Monday, October 22, 2012

நானும் கச்சேரிக்குப் போகிறேன்

எங்கள் ஊர் பக்கப்   பேச்சில்  ஒரு வசனம் உபயோகப்படுத்துவார்கள்: 'எங்கள்  அகத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் " என்று சொல்வார்கள்.'   கச்சேரி என்பது இந்தி கச்சேரி அதாவது கோர்ட்டு. பந்தாவாக வக்கீல் எல்லாம் கச்சேரிக்குப் போய் வேலை செய்து வருகையில் எடுபிடியாய் அவர்கள்  கூடப் போய் வருவார்களே அது போல் பெயருக்கு ஒரு உத்தியோகம் செய்பவர்களைப் பற்றிக் கிண்டலான பிரயோகம்  இது.  தஞ்சாவூர்  கிண்டல் பேச்சுதான்  பிரசித்தம் ஆச்சே.

இதைப்பற்றி இப்போ என்ன என்கிறிர்களா? அங்கேதான் விஷயமே இருக்கு. இன்றைக்கு  நானும் கச்சேரிக்குப் போகிறேன் என்று ஒரு சமத்தான வேலை செய்தேன். இது வேறே விதமான் கச்சேரி - பாட்டுக்கச்சேரி. பயப்பட வேண்டாம், கேட்கத்தான்.
இதற்கு முன்பு நான் கச்சேரிக்குப் போகும்  அழகை உங்களுக்கு விவரமாய் சொல்லவேண்டும்

இங்கே பெங்களூரில் காயன சமாஜத்தில் கடந்த வருடம் மெம்பர் ஆனேன். அதிலிருந்து முடிந்த வரையில் கச்சேரிகளைத்  தவற  விடுவதில்லை. அதுதவிர வேறு சபாக்களின் கச்சேரிகளும்  இந்த ஆடிட்டோர்யத்தில் நடக்கும். பெரும்பாலும் இவற்றுக்கு டிக்கெட் எதுவும் கிடையாது. கொஞ்சம் சீக்கிரமே போனால் சீட் கிடைக்கும். இல்லை என்றாலும் நீள விராந்தாவில் சேர்கள் போட்டுக் கொடுப்பார்கள். பாடகரைப் பார்க்க முடியாது. ஆனால் சுகமாக கேட்டுவிட்டு வரலாம். அப்பப்போ பின்னணிக்கு பெங்களூர் பஸ் ஹாரனும் சேர்ந்து ஒரு ப்யூஷன் எபெக்ட் கிடைக்கும்.

இதெல்லாம் எளிதாய் தோன்றுகிறதா? ஒரே ஒரு கஷ்டம் என்னவென்றால் சபா  இருக்கும் இடம்.  இந்த சபா 1905ல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது மொத்த பெங்களூரையும் நடையிலேயே 2 மணி நேரத்தில் சுற்றிவந்து விடலாம். நல்ல ஷஹரான  இடத்தில் சபாவை ஆரம்பித்திருக்கின்றனர். இன்றைய பெங்களூரில்இந்த இடத்துக்கு காரில் போனால்  ஒரு மைல்  துரத்தில் நிறுத்திவிட்டு நடக்கவேண்டும். அத்தனை போக்குவரத்துள்ள இடம் இது. பிரதானமான மார்க்கெட்டுக்கு போகும் சாலை இது.  சபா வாசலில் இருக்கும் பார்க்கிங்கில்  சபா  ப்ரெஸி டென்ட், செக்ரட்டரி, இதர கமிட்டி உறுப்பினர்களுடைய  வாகனங்களை  நிறுத்தத்தான் இடம் உண்டு, எங்கள் வீ டு இருக்கும்இடத்திலிருந்து சபா 8- 9` கி மீதான்  என்பதால் முதல் கச்சேரிக்கு ஒரு ஆட்டோவில் போகத் தீர்மானித்தேன்.   அங்கங்கே மெட்ரோ ரெயிலுக்காக கட்டுமான வேலை நடந்துகொண்டிருப்பதில் அங்கும் இங்கும் சுற்றி ( எனக்கு தலை சுற்றி) அரை மணி நேரமாச்சு போவதற்கு . மீட்டர்  110 ரூபாய் காண்பித்தது. இந்த அநீதிக்குத்  துணை போகக் கூடாது என்று அடுத்த கச்சேரியிலிருந்து பஸ் ரூட்களை கண்டு பிடித்து நேரத்தே கிளம்பி பஸ்சில் போக ஆரம்பித்தேன்.

6 மணிக்கே கச்சேரிகள்  ஆரம்பிக்கும். 4 மணிக்குள் இரவுக்கான  சமையல் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ( திரும்பி வந்த உடனேயே  பசிக்குமே. நடுவில் வீ ட்டில் பிறர் சாப்பிட வேண்டுமே) நாய்களுக்கும்  உணவு கொடுத்துவிட்டு, 4. 30 க்குள் தயாராகி வீட்டை விட்டு வெளியேறுவேன். கையில் ஒரு பை. அதில் பர்ஸ், அப்புறம் சில்லரை பர்ஸ் தனியே ( இந்த ஊ ரில் பஸ் கண்டக்டர்களிடம் சில்லறையே இருக்காது ), ஒரு தண்ணி பாட்டில், கர்சீ ப், ஒரு சின்ன விசிறி , அவசரப்பசிக்கு  4 பிஸ்கட், கண்ணாடி, ஒரு புத்தகம், ஒரு குடை, செல்போன் இத்தனையும். வீ ட்டிலிருந்து பஸ் நிறுத்தம் 10 நிமிட நடை, அந்த முனையிலும் சபாவுக்கு 6-8 நிமிடம் நடக்கணும். இதனால் செருப்பெல்லாம் சரிப்படாது என்று காலில் வாக்கிங் ஷூ. நல்ல பிரிண்டட் சில்க் புடவை ( என்ன இருந்தாலும் கச்சேரிக்குப் போவதற்கு ஒரு பத்ததி உண்டில்லையா?) , காலில்  ஷூ, கையில் மேற்சொன்ன அத்தனையும் அடங்கிய ஒரு பெரிய பை இதுதான்  நான் கச்சேரிக்குப் போகும் கோலம்.

இதே கோலத்தில்தான் இன்றும் கிளம்பினேன். போன வாரம் சபாவுக்குப் போன போது கிடைத்த ஒரு கச்சேரி நோடீஸில் 22ம் தேதியிலிருந்து 25 ம்  தேதி வரையிலான கச்சேரிகள் பற்றிய விபரமும், எல்லோருக்கும் அனுமதி உண்டு என்றும் பார்த்தேன். முதல்  கச்சேரி 22ம்  தேதி டி . எம் கிருஷ்ணா . இன்றைக்கு.  நாளைக்கு சரஸ்வதி பூஜை. வீட்டிலும் நிறைய வேலைகள் இருந்தன. ஆனாலும் விட மனசு வரவில்லை. சரி ரெண்டு மணி நேரமாவது கேட்டுவிட்டு வந்துவிடலாம் என்று மேற்படி ஆயத்தங்கள் எல்லாம் செய்துகொண்டு சரியாய் 6 மணிக்கு சபா வாசலில் போய் நின்றேன். வாசலில் கார்கள் அவ்வளவு இல்லை. தசரா இல்லையா. அதான் கூட்டம்  கம்மி என்று  கொஞ்சம் சந்தோஷத்துடன் உள்ளே போனேன். விறாந்தாவில் சுவாமி சிலைகளுக்கு முன் விளக்கெல்லாம் ஏற்றி பூ போடு வைத்திருந்தார்கள். அப்புறம் நீளவாக்கில் மேஜைகள் போட்டு  கமிட்டி உறுப்பினர்கள் எல்லாம் ஏதோ சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆயுத  பூஜை போட்டுவிட்டு நல்ல டிபன் போலிருந்தது. உள்ளே கால் வைத்தவள்  'ஒ சாரி' என்று வெளியே வந்தேன்.

பின்னாலே சபா  ஊழியர் ஒருத்தர் 'ஏனு மேடம்' என்று கேட்டுக்கொண்டு வந்தார்.  'கிருஷ்ணா  கச்சேரி...' என்று ஆரம்பித்தேன். 'அது அடுத்த மாசம்னா .. . 28 அக்டோபர் லேர்ந்து நம்ம சபா வருஷாந்திர இசை மாநாடு. அப்புறம் அடுத்த மாசம் அந்த ப்ரோக்ராம். ' என்றார்.

அசடு வழிந்தேன். தலையிலும் அடித்துக்கொண்டேன். சரி வந்ததற்கு பாத்ரூம் போய் விட்டுப் போகலாம் என்று பின்பக்கம் போக கால் வைத்தேன். 'அந்தப்பக்கமும் பூட்டி இருக்கு' என்றார் ஒரு கமிட்டி மெம்பர். என்னைப் பார்த்தால் அவருக்குக் கொஞ்சம் சந்தேகமாய் இருந்தது போல. அவரைச் சொல்லிக் குற்றமில்லை.

இப்படியாகத்தானே நானும் இன்றைக்குக் கச்சேரிக்குப் போய் வந்தது.

ஆனால் அங்கே இருக்கும்  அழகான 4 கோவில்களில் நுழைந்து நிம்மதியாய் தரிசனம் செய்துவிட்டு வந்தேன். இன்றைக்கு ஒவ்வொன்றிலும் பிரமாதமான் அலங்காரம். 33 வருடங்களாய் பெங்களூரில் இருந்தும் பார்க்காத கோவில்கள்.
அசட்டுத்தனமும இப்படி நல்லபடியாய் முடிந்தது.

1 comment:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : கல்யாணம் ஆகாதவர்களுக்கான பதிவு!

    ReplyDelete