Tuesday, June 15, 2010

வடிவு

சில நாட்களில் நம் கடந்த காலத்திலிருந்து ஒரு சம்பவமோ அல்லது ஒரு நபரைப் பற்றிய நினைவோ திரும்பத் திரும்ப மனக்கண்ணில் வந்து போகும். சில சமயம் அதற்கான காரணம் நமக்குத் தெரியும் - ஒரு பாடலின் வரிகளோ அல்லது அவர்களின் பெயரைக் கேட்பதோ இதற்கான தூண்டுதலாக இருக்கும். சில சமயம் காரணமே தெரியாமல் இந்த flash backs மனதில் வந்து போகும். அது போலத்தான் இன்று காலையிலிருந்து எனக்கு வடிவைப் பற்றிய ஞாபகம்.

எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும்போது என்னுடைய அப்பா சொந்த வீடு வாங்கினார். நான் கல்யாணம் ஆகி செல்லும் வரை அந்த வீடுதான் என்னுடைய வாழ்கையின் background setting. இதற்கு முன்பு நாங்கள் வாடகைக்கு இருந்த வீடு கொஞ்சம் பக்கமாகவே இருந்ததினால் முதல் சில நாட்கள் பழைய நண்பர்களுடன் விளையாட அங்கேயே போய் விடுவேன். அடுத்த சில நாட்களில் புது வீட்டுக்குப் பக்கத்திலும் நண்பர்கள் பழக்கமானார்கள். இங்கே எனக்கு முதலாக பரிச்சயம் ஆனது வடிவுதான். வடிவு என்னை விட ஓரிரண்டு வயது பெரியவள் ஆனாலும் பார்ப்பதற்கு என்னை விட சின்னவள்போல் இருக்கும். அவர்களுக்கு எங்கள் தெருவிலேயே ரெண்டு பெரிய வீடுகள் உண்டு. ஒன்று எங்களுக்கு நேர் எதிர் வீடு. இன்னொன்று அதிலிருந்து ரெண்டாவது வீடு. இதில்தான் அவர்கள் இருந்தார்கள். எங்கள் வீட்டுக்கு எதிர் வீடு காலி ஆக இருந்தது. அதில் ஓரு பெரிய தோட்டம். வீடும் பெரிது. அதனால் இதுதான் எங்களது விளையாட்டு மைதானம். எங்கள் தெருவிலேயே பள்ளிக்கு போகும் வயதில் பத்து அல்லது பதினைந்து பேர் இருந்தோம். அடுத்த தெருவில் இருந்தும் சிலர் கிரிக்கெட் ஆடுவதற்கு வருவார்கள்.

ஓரு நாள் என் வீட்டு வாசலில் கதவைப் பிடித்துக்கொண்டு அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்த போதுதான் அந்தப் பெண்ணை கவனித்தேன். என் வயதுதான் இருக்கும், எந்த விளையாட்டிலும் சேர்ந்து கொள்ளாமல் அவர்கள் வீட்டுச் சுவரின் உட்புறமாக இருந்த திண்ணை மேல் நடந்து கொண்டு அவளும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் இந்த நாடகம் நடந்த பின் அங்கிருந்தே "உன் பெயர் என்ன?' என்றாள். இதற்குத்தானே நானும் காத்துக்கொண்டிருந்தேன் . அடுத்த ரெண்டாவது நிமிடம் நானும் அவளோடு அந்த திண்ணை மேல். அவள்தான் வடிவு. இந்த பெயரே எனக்குப் புதிதாக இருந்தது. இது வரை இது போன்ற பெயரையே நான் கேட்டதில்லை. அவள் Holy angels' convent இல் ஐந்தாவது படிக்கிறாள் என்றும் தெரிந்து கொண்டேன். என்னை விட பெரியவள் ஆனாலும் என்னை விட ஒல்லியாக இருந்தாள் . மற்றவர்களுடன் விளையாடலாமா என்றேன். 'இல்லை எனக்கு ஓடினால் மயக்கம் வரும். மூச்சு வாங்கும். அதனால் நான் இந்த விளையாட்டெல்லாம் விளையாட மாட்டேன்' என்றாள். எனக்குப் புரியவே இல்லை. நானோ மரம் ஏறுவது, சுவர் ஏறி குதிப்பது, பம்பரம் ஆடுவது என்று எல்லாம் ஆடுவேன். ஏன் இவள் இப்படி சொல்கிறாள் என்று அம்மாவிடம் வந்து கேட்டேன். அம்மா சொன்னாள்: பெண் பிள்ளைகள் பொதுவாக இது போன்ற விளையாட்டிலெல்லாம் சேர்ந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் வீட்டில் அது போல வளர்க்கிறார்கள் போல என்று. அத்தோடு நிறுத்தாமல் என்னையும் திட்டினாள்: 'நீதான் இப்படி ஆண் பிள்ளைகளுக்கு சமமாக குதிக்கிறாய்' என்று.
அடுத்த சில நாட்களில் அவளை தினமும் பார்ப்பது வழக்கமானது. சில சமயம் நான் மற்றவர்களுடன் ஆடப் போய் விடுவேன். இவள் திண்ணையில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பாள். சில சமயம் இவளுடன் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிப்பேன். வடிவுக்கு மூன்று அக்காமார் ஒரு அண்ணன். அக்கா எல்லாம் வீட்டுக்கு வெளியே கூட வர மாட்டார்கள். காலேஜ் போகும்போதும் குனிந்த தலை நிமிராமல் போய் வருவார்கள். இடுப்பு வரை ரவிக்கை, சேலையின் ஒற்றைத் தலைப்பை சுற்றி இடுப்பில் சொருகி இருப்பார்கள். கையும் பாதமும் மாத்திரம்தான் தெரியும். அவ்வளவு அடக்கம். ஏன் வடிவு விளையாடுவதில்லை என்றபோது அம்மா சொன்னது சரிதான் என்று நினைத்துக் கொள்வேன். அவளுடைய அம்மா முகம் முழுதும் மஞ்சள் பூசி இருப்பார்கள். காலையில் வெகு நேரம் பூஜை அறையில் இருப்பார்கள். அண்ணன் பழனி வடிவை விட ரெண்டு வயது பெரியவன். எங்களுடன் விளையாட வருவான். அவனுடைய பெற்றோர் கூட அவனை "தம்பி' என்றுதான் கூப்பிடுவார்கள். அவளுடைய அப்பா என்னிடம் மிகப் பிரியமாகப் பேசுவார்.

சில மாதங்களிலேயே அவளை என்னுடைய Best friend என்னும் அளவுக்கு நெருங்கிப் பழகி விட்டோம். யாரையும் பற்றிக் குற்றம் சொல்ல மாட்டாள். யாருடனும் சண்டை போட மாட்டாள். யாரும் அவளை எதுவும் சொல்ல மாட்டார்கள். இதற்கு முன்னாள் இருந்த தெருவில் கான்வென்ட் ஸ்கூல் போகும் பெண்களிடம் ஒரு superior attitude இருப்பதாகத் தோன்றும். இங்கிலீஷ் பேசத் தெரியாதவர்களைப் பற்றி ஒரு மட்டமான நினைப்பு. தாங்கள் என்னமோ ஓட்டைக் கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இங்கே வந்தவர்கள் போல. அனால் வடிவிடம் அதெல்லாம் ஒன்றுமே கிடையாது. மொத்தத்தில் ரொம்ப செல்லமான பெண்.

ஒரு ஆறு மாதம் ஆனா பின் அவளைப் பார்ப்பது அரிதானது. எப்போவாவதுதான் விளையாட வருவாள். எதிர் வீட்டையும் அவர்கள் ஓரு government ஆபீசுக்கு வாடகைக்குக் கொடுத்து விட்டார்கள். அவள் வீட்டுக்குப் போனால் 'அவளுக்கு உடம்பு சுகம் இல்லை. நாளைக்கு விளையாடலாம்' என்று அவளுடைய அக்கா அல்லது அப்பா சொல்லி விடுவார்கள். இப்படி சில நாட்கள் போன பின் ஒரு நாள் காலை வடிவு இறந்து போய் விட்டாள் என்று சொன்னார்கள். எனக்குப் புரியவே இல்லை. இது எப்படி சாத்தியம். வயதான்வர்கள்தானே இறந்து போவார்கள். அந்த வயதில் எனக்குத் தெரிந்து சிறியவர்கள் யாருமே இறந்து போனதில்லை. அவள் எப்படி இறந்து போனாள் என்று அம்மாவிடம் கேட்டேன் . 'ஏதானும் வியாதியாக இருக்கும்" என்றாள். எனக்கு வியாதி என்றால் என்ன அதனால் ஏன் இறந்து போக வேண்டும் என்றும் புரியவில்லை. மேலே கேட்டால் திட்டுவாளோ என்று பயம்.

சில சாயங்கால வேளைகளில் வடிவை பார்க்க வேண்டும் என்று தோன்றும். இனிமேல் பார்க்கவே முடியாது என்று நினைக்கும் போது அழுகையாக வரும். சாதல் என்பதைப் பற்றி நான் முதலில் தெரிந்து கொண்டது வடிவின் இறப்பிலிருந்துதான். அதனாலா இல்லை வடிவின் நல்ல குணங்கள் காரணமா தெரியவில்லை - அவளை நான் மறக்கவே இல்லை. இன்றும் கண்ணை மூடினால் ஒல்லியான அந்தச் சின்னப்பெண் என் கண் முன்னே தெரிகிறாள். வெகு நாட்கள் வரை வடிவு என்றால் ஒரு சோகமான உணர்வுதான் வரும். சில வருடங்கள் முன்னால் இலங்கை சென்ற போதுதான் தெரிந்து கொண்டேன் வடிவு என்றால் அழகு என்று அர்த்தம் என்று.

2 comments:

  1. Ungallin indha post en manadhai migavum pizhindhadhu. Ippadi oru ending irukkum endru edhirpaarkkavillai....

    ReplyDelete
  2. Nanri Aargee. Aarumaadamdaan avalai enakkuth theryum aduvum 40 varudangalukku munbu. Inrum avvapodhu avalai ninaithuk kolven.

    ReplyDelete