Friday, June 18, 2010

சினிமா படுத்தும் பாடு

நான் சின்னவளாக இருந்தப்போ சினிமாவுக்குப் போவது என்பது வருடத்தில் என்றைக்கோ ஒரு நாள் நடக்கும் விஷயம். டிக்கெட் விலை 60 பைசாவிலிருந்து 2:50 ருபாய் வரைக்கும்தான் என்றாலும் எல்லா படங்களுக்கும் போக முடியாது. மொதல்லே 2:50 ரூபாய் என்பதே பெரிய தொகை. பத்து இட்லி ஒரு ரூபாய்க்குக் கிடைத்த காலம் அது - ஒரு கூஜா சாம்பாரும் சட்னியும் சேர்த்து. 4 பேர்ஒரு படம் பார்க்க 10 ருபாய். செலவு அதிகம் என்பது ஒரு பக்கம். தவிர படங்கள் பார்த்து சின்னவர்கள் எல்லாம் கெட்டுப் போகக் கூடாது என்பதிலும் வீட்டுப் பெரியவர்களுக்குக் கவலை. ( அவர்கள் பாஷையிலே சொல்லவேண்டுமென்றால் 'சினிமா பாத்து காதல் கீதல்னு கெட்டுப்போயிட்டாக்க?' அவர்களைப் பொறுத்த வரையில் காதல் என்பது ரொம்ப கெட்ட விஷயம்.)
அதனாலே எதாவது ஒரு படம் உயர்வாக பேசப்பட்டாலோ அல்லது சரித்திரம் அல்லது புராணம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலோ அனுமதி கிடைக்கும். யாராவது பெரியவர்கள் அழைத்துக்கொண்டு போவார்கள். இன்டர்வலில் Popcorn ஐஸ் கிரீம் இதெல்லாம் கிடையாது. சில தியேட்டர்களில் காபி, டீ , கூல் ட்ரிங்க்ஸ், பிஸ்கட் கிடைக்கும் . ஆனால் அதெல்லாம் வாங்க மாட்டார்கள். 'வெளியில் கண்டதையும் சாப்பிட்டால் உடம்பு கெட்டுபோகும்' என்று சொல்லி விடுவார்கள். சில சமயம் வீட்டிலிருந்தே ஏதேனும் தின்பதற்கு பாக் செய்து கொண்டு போவது உண்டு. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது என்பதால் குள்ளமாக சின்னவராக இருக்கும் சிறுவர் சிறுமியரை 5 வயது என்று சொல்லச் சொல்வார்கள். 'எங்க வீட்டு பிள்ளை' படம் வந்த போது எனக்கு 7 வயது . சிதம்பரத்தில் ஒரு கல்யாணத்துக்கு அப்பா அழைத்துச் சென்றிருந்தார். கல்யாணத்துக்கு வந்திருந்த வாலிபக் கூட்டம் நைட் ஷோ படம் பார்க்க தீர்மானித்து என்னையும் அழைத்துச் சென்றது. நான் குள்ளமாக இருந்ததால் எனக்கு 5 வயது என்று சொல்லி விட்டார்கள். எனக்கோ பாதியில் யாரானும் வந்து வெளியே போக சொல்லி விடுவார்களோ எனறு பயம். நல்ல வேளை அதெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை.

முதலிலேயே ரிசர்வ் செய்வது போன்று மெனக்கிடும் வேலை எல்லாம் கிடையாது. படம் கொஞ்சம் பழசானதும் கூட்டம் குறைவாக இருக்கும். அப்போது காட்சி நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகச் சென்று queue விலே நின்று டிக்கெட் வாங்குவோம். அநேகமாக கிடைத்து விடும். சில சமயம் திரைக்கு ரொம்ப பக்கமாக இருக்கும். அவ்வளவுதான்.
அப்போதெல்லாம் black டிக்கெட் என்றுஒன்று உண்டு. ஒவ்வொரு ஆட்டத்துக்கு (ஆட்டம்னா ஷோ) முன்பும் queue வில் நின்று இத்தனை டிக்கெட் வாங்கிவிடுவார்கள். அப்புறம் அவற்றை டிக்கெட் கௌண்டர் மூடியானதும் அதிக விலைக்கு விற்பார்கள். சில பேருக்கு இதே தொழில். இதில் பேரம் எல்லாம் நடக்கும். இரண்டரை ருபாய் டிக்கெட்சில சமயம் பத்து ருபாய் வரைக்கும் போகும். அதுவும் படம் வெளிவந்த முதல்நாள் என்றால் கேட்கவே வேண்டாம். அவ்வளவு கலை ஆர்வம் உள்ள மக்களும் உண்டு. இந்த மாதிரி எல்லாம் வாங்கும் அளவுக்கும் எங்களுக்கெல்லாம் ஆர்வமும் இல்லை, பணமும் இல்லை.

பத்தாவது வகுப்பு வந்த பின் ஸ்கூல் கடைசி நாள் அன்று வகுப்பு தோழிகளுடன் சேர்ந்து ஒரு படம் போகும் வழக்கம் ஆரம்பித்தது. இது ஒரு பெரிய பிக்னிக் மாதிரி எங்களுக்கு. அப்போது மாத்திரம் ஒரு நாள் முன்னதாகவே போய் வேண்டுமான எண்ணிக்கையில் டிக்கெட் வாங்கிவிடுவோம். அப்புறம் எல்லோரும் ஸ்கூலில் கூடி அங்கிருந்து ஒன்றாக 12 b பஸ்ஸில் கமலா தியேட்டர் போனது , பஸ்ஸில் ஜோக் அடித்து சிரித்துக் கொண்டே பயணம் செய்தது இதெல்லாம் வாழ்கையில் மறக்க முடியாத நாட்கள். இது காலேஜ் முடியும் வரையும் தொடர்ந்தது.

அப்புறம் கல்யாணம் ஆகி பெங்களூருக்கு வந்தபின் திரும்பவும் சினிமா பார்ப்பது அபூர்வமாகிப் போனது. எனக்கோ கருத்துள்ள படங்களுக்குப் போய் கண்ணீர் விட்டால்தான் கொடுத்த காசுக்கான மதிப்பு கிடைத்தது என்ற அபிப்ராயம். கணவருக்கோ சண்டை, action , james Bond மாதிரி படங்கள் பார்க்கத்தான் பிடிக்கும். எனவே குடும்பத்தில் கலவரம் வேண்டாம் என்று படம் போவதையே நிறுத்தி விட்டோம். தொலைக்காட்சியும் வந்து விட்டது. பையனுக்கும் கிரிக்கெட்டில் மாத்திரம்தான் ஆர்வம். தாத்தாவும் பேரனும் தொலைகாட்சியில் கிரிக்கெட் பார்பார்கள். எனக்குத் தாலி கட்டிய மனிதர் செய்திகள் பார்த்து புல்லரித்துப் போவார். நான் சனி ஞாயிறில் மதியம் வரும் award winning படங்களைப் பார்த்துக் கண்ணீர் விடுவேன். இந்த காலகட்டத்தில் தியேட்டருக்கு போய் சினிமா பார்க்கும் அளவு ஆர்வம் இல்லை.

இப்போது இந்த multiplex எல்லாம் வந்தபிறகு திரும்பவும் தியேட்டரில் சினிமா பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். வழக்கமாய் படம் எல்லாம் வந்து 3 வாரம் ஆன பின், பேப்பர், blog எல்லாவற்றிலும் விமர்சனம் எல்லாம் படித்து, ஏற்கனவே பார்த்தவர்களின் அபிப்ராயத்தையும் கேட்டு அப்புறம் சாவகாசமாய் ஏதாவதொரு காலை ஆட்டத்துக்கு தோழிகளுடன் போய் வருவேன். அனால் இந்த Raavan கதை சற்று வித்தியாசம் ஆனது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தை பற்றிய செய்திகளை படித்ததில் இதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. போதாததற்கு இளம் நண்பன் ஒருவன் (பிரவீன் - கையை தூக்கு! இதோ இவன்தான்) இந்த படத்தின் பாடல்கள், செய்திகள் என்று ஈ மெயிலில் அனுப்பி கடந்த ஒரு மாதமாய் எதிர்பார்ப்பை அதிகரிக்கப்போக தமிழ், ஹிந்தி இரண்டு வடிவங்களையும் பார்க்க வேண்டும் என்று மாட்டுப்பெண்ணும் நானும் தீர்மானித்தோம். இதற்கு நடுவே கர்நாடகத்தில் படத்தை வெளியிடப் போவதில்லை என்று முதலிலும், பிறகு சில அரங்கங்களில் மாத்திரம்தான் இந்த படத்தை வெளியிடுகிறார்கள் என்றும் வரிசையாக செய்திகள். இன்று காலை வரை எந்தெந்த தியேட்டர்களில் படம் வெளி ஆகிறது என்று சரியாகத் தெரியவில்லை.

நானும் காலையிலிருந்து இன்டர்நெட் மூலமாய் டிக்கெட் புக் செய்யலாம் என்று பார்த்தால் வெளிவரப்போவதாகச் சொன்ன இரண்டு தியேட்டர்களிலும் இந்த படத்துக்கான காட்சிகளைப் பற்றிய விவரமே இல்லை. பத்து மணி வாக்கில் PVR இல் GOLD கிளாஸ் இல் ஷோ உண்டு டிக்கெட் ஆயிரம் ருபாய் என்று காண்பித்தது. நொந்து போய் விட்டேன். 'சரி இந்த வாரம் நாம் இதை பார்க்கப் போவதில்லை அகிலாவிடம் சொல்லி விடலாம்' என்று தீர்மானித்தேன். பாவம் பிரவீன் வேறே எங்களோடு போகிறேன் என்று சொல்லி இன்றைக்குப் போகாமல் உட்கார்ந்துகொண்டிருந்தான். 'சரி இந்தபடம் நமக்கு பொசிப்பு இல்லை. பின்னால் எப்போவாவது 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' என்று தீர்மானித்தேன். 'சீ சீ இந்த பழம் புளிக்கும்' என்பது போல சில விமர்சனங்களில் படம் அவ்வளவு ஒண்ணும் பிரமாதமாய் இல்லை என்பதையும் பார்த்து ஆறுதல் சொல்லிக் கொண்டேன்.

அப்புறம் மெதுவாய் 1 மணி வாக்கில் திரும்ப தியேட்டர் website போனால் நாளை advance booking க்கான வாசல் திறந்தது. சரி டிக்கெட் இருக்கா பாப்போம் என்று போனால் மொத்த ஹாலும் காலி. இன்னும் யாருமே புக் பண்ணலை. 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்பார்களே அது சரிதான் என்று நினைத்துக் கொண்டு டிக்கெட் புக் செய்ய ஆரம்பித்தேன். என் பேரு, கோத்ரம் எல்லாம் கேட்டு விட்டு ' எத்தனை டிக்கெட் வேணும்?' என்று கேட்டது. பிறகு 'சீட் தேர்வு செய்து கொள்ளவும்' என்று சொல்லி அனுமதி கொடுத்ததா, எனக்கு மொத்த ஹாலையும் காலியாகப் பார்த்ததில் சந்தோஷம் கரைகொள்ளவில்லை. கடைசிவரிசை என்று நினைத்துக் கொண்டு N வரிசையில் 3 நல்ல சீட் தேர்வு செய்தேன். பணம் எல்லாம் செலுத்தி விட்டு வெளியே வந்து படு குஷி ஆக அகிலாவுக்கும் பிரவீனுக்கும் மெயில் மெசேஜ் எல்லாம் போட்டு விட்டு படுத்தேன். பாதி தூக்கத்திலே ஏதோ நினைவு வந்தது. ராஜநீதி போனப்போ கடைசீலேர்ந்து ரெண்டாவது வரிசையில் பார்த்தோமே அது B Row இல்லையோ? அப்போ N எப்படி கடைசீயாக இருக்கமுடியும் என்று. ஆரம்பித்தது திரும்பவும் மனதிலே குடைச்சல். திரும்ப கம்ப்யூட்டர்,திரும்ப தியட்டர் வெப்சைட். போய் பார்த்தால் பெரிசா சிவப்பு கலர் லே ஸ்க்ரீன் அப்டீன்னு பட்டன் இருந்தது. அதுக்கு முதல் Row N Row! முதலில் புக் செய்த போது இது என் கண்ணில் படவே இல்லை - சத்தியமா சொல்றேன். போதுமா என் சமத்து? தேடித் தேடி முதல் Row அதுவும் ஒரு டிக்கெட் 275 ருபாய் குடுத்து! வாழ்க்கை வெறுத்துப் போச்சு.

அப்புறம் என்ன ஆச்சு என்று கேக்கறீங்களா ? இன்னும் 3 டிக்கெட் புக் பண்ணிட்டு மொதல் மூணையும் நாளைக்கு தியேட்டர்லே யாருக்காவது விக்கலாம்னு தீர்மானம் பண்ணினோம். அப்போதான் அந்த பழைய காலத்து black டிக்கெட் சமாசாரம் எல்லாம் நெனவுக்கு வந்துது. சந்தர்ப்பவசத்திலே தொழிலே மாறிப் போச்சு பார்த்தீர்களா, எல்லாம் நேரம்தான்.

Latest update: யாரோ friends கிட்டே கேட்டார்களாம் அகிலாவும் பிரவீனும். முதல் Row வானாலும் பரவா இல்லை வாங்கிக்கறோம் என்றார்களாம் அந்த அப்பாவிகள்.
எந்தரோ மகானுபாவுலு வால் அந்தரிக்கு நா வந்தனகளு.


அப்புறம் இன்னொரு சமாசாரம்:
Gold classலே டிக்கெட் விலை 1000 ருபாய் என்று விற்கிறார்களே - அவ்வளவு பணம் குடுத்து யாரேனும் ஒரு படத்தை போய் பார்ப்பார்களோ?
வேண்டுமானால் இந்த தலைப்பில் ஒரு பட்டி மன்றம் வைக்கலாமே முனைவர்
ஞானசம்பந்தம் தலைமையிலே:
"ஆயிரம் ருபாய் கொடுத்து படம் பார்ப்பதற்குக் காரணம் அளவு கடந்த சினிமா ஆர்வமா அல்லது தாங்க முடியாத பணப்புழக்கமா?" என்று.
என்ன சொல்றீங்க?

5 comments:

  1. உஷா! பிரமாதமா இருக்கு உங்க தமிழ் போஸ்ட்ஸ். ராவண்/ ராவணன் எப்படி இருந்தது? விமர்சனம் எப்ப?

    கண்டிப்பா பணப்புழக்கம் தான்! இதுல என்ன சந்தேகம்? இப்ப வர்ற படத்துக்கெல்லாம் அரையணாவே ஜாஸ்தி இதுல ஆயிரம் ரூபாய் டூ மச்!! :)

    ReplyDelete
  2. Gold class ticket vechundu padam pakkarava thaan Bangalore la Jastiya irukka

    Raavan/Raavanan eppadi ?

    Aayirum roobai kudutha Aboorva sigamanigalukku mattuma ?

    Illa "Seethaikku Raaman Chittappa" kadhaya ?

    ReplyDelete
  3. Tamizh blogging and all! Semmaya kalakkarel!

    Varuga Varuga! Padam paarthuttu sollungo eppadi irundadunnu

    yabba ! am tired of putting English comments (Grammar seriya irukka? Spelling seriya irukka? nnu ekka chekka checks)... [English phonetics la] Tamizh la ezhudaradeee oru tani sugam.

    ReplyDelete
  4. Boo: Thanksma. When I was thinking aloud about starting a Tamil Blog, Praveen sent me a link to your (now inactive) tamil blog. I enjoyed reading it. Einamma niruthivittai? ( un blogai padikka ododi vandha ennai ematrividadhe boo!)

    Adhile you had mentioned oru paati paatu ninaivirukka?
    Varagadukkaradhum
    avaa vandu nikaradum
    Sukkan Kutharadhum
    soru kodhikkaradhum
    Pillai azhuguradhum
    Nee pesadhengaradhum
    Vaa engiradhum
    Naan valle po engaradhum
    Po engaradhum
    avaa mallukkku nikkaradhum.

    I remember this from my Grandmom who is also from Kumbakonam. Wanted to post this there but somehow slipped. So here!

    ReplyDelete
  5. PV: Raavan pathiya ennoda reactions pathi oru post ezhudhi irukken.

    Gold Classle nejammave manusha porala. Panakkozhuppudhaan!

    Blogeswari: nanri, nanri. Please sell pins for me - adhavadhu OOKU vikkavum! hehehe...
    aamam tamizhil ezhudhuvadhu oru sugamdhaan. apram indha capitalization pathi ellam kavalai illai. anaa sila samayam google abathama tgranslitereate pannuvadhaip paarthaldhan thalayile adithukkolla thonugirathu.

    ReplyDelete