம்' என்று பெட்டியைத்திறந்தால் 6 டி ஷர்ட்டு, நைலான் புடவைஒரு ஆலிவ் ஆயில் புட்டி.அட்ரெஸ் எதுவும் இல்லை.
(இங்கே ஒரு BGM - சிவமணியின் ட்ரம்ஸ் அல்லது எம்பாரின் வயலின்உங்கள் விருப்பத்துக்கேற்ப போடுக்கொள்ளுங்கள் )

உடனே எனது சம்மந்தி ஸ்டேஷன் மாஸ்டருக்கு போனில் பேசி விபரம் சொல்ல அவர் ' யாரானும் உங்கள் பெட்டியுடன் வந்தால் கூப்பிடுகிறொம்’ என்று வைத்துவிட்டார். உடனே வா கம்ப்ளைன்ட் எழுதிக்கொடு என்று சொல்லவில்லை. எங்களுக்கும் என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை.

சரி அடுத்தது நடபப்தைப் பார்ப்போம் என்று குளித்து, அகிலாவுடைய ரவிக்கை, புடவை எதோ அங்கு இருந்ததைசுற்றிக்கொண்டு மண்டபத்துக்குப் போயாச்சு. . அதற்குள் விஷயம் பரவி எல்லோரும் ஒருவர் ஒருவராய்
அடடா எப்படி ஆச்சு.? do you think it was deliberate or was it a genuine mistake?'
‘’ஒங்க பொட்டி கெடச்சுதா?’’
அதுலெ வேல்யூயபில்ஸ் ஜ்வெல்ஸ் ஒன்னும் வெக்கலியே?
கெடைச்சுடும் கவலைப்படாதிங்கோ என்றெல்லாம்.
அக்ஷதை போட்டு ஆசிர்வாதம் செய்தாயிற்று. ஹோமம் ஆரம்பித்தது. நைசாய் நழுவிப்போய் ஸ்டேஷனில் ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்து அப்படியே அந்த பாசெஞ்செரின் விபரம் எதானும் தெரிந்தால் வாங்கி வரலாம் என்று கிளம்பப் பார்த்தேனா, வழியில் சம்மந்தி பிடித்து விட்டார். ’தனியாய் எங்கே போவேள். ஹோமம் முடிஞ்சுடட்டும். யாரையானும் ஒங்க கூட அனுப்பறென். இன்னம் 1 மணி நேரத்திலே ஆயிடும்.
அவர் சொல்வதும் நியாயமாய்ப் பட்டது. எனக்கும் ஊர் தெரியாது. சரி என்று உள்ளே வந்து உட்கார்ந்தேன். ஒரு மணி நேரம் ஆச்சு. வாத்யார்கள் நிதானமாய் ஹோமம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
சம்மந்தி மாமி என்னை பலருக்கும் அறிமுகம் செய்தி வைத்துக் கொண்டிருந்தாள்: ;
”அகிலா மாமியார். பாவம் காத்தாலெ ட்ரெயின்லெ இவா பொட்டி காணமெ போச்சு.’ உடனே அவர்கள் அவர்களுக்கு நடந்த ஒரு அனுபவத்தை சொல்லுவார்கள். மொத்தத்தில் நாலில் மூன்று பேருக்கு ரெயிலில் பெட்டி தொலைத்த அனுபவம் இருக்கிறது போலிருக்கிறது.
எனக்கோ நேரம் ஆக ஆக மனதுக்குள் குடைச்சல். மெதுவாய் சென்னைக்குப் போன் போட்டுத் தங்கையை போனில் கூப்பிட்டு IRCTC tkt booking சைட்டில் போய் எதானும் ஹெல்ப்லைன் இருக்கிறதா பார் எப்படியானும் அந்த பெர்த்தில் இருந்த ஆளின் விபரம் கிடைக்குமா பார் என்றேன்.
அரை மணியில் அவ்ள் கூப்பிட்டாள். தேடுவதற்கு அவர்களுக்கு pNR number அல்லது passenger name வேண்டுமாம். ஸ்டேஷனில் போய் வாங்கி வா என்றாள்.
சரி எப்படியும் ஹோமம் முடியும் முன் கிளம்ப முடியாது. நேரம் ஆனது ஆச்சு. ஒரு வழியாய் எல்லாம் முடிந்தபின்னரே போவதுதான் மரியாதை என்று பொறுமையாய் காத்திருந்தேன்.
காத்திருக்கும் நேரத்தில் மாமாவை பிடிப்போம் அவருக்கு ரெயில்வேஸில் யாரானும் தெரிந்தால் போனிலேயே இந்த விபரம் வாங்கித்தருவாரா பார்க்கலாம் என்று என் அம்மாவின் சகோதரரை போனில் கூப்பிட்டேன்.. அவர் கோயமுத்தூரில் ஒரு ரிடயர்மெண்ட் காலனியில் 15 வருடங்களாய் வசிக்கிறார். அவரது காலனியில் பலரும் அரசாங்கத்தில் உயர்பதவியில் இருந்து ரிடயர் ஆகி, பெண் பிள்ளை எல்லாம் வெளிநாட்டில் இருப்பதால் இது போன்ற காலனியில் வசிக்கிறர்கள். சமைக்க வேண்டாம். தினப்படி லாஜிஸ்டிக்ஸ் பற்றி கவலைப்பட வேண்டாம்.
மாமாவிடம் விபரம் சொன்னேன். அவர் ’இரு ஒரு ரெடயர்ட் ரெயில்வே சீஃப் எஞ்சினியர் எதிர் வீட்டில் இருக்கிறார் அவரிடம் பேசி திரும்பக் கூப்பிடுகிறென்’ என்று சொல்லி விபரம் எல்லா வாங்கிக் கொண்டார்.
மறுபடியும் ஒரு மணி நேரம் ‘கிடைத்ததா? கிடைத்ததா?’ என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
இதற்கு நடுவே பலவிதமான அட்வைஸ்:
நீங்க ஒரு செயின் போட்டு பெட்டியை கட்டிடணும் ( இது சரிதான். இனிமேல் ரயிலில் போவதென்றால் முதலில் எடுத்து வைக்க வேண்டியது ஒரு செயின்தான்.)
ஒரு எஃப் ஆர் லாட்ஜ் பண்ணிடுங்கோ ( இதுவும் சரிதான். முதலிலேயே நான் இதை செய்திருக்க வேண்டும்)
"பெட்டியை ஸ்டேஷன் மாஸ்டரிடம் குடுத்துடாதீங்கோ அப்புறம் அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் ஹோல்ட் போயிடும்." ( இது தவறு என்று பிறகு புரிந்தது. நான் இந்த ஸ்டேஷன் கம்ப்ளெயின்ட் கொடுத்து பெட்டியை கொடுத்திருந்தால் எனக்குநன்மையாய் இருந்திருக்கும்.)
இதெல்லாம் பட்டால்தானே தெரிகிறது!
நல்ல் வேளை ஒரு மணி நேரத்தில் மாமாவிடமிருந்து போன் - அந்த அசட்டின் முழு ஜாதகமும் கையில். பெயர், வஃப் ஆஃப், அட்ரெஸ், மொபைல் நம்பர், வீட்டு போன் நம்பர்எல்லாம்.
அவர்களுக்கு போன் பேசி அவர்கள் திருப்பூர் ரெயில்வே போலீஸ்காரனுடன் உட்கார்ந்திருப்பது வரை கண்டுபிடித்துவிட்டார் ரிடயர்ட் சீஃப் எஞ்சினியர்.
ஆஹா பெட்டி கிடைத்தே விட்டது என்ற சந்தோஷத்தில் அவர் கொடுத்த நம்பருக்கு போன் செய்தேன்.
'என்ன இப்படி இன்னொருவர் பெட்டியை எடுத்துப் போய் விட்டீர்களே ?' என நிதானமாய்தான் ஆரம்பித்தேன்.
உடனே அந்த மனிதர் என் மேல் பாய்ந்தார் ' என்ன சொல்றீங்க மேடம், தாராபுரத்துலே வீட்டுக்கு போனதும் தவறு தெரிந்து இங்கே திருப்பூர் ரயில்வே போலிஸ் ஸ்டேஷனுக்குவந்துட்டோம். எங்க மேலே தப்பு சொல்றீங்க?'
இது என் பெட்டியை எடுத்துப்போன பெண்மணியின் கணவர்.
பின்பு போனை அந்த ரயில்வே போலிஸ்காரரிடம் கொடுத்தார்: அவர் என்னிடம் " சரி மேடம், உங்க பேட்டியில் என்ன சாமான் எல்லாம் இருந்தது சொல்லுங்க?' என்றார். நான் சேப்டி பின் வரையில் விபரம் சொன்னதும், 'ஆமாம் உங்க பெட்டிதான். நீங்க என்ன பண்றீங்க...இங்க திருப்பூர் ஸ்டேஷனுக்கு வந்து அவங்க பெட்டிய கொடுத்துட்டு உங்க பெட்டிய வாங்கிட்டு போய்டுங்க" என்றார்.
அப்போது மணி மதியம் 2. மறுநாள் காலை 8 மணிக்கு நான் ஏர்போர்டுக்கு கிளம்ப வேண்டும். திருப்பூருக்கு டேக்ஸியில் போக வேண்டும் என்றால் மொத்தம் 5 மணி நேர பயணம் 2000 ருபாய் டேக்ஸி செலவு.
இது வரைக்கும் மனிதர்கள் ஒரு 'ஸாரி' கூட சொல்லவில்லை. என்ன மாதிரி மனிதர்கள் பார்த்தீர்களா.
'என்ன இது தவறு உங்களிடம். என்னைப் போய் அங்கு வர சொல்கிறீர்களே. இது நியாயமா? என்றதற்கு 'என்ன சும்மா தவறு தவறு அப்ப்டிண்றீங்க. நிங்களும்தான் தவறு பண்ணிருக்கீங்க?' என்றார் அந்த பெண்ணின் கணவர்.
!!!
(ஒரு வேளை அவர் மனைவி இருந்த கோச்சில் பிரயாணம் செய்ததே தவறோ? பின்னர் புரிந்தது நான் அவர்கள் பெட்டியை எடுத்து வந்தது தவறு என்று. )

கொஞ்சம் வாக்குவாதத்திற்குப் பிறகு முதலில் 'சரி கோயமுத்தூர் ஸ்டேஷனில் கொண்டு வந்து கொடுக்கிறோம் ' என்றவர்கள் பத்து நிமிடத்துக்குப் பின் போன் செய்து 'அதெல்லாம் வர முடியாது. நங்கள் இங்கு ஸ்டேஷனில் ஒப்படைத்து விட்டோம். நீங்களும் அங்கே ஸ்டேஷனில் கொடுத்து விடுங்கள். எங்களால் அங்கெல்லாம் வர முடியாது' என்று விட்டார்கள்.
'சரி நானே வருகிறேன். டேக்ஸி செலவை ஷேர் செய்து கொள்ளுங்கள்' என்றதற்கு ' நீங்கள் ப்ளேனில் வருவீர்கள் அதற்கெல்லாம் நாங்கள் கொடுக்க முடியாது' என்று போனை வைத்து விட்டு பிறகு எனது காலை எல்லாம் கட் செய்து விட்டனர்.
கடைசியில் யாரையோ அனுப்பி பல கஷ்டங்களுடன் பெட்டிக் கையில் வந்த போது மணி நள்ளிரவு 12. பெட்டியை எடுத்துப் போன பெண்மணிக்கு வீட்டிலிருந்தபடியே சௌகர்யமாய் அவர்கள் பெட்டி கிடைத்தது. எல்லாத் திண்டாட்டமும் எனக்குத்தான்.
தெரியாத ஊரில் மாற்றுத் துணி கூட சரியாய் இல்லாமல், நாள் முழுவதும் பெட்டியைத் தேடி அலைந்து, பின்னால பணமும் செலவழித்து, மனதால் கஷ்டப்பட்டு திரும்ப வந்தால் போதும் என வந்து சேர்ந்தேன்.

இந்த அனுபவத்தில் கற்றதும் பெற்றதும்:
1. இறங்கும் முன் பெட்டியை சரி பார்த்து நம்முடையது இல்லை என்றால் உடனே கம்ப்ளயின்ட் செய்ய வேண்டும்.
2. நம் பெட்டிகளை செயின் போட்டுக் கட்டி விடுவது நல்லது.திருடிப்போனால்தான் என்றில்லை இப்படி மாற்றி எடுத்துபோனாலும் நமக்குத்தான் திண்டாட்டம். மனிதர்களில் நியாயமானவர்கள் மிகக் குறைந்து போய் விட்டார்கள்.
3.நியாயம் நம் பக்கம் இருந்து ஒரு பயனும் இல்லை. போலீசுக்கும் ரெயில்வேசுக்கும் நியாயத்தைப் பற்றிய கவலை இல்லை. ப்ரோசீஜர்தான் முக்கியம்.
4. இதில் சரியான ப்ரோசீஜர் என்ன என்பதை யாரும் நமக்குச் சொல்ல மாட்டார்கள். நாமே தெரிந்து வைத்துக் கொள்ளுவது நல்லது. ( அதற்குத்தான் இவ்வளவு விபரமும் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.)

எல்லாவற்றுக்கும் மேல் கற்றுக்கொண்ட வாழ்க்கைப்பாடம்:
இன்னொருவருடைய இக்கட்டான நிலைமையை நமக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்ளுவது புத்திசாலித்தனம்.
In today's time it is not enough to be right and good, it is necessary to be smart.

Sunday, January 2, 2011

சொல்வனம்

பில்லி காலின்ஸ் என்று ஒரு அமெரிக்க கவிஞர். எனக்கு மிகவும் பிடித்த கவிஞர். இவர் கவிதைகள் மிகவும் எளிமையானவை. மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தை மிக அழ்காக சொல்வதுதானே கவிதையின் சிறப்பு? உதாரணமாய் மறதியைப் பற்றி ஒரு கவிதை. அதில் எப்படி மெது மெதுவாய் ஒவ்வொரு விஷயமாய் மறந்து போகிறது என்று நகைச்சுவையுடன் சொல்லிகொண்டே வருகிறவர் சடாரென்று ஒரு வரியில் மிக அழகான ஒரு சிந்தனையை வைக்கிறார் பாருங்கள்:

No wonder the moon in the window seems to have drifted
out of a love poem that you used to know by heart.


ஜன்னல் வழியே ஆகாயத்தில் கண்ணால் காணும் நிலவு, நாம் பாடம் செய்த ஒரு காதல் கவிதையிலிருந்து விலகி வெளிவந்தது போலத் தோன்றுகிறதாம்.
மறதியில் நமக்கு நிஜத்துக்கும் நினைவுக்கும் இருக்கும் இடைவெளி கூட மங்கிப் போகிறது என்பதை அழகாய் சொல்லும் வரி. காதல் கவிதை மறந்து போய் அந்தக் கவிதையுடன் சேர்ந்து உணர்ந்த நிலவு மட்டும் கண்ணெதிரே. அந்தக் கவிதையில் இருக்கவேண்டிய இது இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற குழப்பம்.
என்னைப் போல இந்த நிலையை அடைந்தவர்களுக்கு இது இன்னும் நன்றாகப் புரியும்.
சொல்வனம் என்றொரு இணையப் பத்திரிகை. நண்பர் ஒருவரும் அவரது நண்பர்களும் சில வருடங்களாய் நடத்தி வருகிறார்கள். நல்ல கட்டுரைகள், கதைகள் மற்றும் பல தரமான பகுதிகள். முடிந்தால் சென்று படித்து வரவும். விருப்பம் இருந்தால் நீஙகளும் எழுதலாம். அப்புறம் இந்த இதழில் பில்லி காலின்ஸின் மூன்று கவிதைகளை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன்.
படித்து உங்கள் எதிர்வினைகளைப் பதிவு செய்யலாமே?


பி. கு: மறந்தே போனேன் பாருங்கள். என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Friday, December 17, 2010

எங்க வீட்டு கல்யாணம்

சில வருடங்களுக்கு முன் டுபுக்கு என்ற வலைப்பதிவாளர் ஒரு கல்யாணத்தில் தான் கேட்ட சில சுவையான சம்பாஷணைகளைப் பதிவு செய்திருந்தார். அதை நான் மிகவும் ரசித்துப் படித்தேன். ஏன் என்றால் இது போன்ற நிகழ்வுகள் நம் கல்யாணங்கள் எல்லாவற்றிலும் பொதுவான ஒன்று - நம் எல்லோர் வீட்டிலும் இது போல ஒரு மாமா , சித்தி, அல்லது அத்திம்பேர் இருப்பார். அவரை யாரானும் சிறிசுகள் கலாய்த்துக் கொண்டிருப்பார்கள். இல்லை விவரமான பெரிசுகள் என்றால் அவர்கள் சிறிசுகளை கலாய்த்துக் கொண்டிருப்பார்கள். கல்யாணத்துக்குக் களை கூட்டுவதே இது போன்ற விஷயங்கள்தான். மற்றபடி காசி யாத்திரை, ஊஞ்சல், பச்சைப்படி என்று அதெல்லாம் புரோஹிதர் இயக்கத்தில் அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும். இவை எல்லாம் வீடியோவில் பிடிக்கப்பட்டு பத்திரப்பட்டுவிடும்; ஆனால் இந்த உபகதைகள் சிலருக்கு மட்டுமே தெரிந்து நாளடைவில் தொலைந்து போய் விடும்.

இந்தக் கல்யாணத்தில் அப்படி நான் கவனித்த சில சுவையான விஷயங்கள்:
Scene1
பிள்ளையின் மாமா மனைவியிடம்: ஏண்டி பாத்ரூம் உள்ளே போயிருக்கேன். கதவை போட்டுண்டு வந்துட்டே? இத்தனை நாழி கதவை தட்டிண்டிருந்தேன்.
மாமி: ஐயையோ சாரின்னா நான் கவனிக்கலை.
மாமா: ஆமாம் நான் இல்லைன்னு நீ என்னிக்காவது கவனிச்சாதானே?
( வடக்கே கல்யாணத்திலே மாப்பிள்ளையோட செருப்பைதான் ஒளிச்சு வெப்பா. இங்கே மாப்பிள்ளைக்கு மாமாவையே ஒளிச்சு வைக்கறா போலிருக்கு!!)

Scene2
ஒரு அத்தை பெண் (ஒ அ பெ): பொண்ணுக்கு என்ன பண்றா? புள்ளை ஆத்துலே ஏதானும் demand உண்டா?
இன்னொருத்தி: ஒண்ணுமே வேண்டாமாம். சேவை நாழி மாத்ரம் கேட்டாளாம். பிள்ளைக்கு சேவை ரொம்ப பிடிக்குமாம்.
ஒ அ பெ : போச்சுடா. சேவை யார் பிழியறது. ஒரு 5 பவுன் கூட வேணா போட்டுடலாம்.

Scene3
தங்கை என்னிடம்: கார் சாவியை எங்கே வெச்சு தொலைச்சே?
நான்: உன் பைலேதான் போட்டிருப்பேன் சரியா பாரு.
தங்கை: காணுமே.
ஒரு சித்தப்பா பெண்: என்ன காணும்?
தங்கை: என் கார் சாவி. இவ எங்கயோ வெச்சுத் தொலைச்சுட்டா.
அடுத்த 10 நிமிடத்தில் நான் போன இடமெல்லாம்:
'சாவி கெடைச்சுதா?'
"எங்கே தொலைச்சே?'
"வேறே என்ன காணும்?'
'நீ கொஞ்சம் நிதானமா இருக்கணும். ஆனாலும் பரபரப்பு.'
நேரம்தான்.
போதாக்குறைக்கு செருப்பைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு 8-10 வயது நண்டு சொல்கிறது:
"பெரியம்மாவுக்கு இதே வேலையா போச்சு. எதையானும் தொலைக்கிறது. அப்புறம் அதை தேடறது."
தேவையா?

Scene4:
பெண்ணின் அம்மா: பச்சப்படி எல்லாம் சுத்தி ஆச்சு. வாத்யார் எங்கே? அவர்தான் எப்படி உள்ளே கூப்டுண்டு போகணும்னு வந்து சொல்லணும்.
தங்கை: அவர் என்கிட்டே சொல்லிட்டு போனார்: "நீங்க ஊஞ்சல் பச்சப்படி முடிச்சு மேடைக்கு பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிண்டு வந்துடுங்கோ. நான் கொஞ்சம் சாப்டுட்டு வரேன். எனக்கு low sugar ஆயிடும்" அப்படீன்னு சொல்லிட்டு போனார்.
(இது எப்படி இருக்கு!இந்த நாள்லே யாரையும் நம்ப முடியலை சார்!!)

Scene5:
வீட்டு பெரிசு ஒண்ணு: ஏண்டி உஷா, தாலி கட்டினதும் ஜூஸ் ஒண்ணு கொடுப்பாளே. ஒண்ணும் காணுமே.
நான்: அதோ பாருங்கோ அந்த மூலைலே நின்னுண்டு ஒருத்தன் குடுத்திண்டிருக்கான். வாங்கோ
அங்கே போனால் ஜூஸ் ஓவர்.
பெரிசு: நாக்கெல்லாம் வறண்டு போச்சு கொஞ்சம் தாராளமா கலக்கப்படாதோ. arrangements போறாது.
நான்: ஷூ வாய மூடுங்கோ, நாம்தான் பொண் ஆத்துக்காரா. யாரை போய் குத்தம் சொல்றது?
இந்த பெருசுங்க தொல்லை ஆனாலும் தாங்கலைபா.

Scene6:
காலையிலிருந்து பாண்டில் அலைந்து கொண்டிருந்த சித்தி பையனிடம் நான்: ஏன் வேஷ்டி எடுத்துண்டு வரலியா?
சித்தி பிள்ளை: எனக்கு இவா வேஷ்டி வெச்சு குடுப்பானு நான் எடுத்துண்டு வரலை. இவா எனக்கு வேஷ்டியே குடுக்கலை.
போச்சுடா. வாயை மூடிண்டு இருந்திருக்கணும்.


நாங்கள் நான்கு பேர் உறவினர்களுக்கு பக்ஷணம் கொடுக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு தூரத்து மாமி என்னிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். நானும் பக்ஷணம் கொடுத்து அனுப்பினேன். கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால் என் மன்னியிடம் பக்ஷணம் வாங்கிக் கொண்டிருக்கிறாள். பின்னால் கேட்டால் எங்கள் நாலு பேரிடமும் ஒரொரு பாக்கெட் வங்கிக் கொண்டு போயிருக்கிறாள். சம்பந்திகளை விட அதிகமாய் சீர் பக்ஷணம் அவள் வீட்டிற்குதான் போயிருக்கும் போலிருக்கு. அதான் நல்ல பெரிய பையாக கொண்டு வந்திருந்தாள். இனிமேல் வாசலில் இதற்கெல்லாம் செக்யூரிட்டி செக் போடவேண்டும் போல் இருக்கிறது.

நான் கலந்துகொண்ட கல்யாணத்தில் சில விஷயங்கள் ஆச்சரியம் அளித்தன. பெண்ணுக்கு ஒரு கிலோ அளவு வெள்ளி சாமான் வாங்கி இருந்தாலும் கல்யாண கலாட்டாவில் தொலைந்து போய்விடும் என்ற பயத்தில் எதையும் லாக்கெரில் இருந்து எடுக்கவே இல்லையாம். விரதம் எல்லாம் சத்திரத்தில் கொடுத்த பித்தளை பாத்திரங்களிலேயே செய்தார்கள். சில நேரங்களில் பேப்பர் கப்பில் கூட எண்ணை, குங்குமம் சந்தனம் எல்லாம் வைத்திருந்தார்கள். எனக்குக் கல்யாணத்தில் கொடுக்கப்பட்ட வெள்ளிபாதிரங்கள் உபயோகப்பட்ட ஒரே நாள் என் கல்யாணம் அன்றுதான். இப்போதெல்லாம் அதற்கும் உபயோகப்படவில்லை.

விரதத்திலிருந்து கட்டுசாதம் வரை நான் சாப்பிட்ட விருந்துகளின் எண்ணிக்கை 7. நடுவே நலங்கின்போது வேறே ஏதோ சமோசா, ஸ்வீட் என்று கொடுத்தார்கள். நல்லவேளை அது ஒன்று மட்டும் நான் தொடவில்லை. இப்போது 4 நாட்களாய் 'எத்தை தின்றால் பித்தம் தீரும்' என்ற நிலைமையில் இருக்கிறேன்.

சாப்பாட்டு ஹாலில் ஒரு uncle ரொம்ப கஷ்டப்படுத்தி விட்டார் - "எனக்காக ஒரே ஒரு இட்லி. இன்னும் ஒரு தோசை. முறுகலாய்' எனறு. அவரை வேறே நாலைந்து பேர் புகழ்ந்து தள்ளி விட்டார்கள் - 'இப்போதெல்லாம் பாருங்கோ. கல்யாண வீட்டில் பந்தி விசாரிப்பே இருக்கறதில்லை. வந்தியா, சாப்டியா எனறு ஆகி விட்டது. உங்களை மாதிரி யார் இப்படி கேட்கிறார்கள்' எனறு. அவ்ளவுதான் மனுஷர் அடுத்த பந்தியில் இன்னும் ஒரு படி மேலே போய் விசாரிக்க ஆரம்பித்து விட்டார். அவரைக் கொண்டு சமையலறை மூலையில் cacophonix மாதிரி கட்டிப் போட்டு விடலாமா என்ற ஒரு யோசனை கூட எனக்கு வந்தது. மனுஷன் சோறு போட்டே கொன்று விடுவார். அடுத்த கல்யாணத்தில் அவரை பார்த்தால் பட்டினி கிடப்பது உத்தமம்.

பெண் வீட்டில் பூஜை அறையில் ஒரு அடுக்கில் இரண்டு தேங்காய்களை ஊற வைத்திருந்தார்கள். என்ன விஷயம் எனறு விசாரித்தால் அப்படி போட்டு வைத்தால் மழை வராது என்றார்கள். கல்யாணத்துக்கு 5 நாள் முன் வரையில் புயலும் பெருமழையும் அடித்ததில் அரண்டு போய் இது போல் செய்திருக்கிறார்கள்.
இப்போது தெரிகிறது சென்னையில் பாதி சமயம் ஏன் மழை வருவதில்லை எனறு.

மற்றபடி எல்லாம் சௌக்கியம். உங்கள் சௌக்யத்துக்கு கமெண்ட் போடவும்.

Sunday, November 21, 2010

தாங்க முடியலைங்க..

உங்கள் வீட்டுப் பெண்ணுக்கோ பிள்ளைக்கோ திருமணம் என்று வைத்துக்கொள்ளுங்கள். யாரையாவது அழைப்பதற்கு நேரில் போக வேண்டும் என்றால் எந்த நேரத்தில் போவீர்கள்? உங்களுக்கு சௌகர்யமான நேரத்திலா அல்லது அவர்களுக்கு சௌகர்யமான நேரத்திலா?
ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது - பத்து மணி இதற்கு உகந்த வேளையா?
எங்கள் வீட்டில் எல்லாம் ஞாயிறு காலையில் நான்கு தினசரிகள் வரும். ஒவ்வொன்றாய் கொஞ்சம் மேய்ந்து விட்டு , அடிகாஸ் ஹோடேலோ அல்லது s.l.v. யிலிருந்தோ இட்லி அ தோசை வரவழைத்து மெதுவாக சாப்பிட்டு விட்டு, இன்டர்நெட்டில் மெயில் எல்லாம் பார்த்து, உறவினர்/ நண்பர்கள் யாரானும் சாட்டில் இருந்தால் கொஞ்சம் வம்பளந்து விட்டு பத்து மணி வாக்கில்தான் குளியலைப் பற்றிய யோசனையே வரும். சரி என்று தலை முழுக்க எண்ணை தடவி பாக்கி இருப்பதை முகத்தில் தடவி குளிக்க போகலாம் என்று எழுந்தால் வாசலில் பெல். எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியும் ஞாயிறு அன்று பனிரெண்டு மணிக்கு மேல்தான் வருவாள். சரி வேறே வழி இல்லை என்று எண்ணையில் தோய்த்தெடுத்த பஜ்ஜி போல ஹவுஸ் கோட்டுடன் வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்தால் இரண்டு மூன்று பேர். யாரென்று கூட தெரியவில்லை. ஏதானும் தேர்தல் வருகிறதோ , ஓட்டு கேட்க வந்திருக்கிறார்களோ அல்லது சென்செஸ் பேர்வழிகளா என்று பார்த்தால் 'பிள்ளை கல்யாணம்' என்று ஆரம்பித்தார்கள். அந்த காலத்து நண்பர்கள், பார்த்து பதினைந்து வருடம் ஆகி இருக்கும். அடையாளம் கண்டு பிடிக்கவே முழுதாய் ஒரு நிமிடம் ஆயிற்று. இத்தனை நாள் கழித்து பார்க்கிறோம், நானோ இந்த கோலத்தில். மானமே போச்சு. சரி உட்கார வைத்து விட்டு கொஞ்சம் டீசென்ட் ஆக உடை உடுத்தி வரலாம் என்று பார்த்தால் 'இல்லை உட்கார நேரமில்லை. நிறைய வீடு போக வேண்டும்' என்கிறார்கள். அங்கெல்லாம் போய் விட்டு இங்கே வரக்கூடாதோ! குளிக்கப் போன கணவரோ நிதானமாய் நிம்மதியாய் ஷவரில் வெந்நீரை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். Ignoring the elephant in the room என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது போல ஒரு conversation. எண்ணை சட்டி போல நான் இருந்த கோலம் அவர்களுக்கும் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். எனக்கோ 'பூமி பிளக்காதா உள்ளே போய் விட மாட்டோமா' என்ற நிலை. ஆனால் மேலே என்னமோ சாதாரணமாய் ' பெண் என்ன செய்கிறாள்? பிள்ளை எங்கே இருக்கிறான்? ' என்பது போல ஒரு சம்பாஷணை.
ஒரு வழியாய் அரை மணி நேரத்தில் போய் சேர்ந்தார்கள்.

முன்பெல்லாம் குறிப்பிட்ட நாட்களில் அல்லது நேரங்களில் சில காரியங்களை செய்யலாம் என்ற நியதிகள் , கட்டுப்பாடுகள் உண்டு. சில சமயம் அவை புரியாமல் இருக்கும். செவ்வாய்கிழமை செய்தால் என்ன, அமாவாசை அன்று போனால் என்ன என்று தோன்றும். நானே பல சமயம் இவற்றை எல்லாம் அபத்தம் என்று ஒதுக்கி இருக்கிறேன். நேற்றுதான் புரிந்தது எதற்காக இவை எல்லாம் ஆரம்பித்திருக்கலாம் என்று. இது போல் சில நியதிகள் இருந்தால் நமக்கும் நிச்சயமாய்த் தெரியும் இன்னின்ன நாட்களில் அ நேரங்களில் யாரும் வர மாட்டார்கள் என்று. அப்போது நாம் பாட்டுக்கு நிதானமாய் நம் அலுவல்களை முடித்துக் கொள்ளலாம். இன்றைய தேதியில் எல்லோரிடமும் தொலைபேசி இருக்கிறது. வரும் முன்பாக ஒரு கால் அடிக்க முடியாதா? குறைந்த பக்ஷமாய் நமக்கு முன் சென்ற வீட்டிலிருந்து கிளம்பும் போதாவது கூப்பிட்டு சொல்லலாமே. நாலைந்து பேர் இருக்கும் வீடு என்றால் பிரச்சினை இல்லை. யாரானும் ஒருவர் இருப்பார்கள். அவர்களை பேசிக்கொண்டிருக்கச் சொல்லி விட்டு நாம் தயாராகி வரலாம். எங்கள் வீடு போன்ற இடங்களில்தான் பிரச்சினை.
நான் ஒன்றும் இந்த social etiquette பற்றி மிகவும் கவலைப் படுபவள் இல்லை என்றாலும் விருந்தினர் முன்பு இருக்கவேண்டிய கோலத்துக்கு ஒரு எல்லை உண்டல்லவா. நமக்கே கூச்சமாய் இருக்கும் நிலையில் எப்படி ? சொல்வார்களே திரௌபதி சபைக்கு வந்த நிலையை பற்றி - கிட்டத்தட்ட அப்படிதான் எனக்கும். கிருஷ்ணன் வந்து ஒரு கண்ணியமான ஆடையை போர்த்த மாட்டாரா என்பது போல.

ஏற்கனவே இத்தனை எரிச்சலில் இருந்தேனா. இது போதாதென்று அவர்கள் பத்திரிக்கையைக் கொடுத்து கூடவே ஒரு சின்ன டப்பாவையும் கொடுத்தார்கள். என்னவென்று பிரித்துப் பார்த்தால் ஒரு சின்ன குங்கும கிண்ணம். உள்ளே ஒரு பொடி குங்குமம் கூட இல்லை. இது என்ன கூத்து? கல்யாணத்தில் மணமக்களுக்கு நாம்தான் ஆசீர்வாதமாய் பணமோ பொருளோ கொடுப்போம். அழைக்கப்பட்டவர்களுக்கு என்ன பரிசுப்பொருள்? வருவதற்கு ஊக்கப் பரிசா? இதையே முஹூர்த்தம் ஆன பின் தாம்பூலப் பையில் கொடுத்திருந்தால் கூட இத்தனை விசித்திரமாக இருந்திருக்காது. அதென்ன அழைப்புடன் ஒரு gift? முன்பெல்லாம் கல்யாணத்துக்கு அழைத்து வண்டி சத்தம் என்று ரயில் டிக்கெட்டுக்கான பணத்தையும் கொடுப்பார்களாம். அது போலவா இது?

என்னமோ போங்கள் மொத்தத்தில் ஒண்ணும் புரியவில்லை. இனிமேல் வாசலில் விசிடிங் hours ஒரு போர்டு போட்டு விட்டு மற்ற நேரத்தில் வருபவர்களுக்கு போஸ்ட் பாக்ஸ் தவிர ஒரு பெட்டியும் வைக்கலாம் என்று இருக்கிறேன் - இது போல பரிசுப் பொருட்களைப் போட்டு விட்டு செல்வதற்கு. அப்புறம் இது போல் பத்திரிக்கையோட gift கொடுத்த கல்யாணத்துக்கு போக முடியாவிட்டால் அப்படியே அவர்கள் கிளம்பும்போது அவர்கள் கையிலேயே கொஞ்சம் அட்சதையோடு gift கொடுத்தால் கோபித்துக் கொள்வார்களா என்ன? ச்சே ச்சே அதெல்லாம் கோவிக்க மாட்டாங்க. அவங்க ஆரம்பிச்சு வெச்சதைதானே நாமளும் பண்ணபோறோம், என்ன சொல்றீங்க... அவங்களுக்கு சௌகர்யமாய் வழக்கங்களை மாற்றிக் கொண்டிருப்பதைப்போல நாமும் கொஞ்சம் மாற்றினால் புரிந்து கொள்ள மாட்டார்களா என்ன?

ரொம்ப மண்டை காஞ்சு இருந்தேன். நேத்து தலைக்குப் போட்ட எண்ணை கூட பிரயோஜனப் படலை. அதான் உங்களிடம் சொல்லி கொஞ்சம் ஆறுதல் தேடலாமேன்னு. மனசுக்கு ஆறுதலாய் ஏதானும் சொல்லிட்டுப் போங்க.