Sunday, January 2, 2011

சொல்வனம்

பில்லி காலின்ஸ் என்று ஒரு அமெரிக்க கவிஞர். எனக்கு மிகவும் பிடித்த கவிஞர். இவர் கவிதைகள் மிகவும் எளிமையானவை. மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தை மிக அழ்காக சொல்வதுதானே கவிதையின் சிறப்பு? உதாரணமாய் மறதியைப் பற்றி ஒரு கவிதை. அதில் எப்படி மெது மெதுவாய் ஒவ்வொரு விஷயமாய் மறந்து போகிறது என்று நகைச்சுவையுடன் சொல்லிகொண்டே வருகிறவர் சடாரென்று ஒரு வரியில் மிக அழகான ஒரு சிந்தனையை வைக்கிறார் பாருங்கள்:

No wonder the moon in the window seems to have drifted
out of a love poem that you used to know by heart.


ஜன்னல் வழியே ஆகாயத்தில் கண்ணால் காணும் நிலவு, நாம் பாடம் செய்த ஒரு காதல் கவிதையிலிருந்து விலகி வெளிவந்தது போலத் தோன்றுகிறதாம்.
மறதியில் நமக்கு நிஜத்துக்கும் நினைவுக்கும் இருக்கும் இடைவெளி கூட மங்கிப் போகிறது என்பதை அழகாய் சொல்லும் வரி. காதல் கவிதை மறந்து போய் அந்தக் கவிதையுடன் சேர்ந்து உணர்ந்த நிலவு மட்டும் கண்ணெதிரே. அந்தக் கவிதையில் இருக்கவேண்டிய இது இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற குழப்பம்.
என்னைப் போல இந்த நிலையை அடைந்தவர்களுக்கு இது இன்னும் நன்றாகப் புரியும்.
சொல்வனம் என்றொரு இணையப் பத்திரிகை. நண்பர் ஒருவரும் அவரது நண்பர்களும் சில வருடங்களாய் நடத்தி வருகிறார்கள். நல்ல கட்டுரைகள், கதைகள் மற்றும் பல தரமான பகுதிகள். முடிந்தால் சென்று படித்து வரவும். விருப்பம் இருந்தால் நீஙகளும் எழுதலாம். அப்புறம் இந்த இதழில் பில்லி காலின்ஸின் மூன்று கவிதைகளை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன்.
படித்து உங்கள் எதிர்வினைகளைப் பதிவு செய்யலாமே?


பி. கு: மறந்தே போனேன் பாருங்கள். என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment