Monday, April 25, 2011

பாம்புக்கதைகள்

பாம்பு என்றால் எனக்கு ரொம்ப பயம். இதில் என்ன புதுமை - எல்லோருக்கும்தான் பயம் என்கிறீர்களா? பலருக்கும் பாம்பைப் பார்த்தால்தானே பயம்? எனக்கு பாம்பு என்று எழுதிக் காட்டினாலே பயம். ஐந்து வயது இருக்கும் - அமாவாசை அன்று அம்மா சுவாமிக்கு முன் பாம்புக்கோலம் போட்டு தேங்காய் உடைத்து வைத்திருந்தாள். அந்தத் தேங்காயை தின்னப் பார்த்தபோது ‘ம்ஹ்ம். தேங்காயை தின்னக்கூடாது. பாம்பு கடித்துவிடும்’ என்று சொன்ன நினைவு. நைவேத்யத்துக்கு முன் தின்னக் கூடாது என்றாளா , என்ன சொன்னாள் என்பது சரியாய் நினைவில்லை. மனதில் அந்த வயதில் பதிந்தது அமாவாசை அன்று தேங்காய் தின்றால் பாம்பு கடித்துவிடும் என்ற தகவல். பின்னொரு அமாவாசை அன்று அதை மறந்து போய் தேங்காயைத் தின்று பல நாட்களுக்கு பயந்து நடுங்கியதும் நினைவிருக்கிறது. அந்த சமயத்தில்தான் இந்த பயமும் ஆரம்பித்ததோ என்னவோ. சமீப காலம் வரை பாம்பு என்று சொல்லக் கூட மாட்டேன் - ‘அது’ என்று தான் சொல்வேன்.
என் பயத்துக்குத் தகுந்தாற்போல சரியாய் ஒரு இடத்தில் எங்களது க்வார்டெர்ஸ் அமைந்தது. முதலில் வனாந்திரமாய் இருந்த இடத்தில் அரசாங்கம் தாராளமாய் 100 ஏக்கர் நிலம் ஒதுக்க அங்கேயே அலுவலகம் க்வார்டெர்ஸ் எல்லாம் கட்டிவிட்டார்கள். அப்புறம் என்ன, அவ்வப்போது ஊர்வன ஜந்துக்கள் எல்லாம் சுதந்திரமாய் தோட்டத்தில் ஊர, நாங்கள் நடுங்கிக்கொண்டே நடமாடுவோம். இந்தச் செடி வளர்த்தால் வராது அந்தக் கொடி போட்டால் வராது என்றார்கள். எல்லாம் செய்தும் சில நாட்கள் நன்றாய் உடம்பை நீட்டி முன் வெராந்தாவில் மத்தியான வெய்யிலில் ஒன்று பெரிதாய் படுத்திருக்கும். எனக்குக் குலை நடுங்கும்.
சுப்பிரமணிய ஸ்வாமிக்கு (முருகனுங்க, அரசியல்வாதி இல்லை) ஒவ்வொரு கிருத்திகை அன்றும் தேங்காய் உடைத்தால் கண்ணிலேயே படாது என்று என் சித்தி சொல்ல அதை செய்தேன். செய்த வரைக்கும் கண்ணில் படவில்லை என்பது நிஜம்தான்.
அப்புறம் சொந்த வீட்டுக்கு மாறியபின் இதைச் செய்ய விட்டுப்போய் நின்றே போச்சு. ஒருநாள் பார்த்தால் கிட்டத்தட்ட பதினைந்து அடிக்கு ஒன்று தோட்டத்தில். ஒரு அரைமணி படுத்துவிட்டு அப்புறம் நிதானமாய் பலாமரத்தில் ஏறிக் காலியாய் இருக்கும் பக்கத்து மனையில் போய் சுவாதீனமாய் படுத்துக்கொண்டது. இன்னொரு நாள் கம்ப்யூடெரிலிருந்து தலையை தூக்கி ஏதொ யோசனையுடன் ஜன்னலைப்பார்த்தால் அந்தப்பக்கம் மண்தொட்டியில் வைத்திருந்த செடியின் மேலெ ஒன்று தலையைத் தூக்கி நாக்கை நீட்டுகிறது. அரண்டு போய் ஜன்னலை அவசரமாய் சாத்தி கர்ட்டனை இழுத்துவிட்டு உள்ளெ போய் விட்டேன்.

இந்த அழகில் ஒரு நண்பர் ஒரு கதையை அனுப்பி அதைத் தமிழில் மொழி பெயர்க்கச்சொன்னார். ’ஓ செய்கிறேனே’ என்று ஆர்வத்துடன் கதையைப் படித்தால் கதை முழுக்கப் பாம்புகள். ஆனால் அருமையான கதை. ஒவ்வொரு வர்ணனையும், சம்பவமும் சித்திரம் போல வார்த்தைகளால் வரைந்து அருமையான நடை.
கதை இங்கே - படித்துப் பாருங்கள்:
http://www.vondanmcintyre.com/McIntyre-MistGrassSand.

என் மொழிபெயர்ப்பு (முதல் பகுதி) இங்கே

அதோடு எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தை வைத்து ஒரு சிறுகதையும் இங்கே. இந்தப் பிள்ளையின் தந்தையும் தாயும் நான் வேலை செய்த வங்கியில் கணக்கு வைத்திருந்தார்கள். இந்த வாண்டுப்பையன் - நாலு வயது இருக்கும் . வங்கிக்கும் வருவான். ஒருநாள் அவனுடைய தந்தை இந்த சம்பவத்தை சொல்ல அன்றிலிருந்து அந்தப் பையனைப் பார்த்தால் எனக்குக் கொஞ்சம் நடுக்கம்தான். அவன் பையில் என்னத்தைப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறானோ என்று. என்ன விஷயம் என்கிறீர்களா? படித்துவிட்டு சொல்லுங்கள்.

No comments:

Post a Comment