Showing posts with label பக்தியா பைத்தியமா. Show all posts
Showing posts with label பக்தியா பைத்தியமா. Show all posts

Thursday, June 17, 2010

பக்தி பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

எங்க வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் சொந்தக்காரர் ஒரு சாமியார் பிரபலத்தின் பரம பக்தர். இந்த சாமியார் அண்மையில் பல வீடியோ படங்களில் கதாநாயகர். ஜெயிலிலிருந்து சில நாட்கள் முன்புதான் வெளியே வந்தார். இவருடைய லீலைகள் எல்லாம் அம்பலத்துக்கு வரும் முன்பு இந்த பக்தர் அவ்வபோது இவரது புத்தகங்களை எனக்குக் கொடுத்துப் படிக்க சொல்வார். ஒரு நாள் இவர் வீட்டுக்கு இந்த சாமியாரின் செருப்புகள் வந்தன. அதை வந்து பார்த்து வணங்கி ஆசி பெறும்படி அழைப்பும் விடுத்தார். சாமியாருடைய செருப்புக்கே இந்த மதிப்பு என்றால் சாமியாருக்கு எவ்வளவு இருக்கும் பார்த்துக் கொள்ளுங்களேன்.

எனக்கோ காவி கலரை பார்த்தாலே கொஞ்சம் அல்லர்ஜி. எனக்கும் என்னுடைய கடவுளுக்கும் இருக்கும் பந்தத்தில் மூன்றாம் நபருக்கு வேலை இல்லை என்பது எனது கொள்கை. இந்த ஸ்லோகம் பஜனை இதை எல்லாம் கூட நான் வெகுவாக கையாள்வதில்லை. எல்லாம் நேர் சம்பாஷணைதான். சில சமயம் ஆங்கிலம் சில சமயம் தமிழ் பல சமயம் ரெண்டும் கலந்த ஒரு கூட்டு. எதானும் நல்லது நடக்கும்போது தேங்க்ஸ் சொல்கிறேனோ இல்லையோ எதானும் தப்பா போச்சு என்றால் அன்னிக்கு சுவாமிக்கு அர்ச்சனைதான். And என்னோட கடவுளும் ok with it னுதான் நெனைக்கறேன். இது வரைக்கும் என் கண்ணை எல்லாம் ஒண்ணும் குத்திவிட வில்லையே.
So இந்த பக்கத்துக்கு வீடு மனுஷனோட தொல்லை தாங்காமல் அவரை பார்த்தால் ஓடும் அளவுக்கு ஆயிடுத்து.

நான் காலேஜ் படிக்கும்போது இந்த மாதிரிதான் ஒரு கும்பல் உண்டு. இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று தெரியாது. லஞ்ச் பிரேக்கின் போது யாராவது தனியே உட்கார்ந்திருந்தால் போதும் அவர்களை 'டபக்' என்று பிடித்து விடுவார்கள். அப்புறம்' உங்கள் இந்து கடவுள்கள் எல்லாம் பொய். ஏசுதான் உண்மையான வழி' அப்படி இப்படி என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். நானோ முழுக்க முழுக்க ராமகிருஷ்ண மடம் நிர்வகிக்கும் பள்ளியில் படித்தவள். வளர்ந்ததும் இந்துமத சூழலில். ஏசுவும் சிவன் விஷ்ணு இவர்களைப்போல் இன்னொரு கடவுள் என்ற வரைக்கும்தான் தெரியும். முதல்நாள் இந்த மாதிரி ஒரு பெண் என்னிடம் பேச ஆரம்பித்ததும் எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. 'ஓஹோ அப்படியா? என்று பொதுவாக சொல்லி வைத்தேன். அதோடு அவள் போய் விடுவாள் என்று நினைத்தேன். அவளானால் 'நீ இந்த மாதிரி பொய் கடவுளை எல்லாம் நம்பினால் நரகத்துக்கு போவாய். அதனால் உடனே ஏசுவின் வழிக்கு மாறு' என்றதும் எனக்கு கிலி பிடித்து போயிற்று. நரகம் என்பது பற்றி பயங்கரமான விஷயங்கள் கேள்விப் பட்டிருக்கிறேன். அங்கே ஒரு பெரிய கொப்பரையில் கொதிக்கும் எண்ணையில் நம்மைப் போட்டு வறுப்பார்கள் ;இது போல் பல சித்திரவதைகளுக்கு நம்மை உட்படுத்துவார்கள் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன். அங்கே போனால் கஷ்டமாச்சே என்று யோசனை ஆயிற்று. வீட்டில் வந்து அம்மா, அண்ணா இவர்களிடம் மெதுவாக இதைப் பற்றி சொன்னேன். வேண்டுமானால் சுவாமி அறையில் ஒரு ஏசு படமும் வைத்து விடலாமா , எதற்கு வீண் வம்பு என்று சொன்னேன். அவர்களானால் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்புறம்தான் மதமாற்றம் செய்வதுதான் இது போன்ற கும்பலின் வேலை. அதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள் என்று விளக்கினார்கள். அடுத்த முறை அந்த பெண் என்னிடம் பேச வந்தபோது "எனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் நரகத்துக்குதான் போகிறார்களாம். அதனால் நானும் அங்கேயே போகலாம் என்றிருக்கிறேன்' என்று சொல்லி அனுப்பி விட்டேன். இந்த மாதிரி மற்றவர்களை நரகத்துக்குப் போகாமல் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு அலைபவர்கள் அநேகம் பேர். நிஜமாகவே சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வதற்கென்று ஒரு வாகனம் இவர்களிடம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர்கள் எல்லாம் நம்மை முதலில் ஏறிக்கொள்ள விடுவார்களா என்ன? எல்லோரையும் பின்னாடி தள்ளிவிட்டு தாங்கள் முதலில் ஏறிக்கொள்வார்கள்.

முதலில் சொன்னேனே என் பக்கத்துக்கு வீட்டுகாரர் அவரைப் பார்த்தாலே ஓடி ஒளிந்து கொண்டிருந்தேனா? அப்புறம் இந்த மாதிரி அந்த சாமியாரைப் பற்றிய நிஜங்கள் எல்லாம் வெளியே வந்ததும் ஒரு நாள் நானே வலுவில் போய் அவரை நிறுத்திப் பேசினேன். எல்லாம் குறும்புதான் வேறென்ன?
'என்ன இப்படி எல்லாம் செய்தி வெளி வருகிறதே?' என்று கேட்டேன்.
உடனே அவர் 'இல்லை அவருடைய மகிமையைக் கண்டு பொறாமை கொண்டுள்ள சிலர் கிளப்பி விட்டிருக்கும் புரளி இதெல்லாம். அவருடைய சக்தியால் இதையெல்லாம் முறியடித்து விடுவார் பாருங்கள்' என்றார்.
தினமும் அவருடைய காரில் இந்த சாமியாரின் பெருமை பாடும் பஜனைகளை அலற விட்டுக் கொண்டுதான் காரைக் கழுவுவார். பிறகு தன கார் கண்ணாடியில் அவருடைய படம் ஒன்றை எல்லோருக்கும் தெரியும்படியாக வைத்துக் கொண்டு இந்தப் பாடல்களைப் போட்டுக் கொண்டு ஓட்டலுக்குச் சென்று காலை உணவருந்தி வருவார். இந்த வீடியோ எல்லாம் நிஜம் என்று போலீஸ் தரப்பில் நிரூபித்த பின்பும் இவர் அவரை மகான் பதவியிலிருந்து விலக்குவதாக் இல்லை.
அந்த சாமியாரே தான் மகான் இல்லை என்று சத்தியம் செய்தாலும் இவர் ஒப்புக் கொள்ள மாட்டார் போலிருக்கிறது.

இதுதான் சிலருடைய பிரச்சினை. அல்லது இது ஒரு விதமான மனோரீதியான கோளாறாகவும் இருக்கலாமோ என்னமோ. ஒரு விஷயத்தில் நம்பிக்கை வைத்து விட்டு அது தப்பு என்று தெளிவாக நிரூபணம் ஆன பின்பும் அதை விட்டு வெளிவர முடியாமல் இருப்பது. சிலருக்கு வாழ்வில் பிடிப்பு இது போன்ற ஏதேனும் ஒரு நம்பிக்கையின் மூலம்தான் கிடைக்கிறது போலிருக்கிறது. அதனால்தான் காவி உடை தரித்தவர்களுக்கு இத்தனை செல்வாக்கோ? ஒரு சிநேகிதி சொல்கிறாள்: 'நமக்கு சரியான மார்க்கத்தைக் காட்டுவதற்கு ஒரு குரு தேவை. நாம் அதற்குத் தயாராக இருக்கும் போது நம்முடைய சரியான குரு நம் முன் தோன்றுவார்' என்று.
எனக்கென்னவோ இதில் எல்லாம் நம்பிக்கை வரவில்லை. கடவுளுக்கும் நமக்கும் நடுவே இது போன்ற புரோக்கர், ஏஜென்ட் எல்லாம் தேவையா என்ன?